ந. பிச்சமூர்த்தி

From Tamil Wiki
Na Pichamurthy.jpg

ந. பிச்சமூர்த்தி (ஆகஸ்ட் 15, 1900 - டிசம்பர் 4, 1976) வாழ்விலும் படைப்பிலும் கு.ப.ரா.வுடன் (கு.ப. ராஜகோபாலன்) இணைந்து செயல்பட்டு, அவருடைய இரட்டையர் என்று கூறப்பட்டவர். புதுக்கவிதையின் தந்தை என்று அறியப்படுபவர்; கட்டுரையாளர், சிறுகதைகள், நாடகங்கள், இலக்கியத் திறனாய்வுகள் எழுதியுள்ளார். கு.ப.ரா.வின் கதைகளுக்குரிய அதே தளத்தில் ஆனால், சற்று தத்துவார்த்தச் சாயலுடன் எளிய மக்களைப் பற்றி ஆழ்ந்த மனிதாபிமானத்துடன் எழுதியவர் பிச்சமூர்த்தி.

தனி வாழ்க்கை

வேங்கட மகாலிங்கம் என்ற இயற்பெயரை உடைய ந.பிச்சமூர்த்தி, 1900ம் வருடம், ஆகஸ்ட் 15 ம் தேதி, கும்பகோணத்தில் நடேச தீட்சிதர், காமாட்சியம்மா தம்பதிக்கு நான்காவது குழந்தையாக பிறந்தவர். இவருக்கு முன் பிறந்த மூன்று குழந்தைகளும் இறந்து விடவே, பெற்றோர் இவருக்கு பிச்சை என்று பெயரிட்டுஅழைத்தனர். இந்த பெயரே பின்னாளில் ந.பிச்சமூர்த்தி ஆகியது.

ந.பிச்சமூர்த்தியின் தந்தை, இவருக்கு ஏழு வயதாகும் போது இறந்து விட்டார். தாயின் பராமரிப்பில் வளர்ந்த பிச்சமூர்த்தி, கும்பகோணம் டவுன் ஹைஸ்கூலில் உயர்கல்வி கற்று பின் நேட்டிவ் கலாசாலையில் தத்துவத்தில் பி.ஏ பட்டம் பெற்றார். அதன்பின் சென்னையில் சட்டம் படித்து, 1924ம் ஆண்டு முதல் கும்பகோணத்தில் வக்கீல் தொழிலில் ஈடுபட்டிருந்தார். வக்கீல் தொழில் தனக்கு பொருந்தவில்லை என கருதி, அத்தொழிலை 1938ல் விட்டு விட்டார். 1938 ம் ஆண்டின் பிற்பகுதியில் சுமார் ஏழு மாத காலம் ஹனுமான் பத்திரிக்கையின் உதவி ஆசிரியராக பணியாற்றினார். பின் அப்பணியிலிருந்தும் விலகி, 1939ல் இந்து அறநிலையத்துறையில் அதிகாரியாக சேர்ந்தார். 1956 ம் ஆண்டு பணி ஓய்வு பெற்ற பின் நவ இந்தியா தினசரியில் உதவி ஆசிரியராக சேர்ந்தார்.

1924ம் ஆண்டு, சாரதா என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்த பின்னும் துறவு வாழ்க்கையை விரும்பி அலைந்திருக்கிறார். 1935ம் ஆண்டு, திருவண்ணாமலையில் ரமண மகிரிஷையையும் சித்தர் குழந்தைசாமியையும் சந்தித்து துறவு நிலை அருளுமாறு வேண்ட, அவர்கள் இவருக்கு மண வாழ்வே ஏற்றது என்று கூறிவிட்டனர்.

இடையில் 1938ம் ஆண்டு வெளி வந்த ஸ்ரீ ராமானுஜர் திரைப்படத்தில் ஆளவந்தார் வேடத்தில் நடித்திருக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

இலக்கிய படைப்புகள்

ந. பிச்சமூர்த்தியின் முதல் கதை "சயன்ஸுக்கு பலி" கலைமகள் இதழில் வெளி வந்தது. பின்னர் 1933ல் கலைமகள் நடத்திய சிறுகதை போட்டியில் பரிசு பெற்ற இவரது சிறுகதை "முள்ளும் ரோஜாவும்" இவரை இலக்கிய உலகில் அறிமுகப்படுத்தியது.

இலக்கிய இடம்

வாழ்விலும் படைப்பிலும் கு.ப.ரா.வுடன் இணைந்து செயல்பட்டு, அவருடைய இரட்டையர் என்று கூறப்பட்டவர். நவீன தமிழ்ச்சிறுகதை, புதுக்கவிதை ஆகியவற்றுக்கான அழகியல் அடிப்படைகளை உருவாக்கியதில் ந.பிச்சமூர்த்தியின் பங்கு முக்கியமானது. அவரது கவிதைகள் பெரும்பாலும் பாரதி வழி வந்த உருவக கவிதைகள். ந.பிச்சமூர்த்தியின் "காவல்" போன்ற கதைகள் அடித்தள மக்களின் வாழ்க்கையை ஆர்பாட்டமில்லாமல் சொன்னவை. இன்றைய தலித் இலக்கியத்திற்கே அடிப்படையாக அமையும் சில கதைகள கூட ந.பிச்சமூர்த்தியின் புனைவுலகில் உள்ளன என்று எழுத்தாளர் ஜெயமோகன் கூறுகிறார்.

படைப்புகள்

சிறுகதைகள்

  • பதினெட்டாம் பெருக்கு (1944)
  • ஜம்பரும் வேஷ்டியும் (1947)
  • மோஹினி (1951)
  • குடும்ப ரகசியம் (குறு நாவல்) (1959
  • மாங்காய் தலை (1961)
  • இரட்டை விளக்கு (1967)
  • காக்கைகளும் கிளிகளும் (சிறுவர் கதைகள்) (1977)
  • காபூலிக் குழந்தைகள்

கவிதைகள்

  • காட்டுவாத்து (1962)
  • வழித்துணை (1964)
  • குயிலின் சுருதி (1970)
  • கோடை வயல்

கட்டுரைகள்

மனநிழல் (1977)

நாடகங்கள்

  • காளி (1946)



இறுதிக்காலம்

உசாத்துணைகள்