விறன்மிண்ட நாயனார்
விறன்மிண்ட நாயனார் சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.
வாழ்க்கைக் குறிப்பு
விறன்மிண்ட நாயனார் சேரநாட்டு செங்குன்றூரில் வேளாள குலத்தில் பிறந்தார். இவர் சிவனின் தொண்டர்களை முதலில் வணங்கி அதன் பின்னரே சிவபெருமானை வணங்கும் வழக்கம் கொண்டிருந்தார். விறன்மிண்டர் சேரநாட்டிலும் சோழநாட்டிலும் பல சிவத்தலங்கள் சென்று வணங்கியபடி, திருவாரூரை சென்றடைந்தார்.
திருவாரூர் தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருந்த சிவனடியார் கூட்டத்தைக் கண்டு அவர்களைத் தொந்தரவு செய்யவேண்டாமென எண்ணி ஒதுங்கிச் சென்ற சுந்தரமூர்த்தி நாயனாரை விறன்மிண்டர் கண்டார். ‘திருக்கூட்டத்தாரை வழிபடாது கோயிலுள் செல்கிறானே! திருக்கூட்டத்திற்கு இவனும் புறம்பு; இவனையாண்ட சிவனும் புறம்பு’ என்று கூறினார். விறன்மிண்டரது அடியார் மீதான பக்தியைக் கேட்டறிந்த சுந்தரமூர்த்தி நாயனார், திருவாரூர்க் கோயிலில் “அடியேன் இவ்வடியார்க்கெல்லாம் அடியானாகும் நாள் என்று அமையும்” என்று தியாகராசப் பெருமானை வேண்டினார். அதன் பின்னர் சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையை “தில்லைவாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்பதை முதல் வரியாகக் கொண்டு பாடினார்.
குருபூஜை
விறன்மிண்ட நாயனாருக்கு ஒவ்வோர் ஆண்டும், சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில், சிவாலயங்களில் குருபூஜை கொண்டாடப்படுகிறது.
பாடல்கள்
- திருத்தொண்டர் திருவந்தாதியில் விறன்மிண்ட நாயனார் கதையை விளக்கும் பாடல்:
பேசும் பெருமையவ் வாரூ ரனையும் பிரானவனாம்
ஈசன் தனையும் புறகுதட் டென்றவன் ஈசனுக்கே
நேசன் எனக்கும் பிரான்மனைக் கேபுக நீடுதென்றல்
வீசும் பொழில்திருச் செங்குன்றம் மேய விறன்மிண்டனே.
- திருத்தொண்டர் புராணத்தில் விறன்மிண்ட நாயனார் கதையை விளக்கும் பாடல்:
விளங்குதிருச் செங்குன்றூர் வேளாண் தொன்மை
விறன்மிண்டர் திருவாரூர் மேவு நாளில்
வளங்குலவு தொண்டரடி வணங்கா தேகும்
வன்தொண்டன் புறகுஅவனை வலிய ஆண்ட
துளங்குசடை முடியோனும் புற(கு) என்(று)அன்பால்
சொல்லுதலும் அவர் தொண்டத் தொகைமுன் பாட
உளங்குளிர ‘உளது’ என்றார் அதனால் அண்ணல்
உவகைதர உயர்கணத்துள் ஓங்கினாரே.
உசாத்துணை
நாயன்மார் வரலாறு - தமிழ்வளர்ச்சித்துறை - திரு.வி. கலியாணசுந்தரனார் - 2016
சைவம் வளர்த்த அறுபத்து மூவர் - விஜயா பதிப்பகம் - சி.எஸ். தேவநாதன் - நான்காம் பதிப்பு - 2016