under review

பாரிமகளிர்

From Tamil Wiki

பாரிமகளிர் பாரி மன்னனின் புதல்வியர். சங்ககாலப் பெண்பாற் புலவர்கள். பாரி மகளிர் பாடிய பாடல் ஒன்று சங்கத்தொகை நூலான புறநானூற்றில் உள்ளது.

பார்க்க: கபிலர்

வாழ்க்கைக் குறிப்பு

பிரான்மலை என அழைக்கப்படும் பரம்புமலை சூழ்ந்த முந்நூறு ஊர்களைக் கொண்ட நாட்டின் மன்னனாக இருந்த பாரி மன்னனின் மகளிர் இருவர். பிற்கால நூல்கள் இவர்கள் அங்கவை, சங்கவை என்ற பெயருடையவர்கள் எனக் கூறும். பாரி இறந்தபின் கபிலர் அவர்களைத் திருமணத்தின் பொருட்டு அழைத்துக் கொண்டு ஊர் ஊராகச் சென்று அம்மகளிரை மணப்பதற்குரிய அரசக் குடியினரிடம் மணம் செய்து கொள்ள வேண்டினார். விச்சிக்கோன் என்பானிடம், இருங்கோ வேள் என்பானிடமும் சென்று வேண்டினார். யாரும் முன் வராததால் இறுதியில் அம்மகளிரைப் பார்ப்பனரிடம் சேர்த்துவிட்டு வடக்கிருந்து உயிர் விட்டார்.

இலக்கிய வாழ்க்கை

பாரி மன்னன் கொல்லப்பட்ட பின்பு புலவர் கபிலர் அவர்களை அழைத்துச் சென்ற போது பாரி மகளிர் பாடிய பாடல் புறநானூற்றில் 112-ஆவது பாடலாக உள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்
  • “கடந்த முழுநிலா நாளன்று எங்களுடன் தந்தை இருந்தார். இன்று இல்லை. எம்முடைய குன்றமும் எங்களுடையதாக இருந்தது. எம் குன்றத்தையும் வென்ற வேந்தர்கள் கைப்பற்றிக்கொண்டனர்.” என பாரி மகளிர் வருந்துவதாக பாடல் உள்ளது.

பாடல் நடை

(திணை: பொதுவியல்) (துறை: கையறு நிலை)

அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்,
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில்,
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!

உசாத்துணை


✅Finalised Page