first review completed

மா. செ. மாயதேவன்

From Tamil Wiki
மா. செ. மாயதேவன்

1950-களில் மலேசியாவில் புத்திலக்கியம் வளர்த்தவர்களுள் மா. செ. மாயதேவன் (இயற்பெயர்: முனியாண்டி) (1933 - செப்டம்பர் 30, 2021) முதன்மையானவர். 1953-ல் இவர் வெளியிட்ட 'இரத்த தானம்' மலேசியாவிலேயே பிறந்து தமிழ்க்கற்றவரால் வெளியிடப்பட்ட முதல் சிறுகதை நூல். 1955இல் 'திருமுகம்' என்ற இலக்கிய கையெழுத்து பிரதியை வெளியிட்டு மலேசியாவில் புத்திலக்கியம் வளர களம் அமைத்தவர் மாயதேவன். முனிதாசன், மாயன், மா. மரகதம் எனும் பிற புனைப்பெயர்களாலும் அறியப்பட்டவர்.

பிறப்பு, கல்வி

மா. செ. மாயதேவன், பேராக் மாநிலத்தில் உள்ள பொண்டோக் தஞ்சோங்கில் மெற்சிஸ்டன் எனும் தோட்டத்தில் 1933-ல் பிறந்தார். இவர் அப்பாவின் பெயர் மாகாளி. அம்மா செங்கம்மாள். உடன் பிறந்தவர்கள் ஓர் அண்ணன், இரண்டு தம்பிகள் மற்றும் ஒரு தங்கை. மாயதேவன் மெற்சிஸ்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். பின்னர் பக்கத்துத் தோட்டமான மசாலை தோட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளியில் நான்கு முதல் ஆறாம் ஆண்டு வரை பயின்றார். தமிழ்க்கல்வியின் மேல் இருந்த ஆர்வத்தால் 22 கிலோமீட்டர் பயணம் செய்து ஏழாம் வகுப்பை தைப்பிங் இந்து வாலிபர் சங்கத்தில் படித்தார்.

தனி வாழ்க்கை

1957-ல் சீன நண்பர்களுடன் இணைந்து அச்சகத்தைத் தொடங்கியவர், பின்னர் அந்நிறுவனத்தை முழுமையாகத் தன் பொறுப்பில் ஏற்று 'திருமுகம்' என்ற பெயரில் வெற்றிகரமாக நடத்தினார்.

தமிழ் முறைப்படி காளியம்மாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட இவருக்கு, மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

இலக்கிய வாழ்க்கை

'தமிழ் நேசன்' நாளிதழ் வழி, 1950-களில்சுப.நாராயணனும் பைரோஜி நாராயணனும் நடத்திய கதை வகுப்பு, 1952-ல் கு. அழகிரிசாமி அவர்களால் நடத்தப்பட்ட 'இலக்கிய வட்டம்’, கோ. சாரங்கபாணி அவர்கள் முன்னெடுத்த 'தமிழர் திருநாள்’ என 1950-களில் தன்னை இலக்கியம் மற்றும் மொழி சார்ந்த முன்னெடுப்புகளில் ஈடுபடுத்திக்கொண்டார். எழுத்தாளர் மா. இராமையாவுடன் இணைந்து செயல்பட்டதால் ஐம்பதுகளில் இலக்கிய இரட்டையர்களாக இருவரையும் குறிப்பிடப்பட்டனர். 1953-ல் இவர்கள் இருவரின் கதைகளும் தொகுக்கப்பட்டு 'இரத்ததானம்’ என்ற நூலாக வெளிவந்தது. பின்னர் 1958-ல் 'நீர்ச்சுழல்' என்ற நாவலை இருவரும் இணைந்து எழுதி வெளியிட்டனர்.

1955-ல் மாயதேவன் வெளியிட்ட 'திருமுகம்’ ஓராண்டுகள் கையெழுத்துப் பிரதியாக வெளிவந்தது. பின்னர் அச்சிதழாக பரிணாமம் அடைந்து முன்னூறு பிரதிகளில் தொடங்கி ஐந்நூறு பிரதிகள் வரை அச்சிட்டு விற்பனை செய்யப்பட்டது. இவ்விதழ் வழி சிறுகதை போட்டிகளை நடத்தி இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்தார் மாயதேவன்.

பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், ஓரங்க நாடகங்கள் போன்றவற்றை எழுதியவர் மாயதேவன். இவரின் சில ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

சமூகப் பணிகள்

கோ.சாரங்கபாணியைத் தன் வழிகாட்டியாகக் கருதியவர் மாயதேவன். 1950-களில் கோ.சாரங்கபாணி தொடங்கிய தமிழர் திருநாளை தன் இறுதி காலம் வரை தைப்பிங் நகரில் ஒரு பண்பாட்டு விழாவாக நடத்தினார். கோ.சாரங்கபாணி அக்காலக்கட்டத்தில் முன்னெடுத்த திட்டங்களுக்குத் தைப்பிங் நகரின் தமிழர்களை ஒன்றிணைத்து ஆதரவு வழங்கினார். தைப்பிங் தமிழர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து அந்நகரில் மொழியும் இலக்கியமும் வளர தொடர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். தைப்பிங் நகரில் தமிழர்களுக்காக ஒரு மண்டபம் வேண்டுமென 1999-ல் மாயதேவன் எடுத்த முயற்சி ஜூலை 22, 2005-ல் மூன்று மாடிக்கட்டிடமாக உருபெற்றது. ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர் திருமண நிகழ்வை நடத்தி வைத்துள்ள மா. செ. மாயதேவன் மேடை சொற்பொழிவாளராகவும் செயல்பட்டார்.

பரிசுகள் விருதுகள்

  • 'தமிழ்ச் சீலர்' (1968)
  • "அருட்செல்வர்" (1980) - தைப்பிங் இந்து தேவாலய சபா
  • "தமிழ்க் காவலர்" (2000) - தைப்பிங் ஓம் ஸ்ரீ ஐயனார் கோயில்
  • அரசாங்க PJK விருது (1978)
  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கப் பாராட்டு (1978)

மறைவு

செப்டம்பர் 30, 2021-ல் மா. செ. மாயதேவன் மரணமடைந்தார்.

இலக்கிய இடம்

மாயதேவன் புதுமைப்பித்தனின் தீவிர வாசகர். 'இலக்கியத்தில் புதுமைப்பித்தன்' எனும் கட்டுரை நூலை எழுதியுள்ளார். இலக்கியத்தின் வழியாகவே புதிய சிந்தனைகளை ஏற்கப் பழகியவர் அதனை தன் படைப்பிலும் பிரதிபளிக்கச் செய்தார். புதிய சிந்தனைகளை, புரட்சிகர கருத்துகளை அவரது புனைவுகள் தாங்கி மலர்ந்தன. அவை சிறுகதைக்கான கலை வடிவத்தை அடையாவிட்டாலும் ஐம்பதுகளில் புதிய முயற்சியாகக் கருதப்பட்டன. இலக்கியச் செயல்பாட்டாளராக மா. செ. மாயதேவன் மலேசிய நவீன இலக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தவர்.

நூல்கள்

மா.இராமையாவுடன் கூட்டாக எழுதியவை
  • இரத்த தானம் (சிறுகதைத் தொகுப்பு - 1953)
  • நீர்ச்சுழல் (குறுநாவல் - 1958)
பிற நூல்கள்
  • மலாயாவில் தமிழர் நாகரிகமும் கலையும் (கட்டுரை - 1958)
  • இலக்கியத்தில் புதுமைப்பித்தன் (கட்டுரைகள் - 1961)
  • சபலம் (சிறுகதைகள்; தொகுப்பாசிரியர் - 1962)
  • மலேசியாவில் தமிழர்கள் (கட்டுரைகள் - 1968)
  • மன உணர்வுகள் (கட்டுரைகள் - 1972)
  • இராமையாவின் இலக்கியப் பணி (தொகுப்பாசிரியர் - 1975)

இணைய இணைப்பு


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.