first review completed

மெய்ப்பொருள் நாயனார்

From Tamil Wiki
Revision as of 20:17, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
மெய்ப்பொருள் நாயனார் - வரைபட உதவி நன்றி - shaivam.org
மெய்ப்பொருள் நாயனார் - வரைபட உதவி நன்றி - shaivam.org

மெய்ப்பொருள் நாயனார் சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர். மெய்ப்பொருள் நாயனார் புராணம் பெரிய புராணத்தில் தில்லைவாழ் அந்தணர் சருக்கத்தில் இடம்பெறுகிறது.

வாழ்க்கைக் குறிப்பு

மெய்ப்பொருள் நாயனார் சேதிநாட்டுத் திருக்கோவலூரிலிருந்து அரசாண்ட மலையமான் குலத்துக் குறுநிலமன்னர் குடியில் பிறந்தவர். சிவபக்தராகிய மெய்ப்பொருள் நாயனார் அறநெறிதவறாது அரசு செய்தார். சிவனடியார்களுக்கு குறைவற தானம் கொடுத்து நிறைவு காணும் வழக்கம் கொண்டிருந்தார்.

முத்தநாதன் என்றொரு மன்னன் மெய்பொருள் நாயனாரிடம் பகை கொண்டிருந்தான். அவன் பலமுறை மெய்பொருளாளருடன் போரிட்டுத் தோல்வியுற்றவன். மெய்பொருளாளரைப் போரில் வெல்லமுடியாதென எண்ணிய முத்தநாதன் வஞ்சனையால் வெல்லத் திட்டமிட்டான். அவன் உடலெல்லாம் திருநீறு பூசி, சடைமுடி கொண்டு, ஆயுதத்தை மறைத்து சுவடிக்கட்டு ஒன்றுக்குள் வைத்து அதைக் கையிலேந்தியவனாகக் கோவிலூர் அரண்மனைக்கு சென்றான்.

காவலர்கள் அவனை சிவனடியாரென வணங்கி உள்ளே போகவிட்டனர். பல வாயில்களையும் கடந்து முத்தநாதன் பள்ளியறை வாயிலை அடைந்தான். அரசனுக்கு ஆகமம் விளக்குவதற்காக வந்திருப்பதாகவும், தன்னைத் தடைசெய்யக்கூடாதெனவும் அங்கிருந்த தத்தன் என்னும் காவலனிடம் கூறி உள்ளே நுழைந்தான். அங்கே அரசர் துயின்று கொண்டிருந்தார். அரசி சிவனடியாரின் வரவு கூறி மன்னனை எழுப்பினாள். அரசர் எதிர்சென்று சிவனடியார் வேடத்தில் இருந்த முத்தநாதனை வரவேற்று வணங்கினார். வேடம் பூண்டவர் சிவாகமம் கொண்டுவந்திருப்பதாகப் புத்தகப்பையைப் காட்டினார். ஆகமப் பொருள் கேட்பதற்கு அரசரும் ஆர்வம் கொண்டார்.

தனிமையிலேயே ஆகம உபதேசம் செய்யவேண்டும் என முத்தநாதன் கூறினான். மெய்பொருளாளர் துணைவியாரை அந்தப்புரம் செல்லுமாறு அனுப்பிவிட்டு சிவனடியவருக்கு ஓர் ஆசனமளித்து அமரச் செய்தபின் தாம் தரைமேல் அமர்ந்து ஆகமப்பொருளைக் கேட்பதற்கு சித்தமானார்.

சுவடிக்கட்டை அவிழ்ப்பது போல மறைத்து வைத்திருந்த உடைவாளை எடுத்து மெய்ப்பொருள் நாயனாரை குத்திவிட்டான். வாளால் குத்துண்டு வீழும் நிலையிலும் சிவவேடத்தில் இருக்கும் ஒருவரை ஏதும் செய்யலாகதென மெய்ப்பொருள் நாயனார் சொன்னார். முத்தநாதன் நுழைந்த பொழுதிலிருந்து அவனை கண்காணித்துக் கொண்டிருந்த தத்தன், இக்கொடூரச் செயலைக் கண்டு அவன் மீது பாய்ந்து தன் கைவாளால் அவனை வெட்டச் சென்றான்.

இரத்தம் பெருகச் சோர்ந்துவிழும் நிலையில் இருந்த மெய்ப்பொருள் நாயனார் "தத்தா நமரே காண்" என்று தடுத்து நிறுத்தினார். வீழ்ந்த மன்னனைத் தாங்கித் தலைவணங்கி நின்ற தத்தன் தான் செய்ய வேண்டியது என்ன எனக் கேட்டான். "இச்சிவனடியாருக்கு ஓர் இடையூறும் நேராதவாறு பாதுகாப்பாக விட்டுவா" என்று மெய்பொருள் நாயனார் கூறினார்.

மெய்பொருள் நாயனார் ஆணையின் படியே முத்தநாதனை அழைத்துச் சென்றான் தத்தன். செய்தியறிந்த குடிமக்கள் கோபம் கொண்டு திரண்டனர். அவர்களுக்கெல்லாம் "அரசரது ஆணை" எனக் கூறித்தடுத்து நகரைக் கடந்து சென்று காட்டெல்லையில் முத்தநாதனை விட்டு வந்தான் தத்தன். வந்ததும் அரசர் பெருமானை வணங்கி "தவவேடம் பூண்டு வந்து வென்றவனை இடையூறின்றி விட்டு வந்தேன்" எனக் கூறினான். அதுகேட்டு மெய்பொருள் நாயனார் மகிழ்ச்சியுடன் இறைவனடி சேர்ந்தார்.

பாடல்கள்

பெரிய புராணத்தில் மெய்ப்பொருள் நாயனார் புராணம்[1] 24 பாடல்களில் விளக்கப்பட்டுள்ளது:

முத்தநாதன் சிவபெருமான் வேடத்தில் வருதல்

மெய்யெலாம் நீறு பூசி
வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினிற் படைக ரந்த
புத்தகக் கவளி யேந்தி
மைபொதி விளக்கே யென்ன
மனத்தினுட் கறுப்பு வைத்துப்
பொய்தவ வேடங் கொண்டு
புகுந்தனன் முத்த நாதன்.

முத்தநாதன் நாயனாரை வாளால் வெட்ட வருதல்

கைத்தலத் திருந்த வஞ்சக்
கவளிகை மடிமேல் வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று
புரிந்தவர் வணங்கும் போதில்
பத்திரம் வாங்கித் தான்முன்
நினைந்தஅப் பரிசே செய்ய
மெய்த்தவ வேட மேமெய்ப்
பொருளெனத் தொழுது வென்றார்.

தத்தா நமர் -முத்தநாதனைக் கொல்ல வேண்டாம் எனத் தடுத்தல்

மறைத்தவன் புகுந்த போதே மனமங்கு வைத்த தத்தன்
இறைப்பொழு தின்கட் கூடி வாளினா லெறியலுற்றான்;
நிறைத்தசெங் குருதி சோர வீழ்கின்றார் நீண்ட கையாற்
றறைப்படு மறவிற் “றத்தா! நமர்“ எனத் தடுத்து வீழ்ந்தார்.

குருபூஜை

மெய்ப்பொருள் நாயனாருக்கு ஒவ்வோர் ஆண்டும், கார்த்திகை மாதம் உத்திர நட்சத்திரத்தில், சிவாலயங்களில் குருபூஜை கொண்டாடப்படுகிறது.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.