வண்ணக்கடல் (வெண்முரசு நாவலின் மூன்றாம் பகுதி): Difference between revisions
Logamadevi (talk | contribs) |
Logamadevi (talk | contribs) No edit summary |
||
Line 37: | Line 37: | ||
== இணைப்புகள் == | == இணைப்புகள் == | ||
<references /> | <references /> | ||
{{ | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 09:20, 24 December 2022
வண்ணக்கடல்[1] ('வெண்முரசு’ நாவல் வரிசையில் மூன்றாம் நூல் பகுதி) மகாபாரதத்தின் மைந்தர்கள் பிறந்து வளர்ந்து அவர்களின் பிறவியின் விளைவாக அடைந்த பெருமைகளையும் சிறுமைகளையும் வன்மங்களையும் கோபங்களையும் பழிகளையும் அடையும் சித்திரத்தை அளிக்கிறது. இதன் நாயகர்கள் நால்வர். துரோணர், துரியோதனன், கர்ணன், ஏகலவ்யன். அவர்களைப் பற்றியதாகவே அமைந்த இந்த வண்ணக்கடல், 'இளநாகன்’ என்ற தமிழகப் பாணனின் பார்வைக் கோணத்தில் விரிகிறது. இதில் பாண்டவர்கள், கௌரவர்கள் ஆகியோரின் இளமைக்காலம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
பதிப்பு
இணையப் பதிப்பு
'வெண்முரசு’ நாவலின் மூன்றாம் பகுதியான 'வண்ணக்கடல்’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் ஜூன் 2014 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்தியாயம் என வெளியிடப்பட்டு ஆகஸ்ட் 2014-ல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.
அச்சுப் பதிப்பு
வண்ணக்கடலை நற்றிணை பதிப்பகமும் பின்னர் கிழக்கு பதிப்பகமும் அச்சுப் பதிப்பாக வெளியிட்டன.
ஆசிரியர்
'வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.
கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்
ஏழ்பனை நாட்டு மருதூர் சாத்தன் பெரும்பாணன் மகன் 'இளநாகன்’ என்ற பயணி இந்தியாவின் அதிதென்முனையிலிருந்து அஸ்தினபுரி வரை பயணிக்கிறான். அவ்வழியில் அரசுகள் சார்ந்த அனைத்துத் தகவல்களும் சூதர்களின் வாழ்வு வழியாக எவ்விதமாகப் பல நாடுகளைக் கடந்தும் பரப்பப்படுகின்றன என்பதை இளநாகனின் பயணத்தில் அவன் எதிர்கொள்ளும் சூதர்களின் சொற்கள் வழியே நாவல் விளக்குகிறது. இளநாகனின் பயணத்தின் வழியாகப் பாரதவர்ஷத்தின் ஒட்டுமொத்த நிலப்பரப்பையும் நாவல் பின்னணியாகக் கொண்டுள்ளது.
துரியோதனன் மதங்கக் கர்ப்பத்திலிருந்து பிறந்தவன். துரோணர் குலமுறைப் பிறழ்வுடைய கர்ப்பத்திலிருந்து பிறந்தவர். கர்ணன் தெய்வத்தால் உண்டான கர்ப்பத்திலிருந்து உதித்தவன்.துரியோதனன், துரோணர், கர்ணன் ஆகிய மூவரும் பிறப்புமுறையால் சந்திக்கும் இடர்கள் நாவலில் பேசப்படுகின்றன.
துரோணர் கெளரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் போர்க்கலை பயிற்றுவிப்பதும், அவர் மகன் அஸ்வத்தாமனுக்கும் அவருடைய முதன்மையான மாணவன் அர்ஜூனனுக்கும் முரண்கள் உருவாகும் தருணங்களையும், கர்ணன் அவரிடம் பயில வந்து சேர்வதையும் நாவல் பேசுகிறது.
பீமனும், துரியோதனனும் தத்தம் வலிமையால் ஒருவரை ஒருவர் வியப்பதும், அதன் காரணமாகவே இருவருக்குள்ளும் உருவாகி வரும் இறுக்கமான உறவையும் நாவல் விவரிக்கிறது. ஆனால் கானாடுதலின்போது அன்னைக் கரடி துரியோதனனைத் தாக்க பீமசேனன் துரியோதனனைக் காப்பாற்றுகிறான். பீமசேனனின் இந்தச் செயலால் தான் தன் தம்பியர்களின் முன்னால் தான் வலுவிழந்தவனாக உணர்ந்த துரியோதனன் கடும்சினம் கொள்கிறான். அங்கிருந்து அவர்கள் உறவில் விரிசல் ஏற்பட்டு வெறுப்பாக மாறுவது நாவலில் பேசப்படுகிறது.
படைக்கலப் பயிற்சியில் கெளரவர்களும், பாண்டவர்களும் மோதிக்கொள்வது, அதன் வழியே தீராப் பகையின் அடையாளங்கள் வெளிப்படுவது ஆகியவற்றை இந்நாவல் விவரிக்கிறது.
கதை மாந்தர்
துரோணர், துரியோதனன், கர்ணன், ஏகலவ்யன் ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாகவும் இளநாகன், துருபதன், பீமன், சகுனி, துச்சாதனன், அஸ்வத்தாமன் ஆகியோர் துணைமைக் கதைமாந்தர்களாகவும் இடம்பெற்றுள்ளனர்.
உசாத்துணை
- வெண்முரசு விவாதங்கள் (venmurasudiscussions.blogspot.com)
- சுரேஷ் எழுதுகிறான் : நூல் மூன்று - வண்ணக்கடல் (sureshezhuthu.blogspot.com)
- வண்ணக்கடல் வாசிப்பு- முனைவர் ப.சரவணன் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
- முனைவர் ப. சரவணன் | Search Results | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
இணைப்புகள்
✅Finalised Page