under review

ந. பிச்சமூர்த்தி

From Tamil Wiki
Revision as of 14:28, 25 January 2022 by NVKalpakam (talk | contribs)


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.


Na Pichamurthy.jpg

ந. பிச்சமூர்த்தி (ஆகஸ்ட் 15, 1900 - டிசம்பர் 4, 1976) வாழ்விலும் படைப்பிலும் கு.ப.ரா.வுடன் (கு.ப. ராஜகோபாலன்) இணைந்து செயல்பட்டு, அவருடைய இரட்டையர் என்று கூறப்பட்டவர். புதுக்கவிதையின் தந்தை என்று அறியப்படுபவர்; கட்டுரையாளர், சிறுகதைகள், நாடகங்கள், இலக்கியத் திறனாய்வுகள் எழுதியுள்ளார். கு.ப.ரா.வின் கதைகளுக்குரிய அதே தளத்தில் ஆனால், சற்று தத்துவார்த்தச் சாயலுடன் எளிய மக்களைப் பற்றி ஆழ்ந்த மனிதாபிமானத்துடன் எழுதியவர் பிச்சமூர்த்தி.

தனி வாழ்க்கை

வேங்கட மகாலிங்கம் என்ற இயற்பெயரை உடைய ந. பிச்சமூர்த்தி, 1900ம் ஆண்டு, ஆகஸ்ட் 15 அன்று கும்பகோணத்தில் நடேச தீட்சிதர், காமாட்சியம்மா தம்பதிக்கு நான்காவது குழந்தையாக பிறந்தவர். இவருக்கு முன் பிறந்த மூன்று குழந்தைகளும் இறந்து விடவே, பெற்றோர் இவருக்கு பிச்சை என்று பெயரிட்டுஅழைத்தனர். இந்த பெயரே பின்னாளில் ந. பிச்சமூர்த்தி ஆகியது.

ந. பிச்சமூர்த்தியின் தந்தை, இவருக்கு ஏழு வயதாகும்போது இறந்து விட்டார். தாயின் பராமரிப்பில் வளர்ந்த பிச்சமூர்த்தி, கும்பகோணம் டவுன் ஹைஸ்கூலில் உயர்கல்வி கற்று பின் நேட்டிவ் கலாசாலையில் தத்துவத்தில் பி.ஏ பட்டம் பெற்றார். அதன்பின் சென்னையில் சட்டம் படித்து, 1924ம் ஆண்டு முதல் கும்பகோணத்தில் வக்கீல் தொழிலில் ஈடுபட்டிருந்தார். வக்கீல் தொழில் தனக்கு பொருந்தவில்லை என கருதி, அத்தொழிலை 1938ல் விட்டு விட்டார். 1938ம் ஆண்டின் பிற்பகுதியில் சுமார் ஏழு மாத காலம் ஹனுமான் பத்திரிக்கையின் உதவி ஆசிரியராக பணியாற்றினார். சுமார் ஆறு மாத காலம் குடந்தை நகர சபை அங்கத்தினராகவும் பதவி வகித்துள்ளார். பின் அப்பணியிலிருந்தும் விலகி, 1939ல் இந்து அறநிலையத்துறையில் அதிகாரியாக சேர்ந்தார். 1956ம் ஆண்டு பணி ஓய்வு பெற்ற பின் நவ இந்தியா தினசரியில் உதவி ஆசிரியராக சேர்ந்தார்.

1924ம் ஆண்டு, சாரதா என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்த பின்னும் துறவு வாழ்க்கையை விரும்பி அலைந்திருக்கிறார். 1935ம் ஆண்டு, திருவண்ணாமலையில் ரமண மகிரிஷையையும் சித்தர் குழந்தைசாமியையும் சந்தித்து துறவு நிலை அருளுமாறு வேண்ட, அவர்கள் இவருக்கு மண வாழ்வே ஏற்றது என்று கூறிவிட்டனர். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உண்டு.

இடையில் 1938ம் ஆண்டு வெளி வந்த ஸ்ரீ ராமானுஜர் திரைப்படத்தில் ஆளவந்தார் வேடத்தில் நடித்திருக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

இலக்கிய படைப்புகள்

ந. பிச்சமூர்த்தியின் முதல் கதை "சயன்ஸுக்கு பலி" கலைமகள் இதழில் 1932ம் ஆண்டு வெளி வந்தது. ஆனால் 1933ல் கலைமகள் நடத்திய சிறுகதை போட்டியில் பரிசு பெற்ற இவரது சிறுகதையான "முள்ளும் ரோஜாவும்" தான் இவருக்கு பரவலான அறிமுகத்தை பெற்று தந்தது.

இதற்கும் முன் 1922ம் ஆண்டிலேயே "இளைஞன்" மற்றும் "நாஸ்திகன் கடிதம்" என்னும் இரு கதைகளை ஆங்கிலத்தில் எழுதினார்.பின்னர் 1933ல், இவ்விரு கதைகளையும் "மோஹினி" மற்றும் "ஆராய்ச்சி" என்ற பெயர்களில் தமிழில் வெளியிட்டார். இவரது முதல் சிறுகதை தொகுப்பு பதினெட்டாம் பெருக்கு 1944ல் வெளி வந்தது.

இவரது முதல் கவிதை "காதல்" 1934ம் ஆண்டு வெளியானது. இதன் பின் மணிக்கொடி, கலைமகள், சுதந்திர சங்கு ஆகிய இதழ்களில் பல கதை, கவிதை, கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ரேவதி, பிக்ஷ (bikshu) போன்ற புனை பெயர்களிலும் எழுதியுள்ளார்.

இலக்கிய இடம்

வாழ்விலும் படைப்பிலும் கு.ப.ரா.வுடன் இணைந்து செயல்பட்டு, அவருடைய இரட்டையர் என்று கூறப்பட்டவர். நவீன தமிழ்ச்சிறுகதை, புதுக்கவிதை ஆகியவற்றுக்கான அழகியல் அடிப்படைகளை உருவாக்கியதில் ந.பிச்சமூர்த்தியின் பங்கு முக்கியமானது. அவரது கவிதைகள் பெரும்பாலும் பாரதி வழி வந்த உருவக கவிதைகள். ந.பிச்சமூர்த்தியின் "காவல்" போன்ற கதைகள் அடித்தள மக்களின் வாழ்க்கையை ஆர்பாட்டமில்லாமல் சொன்னவை. இன்றைய தலித் இலக்கியத்திற்கே அடிப்படையாக அமையும் சில கதைகள் கூட ந.பிச்சமூர்த்தியின் புனைவுலகில் உள்ளன என்று எழுத்தாளர் ஜெயமோகன் கூறுகிறார்.

படைப்புகள்

சிறுகதைகள்

  • பதினெட்டாம் பெருக்கு
  • ராகு கேது
  • தாய்
  • வானம்பாடி
  • ஆராய்ச்சி
  • மருதாணி விரலெங்கே? அழகெங்கே?
  • விழிப்பு
  • முள்ளும் ரோஜாவும்
  • சொக்கு
  • மீனி
  • புருஷன் எழுதின கதை
  • காபூலிக் குழந்தைகள்
  • அடகு
  • அரைப்பைத்தியம்
  • மீனலோசனி
  • ஜம்பரும் வேஷ்டியும்
  • மோஹினி
  • குடும்ப ரகசியம் (குறு நாவல்)
  • மாங்காய் தலை
  • இரட்டை விளக்கு
  • காக்கைகளும் கிளிகளும் (சிறுவர் கதைகள்)
  • வானம்பாடி
  • தரிசனம்
  • பலூன் பைத்தியம்
  • நெருப்புக் கோழி
  • புலியின் வரிகள்
  • முதல் பிடில்
  • காவல்
  • வெறும் செருப்பு
  • ஞானப்பால்

கவிதைகள்

  • காட்டு வாத்து (1962)
  • வழித்துணை (1964)
  • குயிலின் சுருதி (1970)
  • கோடை வயல்

கட்டுரைகள்

மனநிழல் (1977)

நாடகங்கள்

  • காளி (1946)

இறுதிக்காலம்

ந. பிச்சமூர்த்தி, நவம்பர் 15, 1976 ம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு சென்னையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மூன்று வார கால தீவிர சிகிச்சைக்குப் பின் டிசம்பர் 4, 1976 அன்று நினைவு திரும்பாமலேயே காலமானார்.

உசாத்துணைகள்

  • இந்திய இலக்கிய சிற்பிகள் , ந. பிச்சமூர்த்தி - அசோகமித்திரன், சாகித்ய அகாடமி, புது தில்லி, 2002.