நீர்ச்சுடர் (வெண்முரசு நாவலின் பகுதி - 23)
நீர்ச்சுடர்[1] ('வெண்முரசு’ நாவலின் பகுதி - 23) உப பாண்டவர்கள் இறந்த பின்னர் கௌரவர்களுக்கும் தங்கள் மைந்தர்களுக்கும் நீர்க்கடன் செய்வது வரையிலான நிகழ்வுகளை விளக்குகிறது.
பதிப்பு
இணையப் பதிப்பு
'வெண்முரசு’ நாவலின் 23-வது பகுதியான நீர்ச்சுடர் எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் செப்டம்பர் 2019 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு நவம்பர் 2019-ல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.
ஆசிரியர்
'வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.
கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்
குருஷேத்திரப்போர் பாரதவர்ஷத்தின் பெரும்பகுதியைச் சுடுகாடாக்கி விட்டது. பாரதவர்ஷத்தின் பெரும்பகுதி நிலம் மாபெரும் மரணவீடாகக் காட்சியளிக்கிறது. பாண்டவர், கௌரவர் ஆகிய இரண்டு தரப்புகளிலும் எஞ்சியிருப்போரே இறந்தவர்களைப் பற்றிய அதிரும் நினைவுகளை இழந்தோருக்கு ஏற்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். அர்சுனனைப் பார்க்கும்போது அபிமன்யூவின் மரணத்தை நினைவில்கொள்ள நேர்கிறது. அதனைத் தொடர்ந்த லட்சுமணனின் மரணமும் நிழலாகப் படரத் தொடங்குகிறது. போர் மரணங்கள் ஒரு சங்கிலிப் பின்னல்போல ஒன்றைத் தொட்டு ஒன்றென வெவ்வேறு அதிரும் நினைவுகளை எழுப்புகின்றன.
விஜயை தன் மகன் சுகோத்ரனிடம் (சகதேவனின் மகன்), "அஸ்தினபுரியின் மணிமுடிக்குரியவன் நீ" எனக் கூறி அவனை மன்னனாக்க விரும்புகிறாள். ஆனால், அவனோ குடியையும் குலத்தையும் தானே துறந்துவிடுகிறான்.
நாவல் ஓட்டத்தில், ஊடுபாவாகக் குருஷேத்திரப் போரின் பின்விளைவுகள் விவரிக்கப்படுகிறது. ஒரு பெரும் போர் எவ்வாறெல்லாம் நாட்டைச் சீரழிக்கும் என்பதையும் எளிய குடிகள் தம் மொத்த வாழ்வையும் போரை முன்னிட்டு எவ்வாறு சிலதலைமுறை காலத்துக்கு இழக்கிறார்கள் என்பதையும் விவரித்துள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன். இறந்தோர் மறுஉலகை அடைவதற்குரிய கடமைகளை இழந்தோர் தன்னைச் சார்ந்தோரின் ஒப்புதலைப் பெற்று நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. நீத்தார் கடன் – மறுவுலகு – இறந்தோருக்கும் இழந்தோருக்குமான மனப்போராட்டம் என இந்த மூன்று தரப்புகளிலும் சுழல்கிறது இந்த 'நீர்ச்சுடர்’.
'வெண்முரசு’ நாவலின் 'நீர்ச்சுடர்’ என்ற இந்தப் பகுதியில்தான் யுயுத்ஸு பேருருக்கொள்கிறார். கௌரவர்களுள் மிக இளையவரான இவர் விதுரரைப் போலவும் கர்ணனைப் போலவும் பிறப்பால் ஓரடி விலக்கித் தள்ளியே எல்லோராலும் பார்க்கப்பட்டவர். கர்ணனைப் போலவே தன் மனைவியால் புறக்கணிக்கப்பட்டவர் யுயுத்ஸு. கௌரவர்களின் முற்றழிவில் விடிவெள்ளியாய் நின்று அஸ்தினபுரிக்கு நம்பிக்கை ஒளியாய் இருப்பவர் இவர் ஒருவரே. அவரிடமே பெரும்பொறுப்புகளைக் கையளிக்கிறார் தர்மர்.
'போர் நிறைவுற்றது; இனி நீர்க்கடனுக்குப் பின்னர் இயல்புவாழ்வு திரும்பும்’ என்று அனைவரும் எண்ணிக்கொண்டிருந்த பொழுதில், 'அஸ்வத்தாமனின் நுதல்விழியைக் கொண்டுவந்தால்தான் போர் முடிவுக்கு வரும்’ என்று திரௌபதி ஆணையிடுகிறாள். அர்சுனன் தயங்குகிறான். ஆனால், உடனே, அந்த ஆணைக்கு அடிபணிந்து, பீமன் புறப்படுகிறான். பீமனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் போர்நிகழ்ந்தால் பீமன் அழிவது உறுதி என்பதை உணர்ந்த அர்சுனன், பீமனைக் காப்பதற்காகவே தான் அஸ்வத்தாமனுடன் போரிடுகிறான். போர் நிகர்நிலையை அடைகிறது. அஸ்வத்தாமன் தன்னுடைய நுதல்விழியைத் தானே அர்சுனனுக்கு அளிக்க முனைகிறான். அர்சுனன் அதனைப் பெறத் தயங்குகிறான். ஆனால், அதைப் பீமன் பெற்றுக் கொள்கிறான்.
நீர்க்கடன் நிகழ்வின் போது பேரரசி குந்தி தேவி வருகிறார். பெண்கள் அங்கு வருவது முறையல்ல எனினும் அங்கு வந்து ஒரு வரலாற்று உண்மையை உரைத்துச் செல்கிறார். கர்ணனைத் தன் மூத்த மகன் என்று உரைத்து, தர்மரிடம், 'அவனுக்கும் சேர்த்து நீர்க்கடன் செய்’ என ஆணையிடுகிறார்.
திருதராஷ்டிரர் சஞ்சயனை முற்றாக விலக்கிவிடுகிறார். அவரின் மனநிலையைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அப்போது சஞ்சயனின் புன்னகை, இளைய யாதவரின் புன்னகையைப் போலவே இருக்கிறது.
கதை மாந்தர்
யுயுத்ஸு, பீமன், அஸ்வத்தாமன் ஆகியோர் இதில் முதன்மைக் கதைமாந்தர்களாகவும் சுபத்திரை, தர்மர், விஜயை, சகாதேவனின் மகன் சுகோத்ரன், குந்தி, திருதராஷ்டிரர், சஞ்சயன் ஆகியோர் துணைமைக் கதைமாந்தர்களாகவும் இடம்பெற்றுள்ளனர்.
உசாத்துணை
- வெண்முரசு விவாதங்கள் (venmurasudiscussions.blogspot.com)
- முனைவர் ப. சரவணன் | Search Results | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
- 'நீர்ச்சுடர்’ வாசிப்பு - முனைவர் ப. சரவணன் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
இணைப்புகள்
✅Finalised Page