standardised

வெ. இராமலிங்கம் பிள்ளை

From Tamil Wiki
Revision as of 12:29, 19 April 2022 by Tamaraikannan (talk | contribs)
இராமலிங்கம் பிள்ளை

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை (வெ. ராமலிங்கம் பிள்ளை) (அக்டோபர் 19, 1888 - ஆகஸ்ட் 24, 1972) தமிழில் தேசிய இயக்கப்பாடல்களைப் பாடிய கவிஞர். விடுதலைப் போராட்ட வீரர். நாவலாசிரியர். தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர்.

பிறப்பு, கல்வி

இராமலிங்கம் பிள்ளை கரூருக்கும் ஈரோட்டுக்கும் இடையே அமைந்துள்ள மோகனூரில் அக்டோபர் 19, 1888-ல் வெங்கட்ராமன்- அம்மணியம்மாள் தம்பதியினருக்கு பிறந்தார். இவருக்கு ஏழு மூத்த சகோதரிகள். நாமக்கல்லில் இருந்த நம்மாழ்வார் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். காவல்துறையில் தலைமைக் காவரலாகப் பணியாற்றிய தந்தை கோயம்புத்தூருக்கு பணி இடம் மாறி சென்றமையால் உயர்நிலைக் கல்வியை கோயம்புத்தூரில் தொடர்ந்தார். 1908-ல் திருச்சிராப்பள்ளியில் உள்ள எஸ்.பி.ஜி. கல்லூரியில் (பிஷப் ஹீபர் கல்லூரி) எஃப்.ஏ. (F.A.) படித்தார். இளமையிலேயே ஓவிய ஈடுபாடு இருந்தது. கல்லூரி முதல்வர் எலியட் அதை ஊக்குவித்தமையால் ஓவியத்தை முதன்மையாகக் கொண்டார்

தனிவாழ்க்கை

திருச்சி கல்லூரியில் படிக்கும்போது காதுவலி ஏற்பட்டு மருத்துவர் டி.எம்.நாயர் (நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவர்) சிகிச்சை செய்தும் கூட பலனளிக்காமல் செவித்திறனை இழந்தார். தனது அத்தை மகள் முத்தம்மாளை 1909-ஆம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டார். முறைப்பெண்ணை மணமுடிக்க இவர் விரும்பவில்லை. மணமான பின் மனைவியை புரிந்துகொண்டு காதலுற்றதை என் கதை என்னும் தன் வரலாற்றுநூலில் எழுதியிருக்கிறார்.இவரது மனைவி முத்தம்மாள் 1924-ல் காலமானார். அதைத் தொடர்ந்து அவரது இளைய சகோதரி சுந்தரத்தம்மாளை இரண்டாம் தாரமாக மணந்து கொண்டார். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன.

தந்தையின் விருப்பப்படி நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணி புரிந்தார். அப்பணி பிடிக்காமல் விலகி நாமக்கல் தொடக்க நிலைப்பள்ளியில் ஆசிரியர் பணி புரிந்தார். ஆங்கிலேயரை எதிர்த்து திலகரை ஆதரித்து தேச விடுதலை பற்றி மாணவர்களிடம்  பேசியமையால் வெளியேற நேர்ந்தது. நண்பரான ஶ்ரீநாகராஜ ஐயங்காரின் ஆலோசனையின்படி ஓவியத்தையே தொழிலாகக் கொண்டார். 1900-ல் இராமகிருஷ்ண பரமஹம்சர் படத்தை பெரிதாக வரைந்து பாராட்டைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து பொது இடங்களில் வைப்பதற்கு விவேகானந்தர், திலகர், அரவிந்த் கோஷ், லஜபதிராய் ஆகியோரின் படங்களையும் வரைந்து தந்ததால் ஓவியத்தொழிலில் வேரூன்ற முடிந்தது. 1912-ல் தமிழறிஞர் பா.வே.மாணிக்கம் நாயக்கர் அவர்களின் அழைப்பின் பேரில் தில்லிக்குச் சென்றார். அங்கு ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் ஓவியத்தை வரைந்து டெல்லியில் நடந்த அவரது முடிசூட்டு விழாவில் பரிசாக அளித்து தங்கப்பதக்கம் பெற்றார்.

இதழியல்

வெ.இராமலிங்கம் பிள்ளை பொ.திரிகூடசுந்தரம் பிள்ளையுடன் இணைந்து தமிழ் ஹரிஜன் என்னும் இதழை 1946 முதல் 1948 வரை நடத்தினார். இது காந்தி நடத்திய ஹரிஜன் இதழின் தமிழாக்க வடிவம்.

இலக்கியவாழ்க்கை

இரண்டாம் மனைவி சுந்தரத்தம்மாளுடன்

இராமலிங்கம் பிள்ளை இளமையிலேயே தெருக்கூத்துப் பாடல்கள் மற்றும் நாடகப்பாடல்களில் ஈடுபாடு கொண்டிருந்தார். நாடக நடிகர் எஸ்.ஜி. கிட்டப்பா நாடகக்குழுவிற்கும், ஒளவை சண்முகம் சிறுவர் நாடகக்குழுவிற்கும் பாடல்களை எழுதி வந்தார். அப்போது சி.சுப்ரமணிய பாரதியாரின் பாடல்களை படித்து எளிய புதியவகை கவிதைகள் மீது ஆர்வம் கொண்டார். 1920-ல் பாரதியாரின் குடும்ப நண்பர் வேங்கட கிருஷ்ண ஐயர் தொடர்பு கிடைத்தது. அவரோடு சேர்ந்து கானாடுகாத்தானில் பாரதியாரைச் சந்தித்தார். அப்போது பாட்டுப்பாடும் படி வேண்டிய பாரதியாரிடம்,

"தம்மரசைப் பிறர் ஆளவிட்டுவிட்டுத்

தாம்வணங்கிக் கைகட்டி நின்ற பேரும்"

என்று உடனே பாடினார். பாரதியார் ‘பலே, பாண்டியா! பிள்ளை நீர் ஒரு புலவன், ஐயமில்லை’ என்று கவிஞரைப் பாராட்டினார் என்று நினைவுக்குறிப்புகளில் சொல்கிறார்.

1924-ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைவர் எஸ்.சீனிவாச ஐயங்கார் அறிவித்த ஒரு போட்டியில் தேசபக்திப் பாடல்களை எழுதித் தங்கப் பதக்கம் பரிசு பெற்றார்.

திருக்குறள் உரை வெளியீடு

1930-ல் தமிழ்நாட்டில் இராஜாஜி தலைமையில் வேதாரண்யம் நோக்கி நடைப்பயணம் புறப்பட்ட போது இராமலிங்கம் பிள்ளை தொண்டர்கள் பாடுவதற்கென்று

"கத்தியின்றி ரத்தமின்றி

யுத்தமொன்று வருகுது

சத்தியத்தின் நித்தியத்தை

நம்பும் யாரும் சேருவீர்"

என்று எழுதிய பாடல் தமிழகத்தில் மிகப்புகழ்பெற்றிருந்தது.

இவரது பாடல்களை சங்கு கணேசன் தனது ‘சுதந்திரச் சங்கு’ பத்திரிகையில் வெளியிட்டார்.

மதுரை சிறையில் இருந்தபோது திருக்குறளுக்கு எளிய உரையை எழுதினார். பரிமேலழகர் உரையின் பொருத்தமின்மை இந்த உரையை எழுதத்தூண்டியது.

சுதந்திரத்திற்கு பின் தமிழகத்தில் உருவாகி வந்த தமிழியக்க அரசியலால் ஈர்க்கப்பட்டார். காங்கிரஸில் இருந்து தமிழியக்கம் சார்ந்து எழுந்த குரல்களில் ஒன்று நாமக்கல் கவிஞருடையது ‘தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அதற்கோர் குணமுண்டு' ”தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா' போன்ற அவருடைய வரிகள் புகழ்பெற்றவை.

தமிழில் பழைய நூல்களுக்கு நவீன மொழியில் உரை எழுதுவது, எளிய மொழியில் இசைப்பாடல்கள் மற்றும் கவிதைகள் எழுதுவது, இதழியல் உரைநடையில் அரசியல் கட்டுரைகள் எழுதுவது. பொதுவாசகர்கள் விரும்பும் புனகைதைகளை எழுதுவது என பலதளங்களில் செயல்பட்டார். நாமக்கல் கவிஞரின் உரைநடைத்திறன் சிறப்பாக வெளிப்பட்டது அவருடைய என் கதை என்னும் தன்வரலாற்று நூலில்தான் என விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அரசியல்

காமராஜுடன்

நாமக்கல் கவிஞர் உறுதியான காங்கிரஸ் ஆதரவாளர். சி.ராஜகோபாலாச்சாரியாரின் கொள்கைகளை பின்தொடர்ந்தவர். 1931-ல் ராஜாஜி தலைமையில் நடந்த உப்புச்சத்தியாக்கிரகத்தில் பங்கெடுத்து ஓராண்டு சிறை சென்றார் . திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரசின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றினார். 1956, 1962 ஆண்டுகளில் தமிழக மேல்சபை உறுப்பினராகச் செயல்பட்டார்.

இலக்கிய இடம்

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை தேசிய இயக்கம் மற்றும் தமிழியக்கம் சார்ந்து அவர் பாடிய இசைப்பாடல்களின் வரிகளாலேயே நினைவுகூரப்படுகிறார். அவருடைய கவிதைகள் மரபான யாப்பில் பொதுவான அரசியல்கருத்துக்களைச் சொல்பவை. நாவல்கள் அன்றைய பொதுவாசிப்புக்குரியவை. அவருடைய மரபிலக்கிய உரைகளும் பொதுவாசகர்களை இலக்காக்கியவை. பின்னாளைய அறிஞர் அவற்றை பொருட்படுத்தவில்லை. நாட்டார்ச் சாயல்கொண்ட எளிய கவிதைநடை, இதழியல் சார்ந்த நேரடி நடை ஆகியவற்றை உருவாக்குவதில் அவர் பங்களிப்பாற்றினார்.

மறைவு

ஆகஸ்ட் 24, 1972-ல் இரவு 2 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இராமலிங்கம் பிள்ளை

அரசுமரியாதைகள், விருதுகள்

  • ஆகஸ்ட் 15, 1949 சுதந்திரநாளில் அப்போதைய சென்னை மாகாண கவர்னர் பவநகர் மகாராஜா தலைமையில் இவருக்கு ‘அரசவைக் கவிஞர்’ எனும் பதவி வழங்கப்பட்டது.
  • 1954-ல் சாகித்திய அகாதமி குழு உறுப்பினர்
  • 1956-ஆம் ஆண்டிலும் பின்னர் 1962ஆம் ஆண்டிலும் தமிழக சட்ட மேலவை உறுப்பினர்
  • 1971-ல் ‘பத்மபூஷன்’ விருது
  • தமிழ்நாடு அரசு கவிஞர் வாழ்ந்த நாமக்கல்லிலுள்ள இல்லத்தை நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லம் ஆக்கியுள்ளது. இதில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
  • சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலக பத்து மாடிக் கட்டிடத்திற்கு இவரது பெயர் சூட்டியுள்ளது.
  • தட்டாரத் தெரு என்று அழைக்கப்பட்டு வந்த இவர் வாழ்ந்த தெரு கவிஞர் இராமலிங்கம் தெரு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • சேலம் அருங்காட்சியகத்தில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின் உடைமைகள் காட்சிக்கு வைக்கப்பெற்றுள்ளன.
பத்மபூஷன் விருது

நூல்கள்

நாவல்கள்
  • மலைக்கள்ளன்
  • காணாமல் போன கல்யாணப் பெண்
  • அவனும் அவளும் (செய்யுள்நாவல்)
ஆய்வுகள்
  • திருக்குறளும் பரிமேலழகரும்
  • திருவள்ளுவர் திடுக்கிடுவார்
  • திருக்குறள் புது உரை
  • கம்பனும் வால்மீகியும்
  • கம்பன் கவிதை இன்பக் குவியல்
நாமக்கல் கவிஞர் அஞ்சலி. கல்கி
தன்வரலாறு
கவிதைத்தொகுதிகள்
  • பிரார்த்தனை
  • நாமக்கல் கவிஞர் பாடல்கள்
  • சங்கொலி
நாடகம்
  • மாமன் மகள்
  • அரவணை சுந்தரம்

உசாத்துணை



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.