under review

நடராஜகுரு

From Tamil Wiki
நடராஜகுரு
நடராஜகுரு

நடராஜகுரு (முனைவர் பி.நடராஜன்) (18 பெப்ருவரி 1895 – 19 மார்ச்1973) ஆன்மிகவாதி, தத்துவ அறிஞர். அத்வைதி. நாராயண குருவின் மாணவர். நாராயணகுருவின் தத்துவார்த்தமான செய்தியை விரிவுபடுத்தி அனைத்து மக்களுக்கும் உரியதாக ஆக்கினார், அவரின் சிந்தனைகளை கேரள எல்லையிலிருந்து விடுவித்து உலகம் முழுக்க கொண்டு சென்றவர். நாராயணகுருவின் சிந்தனைகளை மேலைநாட்டுச் சிந்தனையாளர்களுடன் இணைத்து உரையாடி கீழைமேலைச் சிந்தனைச் சந்திப்பை உருவாக்கினார். நித்ய சைதன்ய யதியின் ஆசிரியர்

பிறப்பு, கல்வி

முன்னோர்

நாராயண குரு வின் கொள்கைகளைப் பரப்புவதற்காக உருவாக்கப்பட்ட ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம்(SNDP) அமைப்பின் நிறுவனரான டாக்டர் பல்பு ( டாக்டர் பத்மநாபன்) வின் ஐந்து குழந்தைகளில் ஒருவர் நடராஜ குரு. டாக்டர் பல்பு பண்டைய திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தின் செல்வந்தர்களாகிய ஈழவக்குடும்பத்தில் பிறந்தவர். மருத்துவப் படிப்புக்கு திருவிதாங்கூரில் அனுமதி மறுக்கப்படவே பல்பு 1885ல் சென்னை மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். லண்டன் கேம்பிரிட்ஜ் பள்ளியில் மருத்துவத்தில் உயர்படிப்பை முடித்தபின் பண்டைய மைசூர் சமஸ்தானத்தின் மருத்துவத் தலைமையதிகாரியாக ஆனார். பிரிட்டிஷ் அரசின் தொற்றுநோய் மருத்துவ கழகத்தின் உறுப்பினராக இலங்கையில் பணியாற்றினார். பணி ஓய்வுக்குப்பின் பரோடா சம்ஸ்தானத்தின் திவான் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது, அவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தார்

பிறப்பு

டாக்டர் பல்புவுக்கு மூன்றாவது குழந்தையாக 18 பெப்ருவரி 1895-ல் பெங்களூரில் நடராஜகுரு பிறந்தார். அன்னையின் பெயர் பகவதி அம்மா. நடராஜ குருவுக்கு கங்காதரன் என்னும் அண்ணனும் அனந்தலட்சுமி என்னும் அக்காவும் ஹரிஹரன் என்னும் தம்பியும் தாட்சாயணி என்னும் தங்கையும் உண்டு.

கல்வி

நடராஜகுரு பெங்களூரில் ஆரம்பக் கல்வி பயின்றார். பின்னர் கண்டியிலும் திருவனந்தபுரத்திலும் உயர்நிலைக் கல்வி முடித்தார். சென்னை மாகாணக் கல்லூரியில் 1922ல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

நாராயண குருவின் மாணவராகச் சேர்ந்து அங்கே குருகுல முறைப்படி சிலகாலம் பயின்றபின் நாராயண குருவின் ஆதரவுடன் பிரான்ஸில் சார்போன் பல்கலையில் புகழ்பெற்ற தத்துவ அறிஞர் ஹென்றி பெர்க்ஸனின் மாணவராக 1928 முதல் 1933 வரை ஆய்வுசெய்து பயிற்றியலில் முனைவர் பட்டம் பெற்றார். Le Facteur Personnel dans le Processus Educatif (Personal factor in Education) என்ற தலைப்பில் ஐந்தாண்டுகள் ஆராய்ச்சி செய்து தன் ஆய்வைச் சமர்ப்பித்தார். கல்வியியல் குறித்த அவரது ஆய்வு யுனெஸ்கோ அமைப்பினால் உலக கல்வி முன்வரைவுக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவருக்கு சிறப்பு பாராட்டுகளுடன் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. குருகுலக் கல்விமுறை பற்றியது அந்த ஆய்வு.

கல்விப்பணி

நடராஜ குரு ஆய்வுமாணவராக இருந்த காலகட்டத்தில் 1930 முதல் 1932 வரை சுவிட்சர்லாந்தில் ஜெனிவா International Fellowship School in Geneva, Switzerland என்னும் கல்லூரியில் நிலவியல் பயிற்றுவிக்கும் ஆசிரியராகப் பணியாற்றினார்.

1933 ல் சார்போனில் கல்வி முடித்து திரும்பி வந்த நடராஜ குரு வற்கலாவில் தொடங்கப்பட்ட ஶ்ரீ நாராயண உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக ஓராண்டு பணியாற்றினார்

ஆன்மிகம்

நாராயணகுருவுடன்

முதுகலைப் பட்டத்திற்காகப் படித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் 1922ல் நடராஜகுரு நாராயணகுருவைச் சந்தித்தார். அவரைத் தன் பணிக்கு அளிக்கும்படி நாராயண குருவே டாக்டர் பல்புவிடம் கோரினார். அதன்பின் நடராஜகுரு அவருடன் வர்க்கலை ஆசிரமத்தில் தங்கினார். நாராயணகுருவின் சீடராக இருந்து கீழைத் தத்துவத்தைக் கற்றார். நாராயணகுருவுடன் மருத்துவாழ்மலையில் ஒரு குகையில் சிறிதுகாலம் தங்கியிருந்தார். நாராயணகுருவின் தத்துவ நூல்கள் பலவும் நடராஜ குருவுக்கு கற்பிக்கும் பொருட்டு கூறப்பட்டு நடராஜ குருவால் எழுதியெடுக்கப்பட்டவை.

நாராயணகுருவுடன் இருந்த காலகட்டத்தில் அங்கிருந்த பிறர் நடராஜகுருவை ஏற்கவில்லை. நாராயணகுருவின் விருப்பப்படி 1923ல் நடராஜ குரு சென்னைக்குச் சென்றார். 1924 ல் நீலகிரியில் ஒரு குருகுல அமைப்பை உருவாக்கி நாராயண குருகுலம் என பெயரிட்டார். அங்கே மாணவர்களுக்கு கல்வி கற்பித்தார்.1926ல் நாராயண குரு நோயுறவே மீண்டும் வற்கலாவுக்குச் சென்று நாராயண குருவுடன் தங்கினார். நாராயண குருவின் ஆணைப்படி தத்துவக் கல்வி பயில பிரான்ஸ் சென்றார். நடராஜ குரு பிரான்ஸில் இருக்கையில் நாராயண குரு 1928ல் சமாதியானார்

தத்துவத்தில் பட்டம்பெற்று திரும்பி வந்த நடராஜ குருவுக்கும் நாராயணகுருவின் எஸ்.என்.டி.பி அமைப்புக்கும் நடுவே முரண்பாடுகள் ஏற்பட்டன. எஸ்.என்.டி.பி ஒரு ஈழவ சாதி அமைப்பாக மாறுவதையும் அரசியல் கட்சியாக மாற்றப்படுவதையும் எதிர்த்து அவ்வமைப்பை விட்டு நடராஜ குரு வெளியேறினார். இந்தியா முழுவதும் பல இடங்களில் அலைந்து திரிந்தார்

நாராயண குருகுலம்

நடராஜகுரு 1935ல் ஊட்டிக்கு வந்தார். ஊட்டியில் பிச்சை ஏற்று தனியாக வாழ்ந்தார். ஊட்டி ஃபெர்ன் ஹில் பகுதியில் ஒரு தேயிலை தொழிற்சாலை இருந்த பகுதியை ஒரு தமிழ் வணிகரிடமிருந்து தானமாக பெற்று அதில் தன் கையாலேயே மண்ணாலும் தகரத்தாலும் கட்டப்பட்ட குடிசையில் நாராயணகுருகுலத்தை மீண்டும் தொடங்கினார். அங்கே அனாதைக்குழந்தைகளுக்கான ஒரு கல்விநிறுவனத்தை உருவாக்கினார். ஆனால் அதை முன்னெடுக்க முடியவில்லை.

ஜெனிவாவில் இருந்து வெளிவந்துகொண்டிருந்த The Sufi Quarterly என்னும் இதழில் 1928 முதல் குரு நாராயண குரு பற்றி எழுதிய The Path of The Guru என்னும் நூல் படிப்படியாக புகழ்பெற்றது. (பின்னர் The Word of Guru என்ற பேரில் நூலாகியது) 1949 முதல் 1951 வரை நடராஜ குரு ஐரோப்பியப்பயணம் ஒன்றை மேற்கொண்டார். அவருடைய தத்துவ உரைகள் புகழ்பெற்றன. 1952 ல் ஹென்றி பெர்க்ஸனின் மாணவரான ஜான் ஸ்பியர்ஸ் நடராஜ குருவின் மாணவரானார். நித்ய சைதன்ய யதி 1953 ல் நடராஜ குருவின் மாணவராகி அவருடன் தங்கினார். 1955 முதல் நடராஜ குருவின் சிந்தனைகளை வெளியிடும்பொருட்டு அவருடைய மாணவர் ஜான் ஸ்பியர்ஸ் Values என்னும் இதழை தொடங்கினார். நாராயண குருகுலம் தீவிரமாகச் செயல்படலாயிற்று.

1956ல் நடராஜ குரு இரண்டாவது உலகப்பயணம் மேற்கொண்டபோது அவருக்கு ஏராளமான மாணவர்கள் அமைந்தனர். நாராயண குருகுலத்திற்கு பிரான்ஸிலும் பிரிட்டனிலும் கிளைகள் அமைந்தன. வற்கலாவில் தலைமையகம் தொடங்கப்பட்டது. 1970. நித்ய சைதன்ய யதி நடராஜகுருவால் அடுத்த குருவாக தேர்வுசெய்யப்பட்டார். நடராஜகுருவின் சமாதிக்குப்பின் நித்ய சைதன்ய யதி குருகுலத்தின் தலைவராக ஆனார்.

நடராஜ குரு உருவாக்கிய நாராயண குருகுலம் நாராயண குரு உயிருடன் இருந்தபோது அவருடைய தந்தை டாக்டர் பல்புவின் முன்முயற்சியால் உருவாக்கப்பட்ட ஶ்ரீநாராயண தர்ம பரிபாலன சபாவிற்கும் நாராயண தர்ம சமிதிக்கும் தொடர்பற்ற தனி அமைப்பு. ஶ்ரீநாராயண தர்ம பரிபாலன சபாவின் அரசியல், சாதியச் சமூகச் செயல்பாடுகளுடன் நாராயண குருகுலம் உடன்படவில்லை. சாதி, மதம், அரசியல் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட தூய அத்வைத ஞானத்தை முன்வைக்கும் ஒரு ஆன்மிகப் பண்பாட்டுக் கல்வியமைப்பாகவே அது உருவகிக்கப்பட்டுள்ளது.

நாராயண குருகுலம் வர்க்கலா
நடராஜ குரு மாணவர்களுடன்
ஈஸ்ட் வெஸ்ட் யூனிவர்சிட்டி

நடராஜகுரு கீழைச்சிந்தனைகளும் மேலைச்சிந்தனைகளும் ஒன்றுடனொன்று உரையாடுவதே எதிர்காலத்திற்குரிய ஆன்மிகத்தை உருவாக்கும் என்று நம்பினார். உலகதத்துவங்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் பொதுக்கோட்பாடு ஒன்று உருவாகவேண்டும் என விரும்பினார். ஆல்பிரட் நார்த் வைட்ஹெட் போன்றவர்களுடன் அது குறித்து உரையாடலில் இருந்தார். அதன்பொருட்டு அவர் உருவாக்கிய கல்வியமைப்பு 'ஈஸ்ட் வெஸ்ட் யூனிவர்சிட்டி' . ஒட்டுமொத்த தத்துவப்பார்வையை கற்பிக்கக்கூடிய ஒன்றாக இந்த கல்விநிறுவனம் செயல்படவேண்டும் என நடராஜகுரு ஆசைப்பட்டார். பின்னர் இந்த அமைப்பின் பெயர் ஈஸ்ட்வெஸ்ட் யூனிவெர்ஸ் என மாற்றப்பட்டது.

எழுத்துப்பணிகள்

நடராஜ குருவின் எழுத்துப்பணி 1928 முதல் தொடங்கியது. ஜெனிவாவில் இருந்து வெளிவந்துகொண்டிருந்த The Sufi Quarterly என்னும் இதழில் நடராஜ குரு நாராயண குரு பற்றி எழுதிய The Path of The Guru என்னும் நூல் அவருடைய முதல் இலக்கிய ஆக்கம். (பின்னர் The Word of Guru என்ற பேரில் நூலாகியது)

1955 செப்டெம்பரில் ஜான் ஸ்பியர்ஸ் நடராஜ குருவை எழுத வைப்பதற்காகவே Values என்னும் மாத இதழை தொடங்கினார். நடராஜகுருவின் பல நூல்கள் அவ்விதழில் தொடராக வெளிவந்தன.

நாராயணகுரு பற்றி

நடராஜகுருவின் நூல்களில் முதலில் புகழ்பெற்றது The Word of Guru . நாராயணகுருவை ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் புகழ்ப்பெறச் செய்த நூல் அது. அதன்பின் நாராயணகுருவின் நூல்களுக்கு உரைகளை எழுதினார்.நாராயணகுருவின் தத்துவங்கள் பற்றி The Philosophy of a Guru என்னும் நூலையு எழுதினார்.

வேதாந்தம் பற்றி

வேதாந்தக் கொள்கைகள் ஐரோப்பாவில் விவாதிக்கப்பட்ட காலகட்டத்தில் நடராஜ குரு அவற்றை ஐரோப்பியத் தத்துவக் கொள்கைகளுடன் ஒப்பிட்டு விளக்கி விரிவான ஆய்வுநூல்களை எழுதினார். Absolutism என அவர் வேதாந்தத்தை விளக்கினார். அவருடைய An Integrated Science of the Absolute, Wisdom: The Absolute is Adorable ஆகிய நூல்கள் அவ்வகையில் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன

கல்வியியல்

நடராஜகுருவின் தத்துவ முனைவர்பட்டம் கல்வியியலுக்கு அளிக்கப்பட்டது. தன் முனைவர் பட்ட ஆய்வேட்டை குரு பிரெஞ்சில் இருந்து ஆங்கிலத்தில் World Education Manifesto என்ற பேரில் வெளியிட்டார். கல்வியியல் பற்றி அவர் எழுதிய Dialectical Methodology என்னும் நூலும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது

உரைகள்

நடராஜ குருவின் உரைகளில் பகவத்கீதைக்கு அவர் எழுதிய உரை இந்தியாவில் இருந்து வந்த கீதையுரைகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மேலைத்தத்துவக் கொள்கைகளுடன் ஒப்பிட்டு எழுதப்பட்டது அந்த உரை. கீதையின் தத்துவப் பார்வை யோகாத்ம மார்க்கம் என்னும் முரணியக்க ( ) அடிப்படையில் அமைந்தது என விளக்குகிறார் நடராஜ குரு. பிற்காலத்து உரைகளில் எல்லாம் நடராஜ குருவின் உரைகளின் செல்வாக்கு உண்டு. வாழ்வின் இறுதிக்காலத்தில் ஆதிசங்கரரின் சௌந்தரிய லகரிக்கு உரை எழுதினார். அது அவர் மறைவுக்குப்பின் வெளிவந்தது

நாராயணகுருவின் தர்சனமாலாவுக்கு நான்கு தொகுதிகளாக நடராஜ குரு எழுதிய உரையே An Integrated Science of the Absolute என்னும் நூல். கலைக்களஞ்சியத்தன்மை கொண்டது என ஆய்வாளர்களால் குறிப்பிடப்படும் மிகப்பெரிய நூல் இது. இந்திய வேதாந்த மரபின் முழுவுருவும் இந்நூலில் உள்ளது.

தன்வரலாறு

நடராஜகுரு இறுதிக்காலத்தில் Autobiography of an Absolutist என்னும் புகழ்பெற்ற தன்வரலாற்று நூலை எழுதினார். அவர் மறைவுக்கு முன் வெளிவந்த இறுதி நூல் அதுவே.

தத்துவப்பார்வை

பிரெட் ஹாஸ் ( சக்திதாரா), குரு நித்யா, நடராஜ குரு, ஜான் ஸ்பியர்ஸ், மங்களாந்தா
மதம் கடந்த தத்துவம்

நடராஜகுருவின் காலகட்டத்தில் இந்திய ஞானமரபை தத்துவ தளத்தில் இந்திய ஞானமரபை ஒற்றைப்படையாகவும் மதம் சார்ந்தும் விளக்கும் முயற்சிகள் வலுப்பெற்றன. இந்திய தேசிய இயக்கத்தின் விளைவாக இந்திய மெய்ஞானமரபு பிற மெய்ஞான மரபுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது, மேம்பட்டது என்று சொல்லும்போக்கு நிலைபெற்றது. இந்த மனநிலை சிந்தனையில் பெரும் தேக்கநிலையை உருவாக்கும் என நடராஜ குரு எண்ணினார்.

இந்து மெய்ஞான மரபை ஆன்மீகமான உண்மைகள் அடங்கிய பாரம்பரியச் செல்வமாக காணும் நோக்கையும் மத மீட்பு நோக்கை நடராஜ குரு நிராகரித்தார். பகவத்கீதை, உபநிடதங்கள், பிரம்மசூத்திரம் ஆகியவை மதநூல்கள் அல்ல தத்துவ நூல்களே என்றார். தத்துவநூல்கள் வழிபடவேண்டியவையோ கடைப்பிடிக்கப்படவேண்டியவையோ அல்ல என்றும் அவை ஏற்றும் மறுத்தும் விளக்கியும் விவாதிக்கப்படவேண்டியவை என்றும் வலியுறுத்தினார்.

ஒருமைத் தரிசனம்

மானுடமெய்மை ஒன்றே என்றும், அது வெவ்வேறு தத்துவக் கொள்கைகள் வழியாகவும் தரிசனங்கள் வழியாகவும் வெளிப்படுகிறது நடராஜகுரு என்றும் கருதினார். கிழக்கிலும் மேற்கிலுமுள்ள மெய்ஞான மரபுகளை ஒருங்கிணைத்து ஓர் ஒருமைநோக்கை அடையவேண்டும் என்றும், அதுவே சிந்தனையின் முன்னகர்வு என்றும் வலியுறுத்தினார். தரிசனங்களை ஒருங்கிணைப்பது (தர்சன சமன்வயம்) வழியாக நாராயண குரு காட்டியது அந்த ஒருமைநோக்கையே என்று விளக்கினார். தர்சனமாலா நூலுக்கு எழுதிய முன்னுரையில் நாடாயண குருவின் தரிசனத்தை உலகளாவிய பொதுமைநோக்கு கொண்ட சிந்தனைகளுடன் இணைத்துப் பார்ப்பதே தன் அணுகுமுறை என்று கூறுகிறார். நாராயண குருவின் தத்வ சமன்வயம் என்பதற்கு சமானமாக நடராஜ குரு பயன்படுத்தும் சொல் Unitive Thinking என்பதாகும். ஒருமையினூடாக அடையப்படும் மெய்மையறிதலை ஒருமைத்தரிசனம் ( Integral Vision) என்னும் சொல்லால் நடராஜ குரு குறிப்பிடுகிறார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் உலக சிந்தனை பகுப்பாய்வுநோக்கு ( Analytic Approach) தொகுப்பு நோக்கு ( Synthetic Approach) ஆகிய இரண்டு அணுகுமுறைகளும் இரு துருவங்களாக ஆகிவிட்டன என மதிப்பிடும் நடராஜகுரு அவை நடுவே ஓர் ஒருங்கிணைவே வரும் காலகட்டத்திற்கான சிந்தனைச் சவாலாக இருக்கமுடியும் என கருதுகிறார். அறிவியல், தத்துவம், இலக்கியம் ஆகிய எல்லா தளங்களிலும் திரண்டுவரும் உண்மைகளின் நடுவே ஓர் ஒத்திசைவையும் மையத்தையும் கண்டடைதலையே நடராஜ குரு சமகால தத்துவத்தின் முதன்மைப் பணி என முன்வைத்தார்.

இவ்வண்ணம் மானுட சிந்தனைகளுக்குள் ஓர் ஒத்திசைவைக் கண்டடைவதில் இரண்டு அணுகுமுறைகள் உலக தத்துவத்தில் உள்ளன. அந்த ஒத்திசைவு முன்னரே உள்ளது, அதுவே காரணம், காரியங்கள் எனப்படும் அதிலிருந்து உருவாயின என்பது காரணமுதன்மைவாதம் ( priori) அணுகுமுறை. சிந்தனையின் போக்குகள் வளர்ச்சியடைந்து செல்லும் திசையை வைத்து அவை உருவாக்கிக்கொள்ளும் ஒத்திசைவை கணிப்பது காரியமுதன்மைவாதம் ( posteriori) என்னும் அணுகுமுறை. நடராஜகுரு முன்வைத்த ஒருமைத்தரிசனம் என்பது காரண முதன்மைவாதம் காரியமுதன்மை வாதம் என்னும் இரண்டு அணுகுமுறைகளுக்கும் நடுவே ஓர் ஒத்திசைவை கண்டடைவதாகும்.

முரணியக்கம்

நடராஜகுரு முன்வைத்த ஒருமைத்தரிசனம் என்பது அனைத்தையும் ஒன்றாக்கும் செயல்பாடு அல்ல. ஒன்றோடொன்று முரண்பட்டு அதன் வழியாக ஒரு பொதுப்புள்ளியை கண்டடையும் முரணியக்கம் (Dialectics) என்பதுதான் தத்துவத்தின் இயக்கமுறை. இந்திய சிந்தனையில் அந்த முரணியக்கம் யோகாத்ம மார்க்கம் எனப்பட்டது. வெவ்வேறு தரிசனங்க்ள் நடுவே உள்ள உரையாடல்தன்மை (Dialogic Nature ) தத்துவ சிந்தனையின் அடிப்படை என நடராஜ குரு வலியுறுத்தினார். முரணியக்க முறைப்படி தத்துவப்பார்வையை முன்வைக்கும் பகவத்கீதையை தத்துவத்தின் அறிவியல் என்று அவர் வரையறை செய்தார்.

முரணியக்க அடிப்படையிலேயே பிரம்மத்தை வரையறை செய்ய முடியும் என்று நடராஜகுரு சொன்னார். "தத்துவஞானி பொருட்களின் இருப்புக்கும் அவற்றின் தோற்றத்திற்கும் நடுவே ஒரு முரண்பாடு இருப்பதை சரியாக அடையாளம் காண்கிறார். அந்த முரண்பாடு இல்லாமலாகுமிடமே முழுமுதன்மை (அல்லது பிரம்மம்). அனைத்து பொருட்களும், பொருட்களைப் பற்றிய எல்லா கருத்துக்களும் முரண்பாடும் மோதலும் இன்றி ஒன்றாகும் ஓர் இடமே முழுமுதன்மை எனப்படும். அதாவது முழுமுதன்மை என்பது பொருளும் கருத்தும் ஒன்றெனத் திகழும் நிலை"

முதல்முழுமைவாதம்

நடராஜ குரு நாராயணகுருவால் முன்வைக்கப்பட்ட செயலூக்கம் கொண்ட புதிய அத்வைத நோக்கை மேலைநாட்டு கருத்து முதல்வாத நோக்குகளுடன் இணைத்து விரிவாக விளக்கினார். ஹெகல், காண்ட், குரோச்சே, ஹென்றிபெர்க்சன் ஆகிய மேல்நாட்டு சிந்தனையாளர்களின் கருத்துக்களுடன் நாராயண குருவின் சிந்தனைகளை இணைத்து உரையாடியதன் வழியாக தனக்குரிய முதல்முழுமைவாத தத்துவ நோக்கு ஒன்றை உருவாக்கினார். இதன் மூலம் வலுவான ஒரு கீழைமேலைச் சிந்தனைச் சந்திப்பை உருவாக்கினார். ”அனேகமாக இந்திய சிந்தனையில் அரவிந்தருக்குப் பிறகு நிகழ்த்தப்பட்ட முக்கியமான சிந்தனைப் பாய்ச்சல் இதுவே.” என ஜெயமோகன் குறிப்பிட்டார்.

மறைஞானம்

நடராஜ குரு பிற அத்வைத அறிஞர்களைப் போல அறிவுசார் அணுகுமுறையை மட்டும் முன்வைக்கவில்லை. கூடவே மறைஞான (Esoteric ) அணுகுமுறைகளையும் கருத்தில்கொண்டார். ஆகவே தத்துவத்துடன் கலைகள், இலக்கியம், குறியீட்டுச்செயல்பாடுகள் ஆகியவற்றையும் இணைத்துக்கொண்டு மெய்மையை அணுகவேண்டும் என்றார். இந்தப் பார்வையை சௌந்தரிய லகரிக்கான விளக்கவுரையில் முன்வைத்தார். அறிவார்ந்த அணுகுமுறை மறைஞான அணுகுமுறை இரண்டுக்கும் நடுவே ஓர் முரணியக்கம் நிகழவேண்டும் என்றார்.

நடராஜ குரு, நித்ய சைதன்ய யதி

மாணவர்கள்

நடராஜகுருவின் மாணவர்கள் வெவ்வேறு துறைகளில் பரவியிருந்தார்கள். தத்துவம், இயற்கையியல், மருத்துவம் என பல தளங்களைச் சேர்ந்தவர்கள் அவரை தங்கள் வழிகாட்டியாகக் கொண்டிருந்தார்கள்.

  • ஜான் ஸ்பியர்ஸ்
  • மங்கலானந்தா
  • சிதம்பர தீர்த்தா
  • வினய சைதன்யா
  • குரு ஃப்ரெடி
  • நித்ய சைதன்ய யதி
  • முனி நாராயண பிரசாத்
  • வியாசப் பிரசாத்

மறைவு

நடராஜ குரு 1973-ல் காலமானார். அவரது சமாதி வர்க்கலாவில் உள்ளது. அங்கே அவர் நினைவாக ஒரு பிரார்த்தனைக்கூடமும் தத்துவ நூலகமும் உள்ளன.

நூல்கள் பட்டியல்

  • The Word of the Guru: Life and Teachings of Narayana Guru
  • Vedanta Revalued and Restated
  • Autobiography of an Absolutist
  • The Bhagavad Gita, Translation and Commentary
  • An Integrated Science of the Absolute (Volumes I, II)
  • Wisdom: The Absolute is Adorable
  • Saundarya Lahari of Sankara
  • The Search for a Norm in Western Thought
  • The Philosophy of a Guru
  • Memorandum on World Government
  • World Education Manifesto
  • Dialectical Methodology
  • Anthology of the Poems of Narayana Guru
நடராஜகுரு பற்றிய நூல்
  • குருவும் சீடனும் - நித்ய சைதன்ய யதி

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page