மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்

From Tamil Wiki
Revision as of 11:38, 28 November 2022 by Siva Angammal (talk | contribs)

This page is being created by ka. Siva

மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார், சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது ஒருபாடல் சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார் என்ற பெயரிலிருந்து இவர், மதுரை நகரை சேர்ந்தவர் என்பதையும் ஆசிரியர் என்பதையும் உணரலாம். மதுரை நூலாசிரியர் கோடங்கொற்றனார் என சில சுவடிகளில் காணப் பெறுவதால் இவர் தனிப்பாடல் மட்டுமல்லாமல் நூல்களும் இயற்றியுள்ளார்  எனக் கருதப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார் இயற்றிய ஒருபாடல் சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் 144- வது பாடலாக இடம் பெற்றுள்ளது. மகட்போக்கிய செவிலித்தாய் வருந்திக் கூறுவதான துறையில் இடம் பெற்றுள்ள ஒரே பாடல் இதுதான்.

பாடலால் அறியவரும் செய்திகள்

குறுந்தொகை 144
  • பாலைத் திணை
  • துறை:  மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது.
  • அவளின் தோழிமார், கழியிலுள்ள காவி மலர்களைப் பறித்து  வெண்ணிற அலை வீசும் கடலில் பிரியாமல் கூடி விளையாடுகின்றனர்.
  • இங்கே என் மகள் இல்லை. அங்கே மழைமேகம் தவழும் உயர்ந்த மலைக்காட்டில் கல்லுப் பரல்கள் உருத்த சென்றிருக்கிறாள்

பாடல் நடை

குறுந்தொகை 144

கழிய காவி குற்றும் கடல

வெண்டலைப் புணரி யாடியும் நன்றே

பிரிவி லாய முரியதொன் றயர

இவ்வழிப் படுதலும் ஒல்லாள் அவ்வழிப்

பரல்பாழ் படுப்பச் சென்றனள் மாதோ

சென்மழை தவழும் சென்னி

விண்ணுயர் பிறங்கல் விலங்குமலை நாட்டே.

உசாத்துணை

சங்கத் தமிழ் புலவர் வரிசை, அதியன் விண்ணத்தனார் முதலிய புலவர்கள் , புலவர் கா. கோவிந்தன், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

குறுந்தொகை 144,  தமிழ்த் துளி இணையதளம்

குறுந்தொகை 144, தமிழ் சுரங்கம் இணையதளம்