under review

மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்

From Tamil Wiki

மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார் சங்ககாலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் நற்றிணையில் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார் மதுரை ஓலைக்கடையில் வாழ்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார் பாடியனவாகச் சங்கநூல் தொகுப்பில் இரண்டு பாடல்கள் (நற்றிணை 250, 369) உள்ளன.

பாடல் வழி அறிய வரும் செய்திகள்

  • சிறுவன் கிண்கிணி, ஆர்ப்பத் தேர்கள் கொண்டு தெருவில் விளையாடுதல்
  • ஞெமை மரம் ஓங்கி நிற்கும் இமய மலையின் உச்சியிலிருந்து வானத்து அருவி இறங்கிக் கங்கை ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும் கங்கையாறு புனல்நீர் போல என் காமம்.
  • மாலைப்பொழுது: நிறைந்த இறகுகளை உடைய குருகுப் பறவைகள் தம் இருப்பிடம் நோக்கி வானத்தில் பறக்கின்றன. முல்லை மலர் பூக்கும்.

பாடல் நடை

புதல்வனொடு புக்க தலைமகன் ஆற்றானாய்ப் பாணற்கு உரைத்தது.

நகுகம் வாராய் பாண! பகுவாய்
அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப, தெருவில்
தேர் நடைபயிற்றும் தேமொழிப் புதல்வன்
பூ நாறு செவ் வாய் சிதைத்த சாந்தமொடு
காமர் நெஞ்சம் துரப்ப, யாம் தன்
முயங்கல் விருப்பொடு குறுகினேமாக,
பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல்
நாறு இருங் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து,
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ,
"யாரையோ?" என்று இகந்து நின்றதுவே!

பட்ட பின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்து, ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது.

சுடர் சினம் தணிந்து குன்றம் சேர,
நிறை பறைக் குருகினம் விசும்பு உகந்து ஒழுக,
எல்லை பைபயக் கழிப்பி, முல்லை
அரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலை
இன்றும் வருவது ஆயின், நன்றும்
அறியேன் வாழி தோழி! அறியேன்,
ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி,
வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவிக்
கங்கைஅம் பேர் யாற்றுக் கரை இறந்து இழிதரும்
சிறை அடு கடும் புனல் அன்ன, என்
நிறை அடு காமம் நீந்துமாறே.

உசாத்துணை


✅Finalised Page