under review

வேதாந்தம்

From Tamil Wiki
Revision as of 18:47, 16 April 2024 by Madhusaml (talk | contribs) (Finalised)

வேதாந்தம் : இந்திய தத்துவசிந்தனை மரபில் மையமான ஞானக்கொள்கைகளில் ஒன்று. இந்து மெய்ஞான மரபின் மையத்தரிசனம். பிரம்மவாதம் என்றும் அழைக்கப்படுகிறது. அறிதலுக்கு அப்பாற்பட்ட ஒன்றான பிரம்மம் மட்டுமே உண்மை, பிறிதெல்லாமே மாயை என்பது வேதாந்தத்தின் கொள்கை. இது ரிக்வேதத்தில் உருவாகி உபநிடதங்கள் வழியாக திரண்டு பாதராயணரின் பிரம்ம சூத்திரம் வழியாக வரையறை செய்யப்பட்டது. பகவத் கீதை இதன் முதன்மை நூல். வேதாந்தத்தின் பிற்கால வடிவங்கள் அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம், துவைதாத்வைதம், சுத்தாத்வைதம் முதலியவை. வேதாந்தம் நவீனகாலகட்டத்தில் மானுடவிடுதலை, ஜனநாயகக்கொள்கைகளுடன் உரையாடி நவவேதாந்தமாக உருமாறியது.

கலைச்சொல்

வேதாந்தம் என்னும் கலைச்சொல் வேத+அந்தம் என்று பிரிக்கப்படத்தக்கது. வேதங்களின் முடிவு, வேதங்களின் அறுதி என்னும் பொருளில் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. இப்பெயர் தொல்காலம் முதலே புழக்கத்திலுள்ளது. இப்பெயர் அமைந்தமைக்கு மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன

  • ரிக்வேதத்தின் இறுதியாகிய பத்தாவது காண்டத்தில் பேசப்பட்டுள்ள பிரம்மதரிசனத்தின் தத்துவார்த்தமான விரிவாக்கமே வேதாந்தம். ஆகவே இப்பெயர் அமைந்தது
  • வேதங்கள் சொல்லும் மெய்ஞானத்தின் உச்சப்புள்ளி பிரம்மவாதமே. அதை பேசுவதனால் இப்பெயர் அமைந்தது
  • வேதம்பயிலும் மாணவன் தன் கல்விநிறைவிற்காக இறுதியாகக் கற்கவேண்டியது பிரம்மவாதம், ஆகவே இப்பெயர் அமைந்தது

தத்துவ மரபில் இடம்

இந்திய சிந்தனை மரபில் ஆறு தரிசனங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் வேதங்களை முதல்நூல்களாகக் கொண்டவை மீமாம்சம் எனப்படுகின்றன. வேதங்களின் கர்மகாண்டம் எனப்படும் சடங்குசார்ந்த பகுதிக்கு முதன்மை அளிக்கும் தரிசனம் பூர்வமீமாம்சம் எனப்படுகின்றது. வேதங்களின் ஞானகாண்டம் எனப்படும் தத்துவப்பகுதிக்கு முதன்மை அளிக்கும் தரிசனம் உத்தர மீமாம்சம் எனப்படுகிறது. ஆறாவது தரிசனமாகிய உத்தர மீமாம்சமே வேதாந்தம் ஆகும்.

நூல்கள்

வேதாந்தத்தின் நூல்கள் மூன்று தத்துவ மரபுகள் (வேதாந்தம்) எனப்படுகின்றன. இவை உபநிடதங்கள், பிரம்மசூத்திரம், பகவத்கீதை. வேதங்களில் உள்ள பிரம்மதரிசனம் ஆரண்யகங்கள் வழியாக விரிவாக்கம் செய்யப்பட்டது. உபநிடதங்களில் அது முழுமை அடைந்தது. பாதராயணர் எழுதிய பிரம்மசூத்திரம் வேதாந்தத்தை தத்துவார்த்தமாக வரையறை செய்தது. பிற இந்திய தத்துவமரபுகள் மற்றும் ஞானமரபுகளுடன் இணைத்து வேதாந்தத்தை விரிவாக்கம் செய்தது பகவத்கீதை.

இம்மூன்று நூல்கள் தவிர பிற்காலத்தையவையான அஷ்டவக்ர கீதை, யோக வாசிஷ்டம், கௌடபாதர் இயற்றிய மாண்டுக்ய காரிகை போன்ற நூல்களும் முக்கியமானவையாக கருதப்படுகின்றன.

தத்துவம்

வேதாந்தம் பிரம்மம் என்னும் முழுமுதற்பொருளை ஒரே மெய்யாக முன்வைக்கிறது. பிரமமே அனைத்தும். பிரபஞ்சம் என்பது உயிர்கள் கொள்ளும் மாயத்தோற்றம் மட்டுமே. உயிர்களுக்குள் இருக்கும் ஆத்மா அல்லது ஜீவாத்மா தன்னை ஒரு தனித்த இருப்பாக எண்ணி மயங்குகிறது. பிரபஞ்சம் என்பதை தன்னைச்சுற்றி கற்பிதம் செய்துகொள்கிறது. ஆனால் ஜீவாத்மா என்பதும் பிரம்மத்தின் ஒரு வடிவமே. பிரம்மமே அனைத்து ஆத்மாக்களுமாகி நிற்பது என்பதனால் அது பரமாத்மா எனப்படுகிறது.

தொடக்கம்

வேதாந்த தத்துவத்தின் தொடக்கம் ரிக் வேதத்தில் உள்ளது. ரிக்வேதம் பல்வேறு இறையுருவகங்களை முன்வைக்கிறது. அந்த தெய்வங்களே இங்குள்ள அனைத்துமாகி நின்றுள்ளன என்று பல பாடல்களில் கூறுகிறது. பின்னர் எல்லா தெய்வங்களும் ஒன்றே என்று கூறுகிறது. படிப்படியாக பிரம்மம் என்னும் தரிசனத்தை வந்தடைகிறது. இங்குள்ள எல்லாம் பிரம்மமே என்ற உணர்வை முன்வைக்கிறது. அறியமுடியாத, விளக்கமுடியாத, எல்லாவகை வரையறைகளுக்கும் அப்பாற்பட்டதான பிரம்மமே பிரபஞ்சமாகவும் காலமாகவும் தோற்றமளிக்கிறது என்ற தரிசனத்தை முன்வைக்கிறது. ரிக்வேதத்தின் சிருஷ்டிகீதம் இத்தரிசனத்தை மிகுந்த கவித்துவத்துடன் முன்வைக்கிறது. அப்பாடலே பிரம்ம தரிசனம் மிகமுழுமையாக முன்வைக்கப்பட்ட தொடக்கம் எனப்படுகிறது. ஆனால் பிரம்மம் என்பதை அறியமுடியாத ஒன்றாக, ஒரு பெரும் புதிராகவும் வியப்பாகவுமே சிருஷ்டிகீதம் முன்வைக்கிறது.

முதிர்வு

ரிக்வேதத்தில் இருந்த பிரம்மதரிசனம் வேதங்களின் தத்துவார்த்தமான விவாதக்களமான ஆரண்யகங்களில் வளர்ச்சி அடைந்தது. உபநிடதகளில் கவித்துவமாக அது விரிவாக்கப்பட்டது.

உபநிடதங்கள்

உபநிடதங்கள் அனைத்துமே பிரம்மவாதத்தை கவித்துவமான உரையாடல்களாகவும், விவாதங்களாகவும் முன்வைப்பவை. உபநிடதங்கள் வெவ்வேறு கோணங்களில் பிரம்மத்தை விளக்கும் வரிகளைக் கொண்டவை. இந்தக் கூற்றுகள் மகாவாக்கியங்கள் எனப்படுகின்றன

  • இவையனைத்திலும் இறை உறைகிறது (ஈஸோவாஸ்யம் இதம் சர்வம்) - ஈஸோவாஸ்ய உபநிடதம்
  • பிரக்ஞையே பிரம்மம் (பிரக்ஞானம் பிரம்ம:) - ஐதரேய உபநிடதம்
  • அது நீதான் (தத்துவமஸி) - சாந்தோக்ய உபநிடதம்
  • இந்த ஆத்மாவே பிரம்மம் (அயம் ஆத்ம பிரம்ம:) மாண்டூக்ய உபநிடதம்
  • நானே பிரம்மம் (அஹம் பிரம்மாஸ்மி) பிருஹதாரண்யக உபநிடதம்
பிரம்மசூத்திரம்

பாதராயணர் உத்தரமீமாம்சை என்னும் வேதாந்தத்தின் தத்துவ ஆசிரியர். உபநிடதங்களில் திரண்டுவந்த பிரம்மவாதத்தை தன்னுடைய பிரம்மசூத்திரம் என்னும் இலக்கணநூலில் சுருக்கமான சூத்திரங்களாக வகுத்துரைத்தார். அந்நூலே வேதாந்தத்தின் முதன்மை இலக்கணநூலாக கொள்ளப்படுகிறது.

கீதை

பகவத்கீதை பிரம்மவாதத்தை வெவ்வேறு யோகங்களாக பகுத்து 18 அத்தியாயங்களாக முன்வைக்கிறது. யோகம் என்னும் சொல்லுக்கு இணைவு என்று பொருள். கீதை பிரம்ம தரிசனத்தை செயல்தளத்திலும் (கர்ம யோகம்) அறிவுத்தளத்திலும் (ஞானயோகம்) வெவ்வேறு தியான தளங்களிலும் விரித்தெடுக்கிறது . வேதாந்தத்தின் மிகப்புகழ்பெற்ற நூலாக கீதை திகழ்ந்து வருகிறது.

வளர்ச்சி

வேதாந்தம் பிற்காலத்தில் வெவ்வேறு அறிஞர்களால் வளர்த்தெடுக்கப்பட்டது. பௌத்தம் முதலிய பிற தத்துவங்களுடன் நிகழ்ந்த உரையாடலும் அதற்கு உதவியது. வரலாற்று ஆளுமைகளாக அறியக்கிடைப்பவர்கள் கீழ்க்கண்ட தத்துவஞானிகள்

கௌடபாதர்

கௌடபாதர் (பொயு 6/7 நூற்றாண்டு கௌடபாதர் மாண்டூக்ய உபநிடதத்திற்கு எழுதிய மாண்டூக்ய காரிகை என்னும் உரை வேதாந்தத்தின் விளக்கநூல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

கோவிந்த பகவத்பாதர்

கோவிந்த பகவத்பாதர் (பொயு 6/7 நூற்றாண்டு) கோவிந்த பகவத்பாதர் கௌடபாதரின் மாணவராக இருக்கலாம் என கருதப்படுகிறது. கோவிந்த பகவத்பாதர் சங்கரரின் ஆசிரியர் என்றும், அவர் அளித்த கல்வியைக்கொண்டே சங்கரர் பிரம்மசூத்திரங்களுக்கு உரை எழுதினார் என்றும் சொல்லப்படுகிறது.

மண்டனமிஸ்ரர்

சங்கரரின் சமகாலத்தவர் எனப்படும் மண்டனமிஸ்ரர் (பொயு 7/8 ஆம் நூற்றாண்டு வேதாந்தத்திற்கு எதிரான பூர்வமீமாம்சையைச் சேர்ந்தவராக இருந்தார். பட்டமீமாம்சையை முன்வைத்த குமரில பட்டரின் மாணவர். சங்கரருடன் விவாதித்து தோல்வியடைந்து அத்வைதத்தை ஏற்றுக்கொண்டார். மண்டனமிஸ்ரரின் பிரம்ம சித்தி முக்கியமான வேதாந்த நூலாக பயிலப்பட்டது.

பிற்கால வேதாந்தங்கள்

பொயு 7 ஆம் நூற்றாண்டுக்குப்பின் பின்னர் சங்கரரின் பங்களிப்பால் வேதாந்தம் புத்துயிர் கொண்டது. சங்கரர் முன்வைத்த வேதாந்த மரபு அத்வைதம் என்ற சொல்லால் சுட்டப்பட்டது. அவருடன் விவாதித்தும், மாறுபட்டும் பல்வேறு வேதாந்த மரபுகள் உருவாயின. அவை பிற்கால வேதாந்தங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன. அவை கீழ்க்கண்டவை

நவவேதாந்தம்

மரபான வேதாந்தத்தை முன்வைத்த மடங்களும், பிற அமைப்புகளும் ஆசாரவாதம் நோக்கிச் சென்றன. மதஅமைப்புகளை நிர்வாகம் செய்வது, சடங்குகளை நிகழ்த்துவது ஆகியவற்றை முன்னெடுத்தன. விளைவாக அவை காலத்தால் தேக்கமடைந்து, சமூகத்திலுள்ள பல்வேறு சாதியாசாரங்களை தாங்களும் ஏற்றுக்கொண்டன. வேதாந்தத்தின் சாராம்சமான தூய அறிவு, ஒருமைநோக்கு ஆகியவற்றை அவை கைவிட்டுவிட்டதாக எண்ணிய பத்தொன்பதாம் நூற்றாண்டு தத்துவ ஞானியரால் நவவேதாந்தம் உருவாக்கப்பட்டது

வரலாற்று இடம்

  • வேதாந்தம் உயர்தத்துவத் தளத்தில் தூய அறிவுவாதத்தை முன்வைத்தாலும் நடைமுறைத் தளத்தில் வெவ்வேறு வழிபாட்டுமுறைகளையும் மதநம்பிக்கைகளையும் இணைக்கும் இயல்பு கொண்டிருந்தது. இந்தியாவில் மதப்போர்கள் உருவான காலகட்டத்தில் அனைத்து மதங்களுக்கும் பொதுவான தத்துவ அடிப்படையாக அது அமைந்தது. பொயு 7/8 ஆம் நூற்றாண்டில் சங்கரர் ஆறு இந்துமதப்பிரிவுகளையும் தத்துவார்த்தமாக ஒன்றிணைத்தார். அதுவே இந்து மதம் என்று இன்றுள்ள பொதுவான அமைப்பு உருவாக வழியமைத்தது. இந்து மரபுக்கு எதிராக பிற மதங்களின் தாக்குதல்களை எதிர்கொள்ள இந்த ஒருங்கிணைப்பு உதவியது
  • வேதாந்தம் தூய அறிவுவாதத்தையும், ஒருமை நோக்கையும் முன்வைத்தமையால் நடைமுறைத் தளத்தில் அது மூடநம்பிக்கை, சடங்குவாதம், ஆசாரவாதம் ஆகியவற்றை எதிர்க்கும் கொள்கையாகவும், மானுட சமத்துவத்திற்காகவும், எளியோர் மற்றும் துயர் உறுவோருக்கான சேவைக்காகப் பணியாற்றும் இலட்சியவாதமாகவும் திகழ்ந்தது. இந்து மத மறுமலர்ச்சிக்க்கும் இந்திய தேசிய எழுச்சிக்க்கும் அடிப்படையை அமைத்தது.

தத்துவ மதிப்பு

இந்திய ஞான மரபில் வேதாந்தமே முதன்மையான தத்துவக்கொள்கையாகும். அதன் மதிப்பை கீழ்க்கண்டவாறு வரையறை செய்யலாம்

  • வேதாந்தம் ரிக்வேத காலம் முதல் தொடங்கி மூவாயிரமாண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக பயிலப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வருகிறது. இந்தியாவில் அதன் தொடர்ச்சி ஒருபோதும் அறுபட்டதில்லை.
  • ஒரு தத்துவக்கொள்கையாக மட்டுமன்றி வேதாந்தம் ஒரு மெய்ஞான தரிசனமாக பலகோடிப்பேரால் பின்பற்றவும் படுகிறது.
  • வேதாந்தம் அனைத்து பிறதரிசனங்களையும் தத்துவங்களையும் எதிர்கொள்ளவும், அவற்றின் சாதகமான அம்சங்களை இணைத்துக்கொண்டு வளரவும் கூடிய அடிப்படை கொண்டது. ஆகவே பௌத்தம் ,சமணம் ஆகியவற்றுடன் அது ஆழ்ந்த தத்துவ உரையாடலை நிகழ்த்தி தன்னை முன்னகர்த்திக்கொண்டது.
  • வேதாந்தத்தின் தூயஅறிவு , ஒருமை நோக்கு ஆகிய கொள்கைகள் அதை உலகளாவிய தத்துவ தரிசனமாக விரிவாக்கம் செய்தன. இந்து மரபின் சாராம்சமாகவும் நவீனவடிவமாகவும் அது உலகமெங்கும் சென்றது.

உசாத்துணை


✅Finalised Page