நெடும்பல்லியத்தை
நெடும்பல்லியத்தை, சங்ககாலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவரது 2 பாடல்கள் சங்கத் தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன.
வாழ்க்கைக் குறிப்பு
நெடும்பல்லியத்தை, புறநானூறு நூலிலுள்ள 64- வது பாடலைப் பாடிய நெடும்பல்லியத்தனார் என்னும் புலவரின் சகோதரியாக இருக்கலாம். பல்லியம் என்பது இசைக்கருவிகள் ஆகும். ஆகவே இவர்கள் இருவரும் இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கருதுகின்றனர்.
நெடும்பல்லியத்தை இயற்றிய பாடல்கள் இரண்டும் அகத்திணையில் மருதத்திணைப் பொருள் கொண்டவை. அவை குறுந்தொகை 178 மற்றும் 203 ஆகியவை.
இலக்கிய வாழ்க்கை
நெடும்பல்லியத்தை, சங்க இலக்கியத் தொகை நூலான குறுந்தொகையின் 178 மற்றும் 203- வது பாடல்களை இயற்றியுள்ளார்.
பாடல் சொல்லும் செய்திகள்
குறுந்தொகை 178
- மருதத் திணை
- கடிநகர் புக்கதோழி தலைமகன் புணர்ச்சி விதும்பல் கண்டு முன்னர் களவு காலத்து ஒழுக்கலாற்றினை நினைத்து அழிந்து கூறியது.
- அயிரைமீன் நீந்தும் குளத்தில் பூத்துள்ள திரண்ட தண்டுடைய ஆம்பல் மலரைப் பறிப்பவர்கள் தாகத்தில் தவித்ததுபோல தலைவின் மார்பினடத்து துயின்ற தலைவன் நடுக்கமுற்றான்.
- கன்னியர் காண்பதற்கு அரிதான மூன்றாம் பிறையைப் போலத் தோன்றினீர்கள். நாங்கள் வருந்துகிறோம் எனத் தோழி கூறினாள்.
- அக்காலத்தில் கன்னியர். மூன்றாம் பிறையைக் காண்பது ஒரு மரபாக இருந்ததை அறிய முடிகிறது.
குறுந்தொகை 203
- மருதத்திணை, தலைவி கூற்று
- வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைவி சொல்லியது
- தலைவர் மலைகள் இடையே நின்று அவற்றை கடந்து செல்லவேண்டிய தொலைநாட்டைச் சேர்ந்தவர் அல்ல. மரங்களின் உச்சி மறைத்தலால் கண்ணிற்கு எட்டாத தொலைவில் இருப்பவரும் அல்லர்.
- நினைத்தவுடன் கடவுளைக் காணும் அண்மையில் இருந்தாலும் காண முடியாதவலானேன்.
- உள்ளூரிலேயே பரத்தையர் இல்லத்தில் தங்கியுள்ள தலைவனை எண்ணி தலைவி வருந்துவதான பாடல்.
பாடல்கள் நடை
குறுந்தொகை 178
அயிரை பரந்த அந்தண் பழனத்
தேந்தெழின் மலர தூம்புடைத் திரள்கால்
ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்கிவள்
இடைமுலைக் கிடந்து நடுங்க லானீர்
தொழுதுகாண் பிறையிற் றோன்றி யாநுமக்
கரிய மாகிய காலைப்
பெரிய தோன்றினிர் நோகோ யானே.
குறுந்தொகை 203
மலையிடை யிட்ட நாட்டரு மல்லர்
மரந்தலை தோன்றா ஊரரு மல்லர்
கண்ணிற் காண நண்ணுவழி யிருந்தும்
கடவுள் நண்ணிய பாலோர் போல
ஒரீஇ ஒழுகும் என்னைக்குப்
பரியலென் மன்யான் பண்டொரு காலே.
உசாத்துணை
- மகடூ முன்னிலை, பெண்பாற் புலவர் களஞ்சியம், டாக்டர் தாயம்மாள் அறவாணன், பச்சை பசேல் பதிப்பகம்
- எட்டுத்தொகை, தமிழ் இணையக் கல்விக்கழகம்
- எட்டுத்தொகை நூல்கள், தமிழ் சுரங்கம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.