first review completed

வெண்முகில் நகரம் (வெண்முரசு நாவலின் ஆறாம் பகுதி)

From Tamil Wiki
Revision as of 12:21, 25 April 2022 by Rjgpal2 (talk | contribs)
வெண்முகில் நகரம் (‘வெண்முரசு’ நாவலின் ஆறாம் பகுதி)

வெண்முகில் நகரம்[1] (‘வெண்முரசு’ நாவலின் ஆறாம் பகுதி) ‘இந்திரப்பிரஸ்தம்’ உருவாவதற்குரிய பின்புலத்தைக் காட்டுகிறது. இந்திரப்பிரஸ்தம் விண்நிறைந்த முகில்நிரையை ஆளும் இந்திரன் பெயரால் அமைந்த நகரம். திரௌபதி அஸ்தினபுரியின் அரசியென ஆகி, இந்திரப்பிரஸ்தத்தை அமைக்க ஆணையிடுகிறாள். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பகை முற்றுகிறது. பாண்டவர்கள் ‘இந்திரபிரஸ்தம்’ என்ற நகரை அமைக்கின்றனர். அந்த நகரைப் பற்றியும் ஸ்ரீ கிருஷ்ணர் உருவாக்கிய துவாரகை நகரைக் குறித்தும்இந்த நூல்விரிவாகக் கூறுகிறது.

பதிப்பு

இணையப் பதிப்பு

‘வெண்முரசு’ நாவலின் ஆறாம் பகுதியான ‘வெண்முகில் நகரம்’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் பிப்ரவரி 2015 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்தியாயம் என வெளியிடப்பட்டு மே 2015-ல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.

அச்சுப் பதிப்பு

கிழக்கு பதிப்பகம் வெண்முகில் நகரை அச்சுப் பதிப்பாக வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்

‘வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

‘வெண்முகில் நகரம்’ புலோமையின் கதையுடன் தொடங்கி, திரௌபதியின் மங்கள இரவுகள், பாண்டவர்களின் பிற மண நிகழ்வுகள், துரியோதனன் மற்றும் பிற கௌரவர்களின் மண நிகழ்வுகள், பானுமதி, தேவிகை, விஜயை என்ற மூன்று இளவரசிகள்; சாத்யகி, பூரிசிரவஸ் என்ற இரண்டாம் நிலை ஆளுமைகள் என்று பலரையும் அறிமுகப்படுத்தி அவர்களின் தனிப்பட்ட ஆளுமையை நிறுவியுள்ளது.

‘வெண்முகில் நகர’த்தில் இரண்டு முதன்மையான கதைமாந்தர்கள் அறிமுகமாகியுள்ளனர். ஒருவர் சாத்யகி. மற்றொருவர் பூரிசிரவஸ். எந்தப் பயனையும் கருதாது தன்னை இளைய யாதவரிடம் அடிமையாக்கிக் கொள்ளும் சாத்யகி. கொழுகொம்பைப் பற்றிக்கொண்டு முன்னேறுவதற்காகத் தன்னைக் கௌரவர்களிடம் அணுக்கராக்கிக் கொள்ளும் பூரிசிரவஸ். சாத்யகி போல இறைவனிடமே தன்னை முழுதளித்தவர்களும் உண்டு. பூரிசிரவஸ் போல வல்லோரிடமே தன்னை அடகுவைத்துக்கொண்டவர்களும் உண்டு. சாத்யகி கர்மயோகி. பூரிசிரவஸ் செயல்வீரர். சாத்யகி தெய்வங்களால் வாழ்த்தப் பெற்றவர். பூரிசிரவஸ் தெய்வங்களால் விளையாடப்படுபவர்.

பேரரசி தேவயானி, பேரரசி சத்யவதி, யாதவ அரசி குந்திதேவி, பாஞ்சாலத்து இளவரசி திரௌபதி ஆகிய இந்த நால்வரிடமும் சக்கரவர்த்தினிகளுக்குரிய நிமிர்வு குடிகொண்டுள்ளது. ஒருவேளை அம்பை அஸ்தினபுரியின் அரசியாகியிருந்தால் மொத்த ஆட்டமும் முன்பே முடிவுக்கு வந்திருக்கும். அது தவறியதால், அவளுருவில் திரௌபதி அஸ்தினபுரிக்குள் நுழைகிறாள். பேரரசி சத்யவதி அஸ்தினபுரியை ஆளும்போது அவருக்கு மனத்தளவில் இடையூறு செய்பவர்களாக அம்பிகையும் அம்பாலிகையும் இருந்தார்கள். அவர்களைப் போலவே யாதவ அரசி குந்திதேவிக்குத் தேவிகையும் விஜயையும் அமைந்துவிடுகின்றனர். பேரரசி சத்யவதியும் யாதவ அரசி குந்திதேவி இவர்களைப் புறக்கணித்தபடியேதான் தம்முடைய பெரும்பணிகளை முன்னெடுக்க  நேர்கிறது. காந்தார அரசி காந்தாரிக்குப் பானுமதி அமைந்ததைப் போலவே யாதவ அரசி குந்திதேவிக்குத் திரௌபதி.  யாதவ அரசி குந்திதேவிக்கும் காந்தார அரசி காந்தாரிக்கும் இடையே நீறுபூத்த நெருப்பாக அன்பும் வெறுப்பும் இருப்பதைப் போலவே திரௌபதிக்கும் பானுமதிக்கும் இனி அமையக்கூடும்.

அஸ்தினபுரி இரண்டாகப் பங்கிடப்படுவதை விளக்குவதாகவே ‘வெண்முகில் நகரம்’ அமைக்கப்பட்டது என்றாலும்கூட, பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் மணப்பெண் தேடும்பொருட்டு நிகழும் அனைத்துத் திட்டங்களும் இறுதியில் ஒட்டுமொத்த பாரதவர்ஷத்தையே பங்கிடுவதாகவே மாறிவிடுகிறது. மொத்தத்தில் இரண்டே தரப்புகள்தான். ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு தரப்பைத் தேர்ந்தெடுப்பதால் அல்லது தேர்ந்தெடுக்க வலியுறுத்தப்படுவதால் ஒட்டுமொத்த பாரதவர்ஷமுமே அவர்களின் மனத்தளவில் இரண்டு தரப்பாகிவிடுகிறது. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் மனத்தளவில் ஒற்றுமை ஏற்பட்டதாகத் தெரிந்தாலும் மானுட மனத்தின் ஒட்டுமொத்த வரைபடத்தில் அஸ்தினபுரியும் அதனை மையப்படுத்திய பாரதவர்ஷமும் இரண்டு தரப்பாகவே அமைவுகொள்கின்றன.

இந்த வெண்முகில் நகரத்தில் முதன்மையான தருணங்களில் மட்டும் இளைய யாதவர் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு, ஒட்டுமொத்த கதையொழுக்கை ஊழுக்கு ஏற்ப திசை திருப்பியவாறே இருக்கிறார். அஸ்தினபுரியை எந்தச் சிக்கலுமின்றி இரண்டாகப் பிரிப்பதும் திருதராஷ்டிரனின் முன்பாகப் பாண்டவர்களையும் கௌரவர்களையும் கைக்கோத்து, இணைந்து நிற்கச் செய்வதும் அவரின் சொல்லாற்றலே! அவற்றுக்குரிய தக்க தருணங்களை முன்னுணர்ந்து, அவற்றின் திசையில் அனைவரையும் இழுத்துச் செல்வதும் அவரே. எல்லாம் ஒழுங்கான பின்னர் அங்கிருந்து யாருமறியாமல் மென்முகில்போல மெல்ல விலகிச் செல்வதும் அவரே.

‘வெண்முகில் நகரம்’ என்பது, திரௌபதி உருவாக்க உள்ள ‘இந்திரபிரஸ்தமே!’. ஆனால், பாரதவர்ஷத்தை ஆள நினைக்கும் ஒவ்வொரு சக்கரவர்த்திக்கும் சக்கரவர்த்தினிக்கும் கனவில் உருக்கொண்டுவிட்ட ஒரு பெருநகரமே அது. ஒருவகையில் அது அவர்களின் பெருவிழைவுகளின் ஒட்டுமொத்த சித்திரம்.

கதை மாந்தர்

இளைய யாதவர், சாத்யகி, பூரிசிரவஸ், திரௌபதி ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாகவும் பானுமதி, குந்தி, தேவிகை, விஜயை முதலானோர் துணைமைக் கதைமாந்தர்களாகவும் இடம்பெற்றுள்ளனர்.

பிறவடிவங்கள்

மனோபாரதி விக்னேஷ்வர் வெண்முகில் நகரத்தைத் தம் குரல்பதிவில் யூடியூப்பில் வெளியிட்டுள்ளார்[2].

உசாத்துணை

இணைப்புகள்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.