under review

வினைத்தொழில் சோகீரனார்

From Tamil Wiki
Revision as of 07:29, 6 May 2024 by Tamizhkalai (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வினைத் தொழில் சோகீரனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

வினைத்தொழில் சோகீரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். தலைவன் தான் செய்ய விரும்பும் தொழிலில் சோகம் காண்பதை இப்பாடல் தெரிவிப்பதால் அறிஞர்கள் இப்பெயர் இட்டனர்.

இலக்கிய வாழ்க்கை

வினைத் தொழில் சோகீரனார் பாடிய பாடல் நற்றிணையில் 319-வது பாடலாக உள்ளது. காப்பு மிகுதிக்கண் ஆற்றானாகிய தலைமகன், தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லிய பாடல். நள்ளிரவில் தலைவன் உறக்கமின்றித் தன் காதலியை எண்ணிக்கொண்டிருக்கிறான் என்ற பொருளில் வரும் நெய்தல் திணைப்பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

கடல் அலை ஓய்வின்றி ஒலித்துக்கொண்டிருக்கிறது, ஊதைக்காற்று 'அவ் அவ்' என்று உதடுகள் நடுங்கும்படி வீசுகிறது. மணல் பரந்துகிடக்கும் தெருச் சதுக்கத்தில் இருந்துகொண்டு கூகை குழறுகிறது. நள்ளிரவில் அணங்குகள் தரையில் கால் பாவி நடமாடுகின்றன. இந்த வேளையில் அவளது முலை முயக்கத்தை எண்ணி தலைவன் வருந்துகிறான்.

பாடல் நடை

  • நற்றிணை 319 (திணை: நெய்தல்)

ஓதமும் ஒலி ஓவின்றே; ஊதையும்
தாது உளர் கானல் தவ்வென்றன்றே;
மணல் மலி மூதூர் அகல் நெடுந் தெருவில்,
கூகைச் சேவல் குராலோடு ஏறி,
ஆர் இருஞ் சதுக்கத்து அஞ்சுவரக் குழறும்,
அணங்கு கால் கிளரும், மயங்கு இருள் நடு நாள்;
பாவை அன்ன பலர் ஆய் வனப்பின்,
தட மென் பணைத் தோள், மடம் மிகு குறுமகள்
சுணங்கு அணி வன முலை முயங்கல் உள்ளி,
மீன் கண் துஞ்சும் பொழுதும்,
யான் கண் துஞ்சேன்; யாதுகொல் நிலையே?

உசாத்துணை


✅Finalised Page