தேவிபாரதி

From Tamil Wiki
தேவிபாரதி

தேவிபாரதி (ந.ராஜசேகரன்) (30-12-1957 ) தமிழில் எழுதும் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர். இடதுசாரிப் பார்வையில் இருந்து காந்தியப்பார்வைக்கு வந்த படைப்பாளி. உளவியல் நெருக்கடிகளை சமூகப்பின்னணியில் நிறுவி ஆராயும் படைப்புகள் என விமர்சகர்கள் குறிப்பிடும் நாவல்களை எழுதியவர்.

பிறப்பு கல்வி

தேவிபாரதியின் இயற்பெயர் ராஜசேகரன். ஈரோடு மாவட்டம் கஸ்பாப்பேட்டை என்னும் ஊரில் நல்லமுத்து முத்தம்மாள் இணையரின் மகனாக 30-12-1957ல் பிறந்தார்.  கஸ்பாபேட்டை, ஈரோடு, அறச்சலுர் சென்னிமலை, வடுகபட்டி என ஐந்து ஊர்களிலாக பதினொன்றாம் வகுப்பு [மெட்ரிகுலேஷன்] வரை படித்தார்.

தனிவாழ்க்கை

தேவிபாரதி இருமுறை மணம் புரிந்துகொண்டு மணமுறிவு பெற்றவர். பள்ளிப்படிப்பு முடித்தபின் ஆசிரியர் பயிற்சிபெற்று ஆரம்பப்பள்ளி ஆசிரியராக 2006 ஜூன் வரை பணியாற்றினார். வேலையை உதறிவிட்டு சிலகாலம் திரைத்துறையில் பணியாற்றினார். அதன்பின் 2008 முதல் ஏழாண்டுகள் காலச்சுவடு மாத இதழிலும் ஓராண்டுக்காலம் புதுயுகம் தொலைக்காட்சியிலும் வேலைபார்த்தார்

இலக்கியவாழ்க்கை

நாற்பதாண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் தேவிபாரதி தொடக்கத்தில் இடதுசாரி மார்க்ஸிய லெனினிய இயக்கங்களுடன் தொடர்புகொண்டிருந்தார். அவர்களின் இதழ்களில் எழுதினார். 1979ல் முதல் சிறுகதை பிரசுரமாகியது. 1994 ல் காலச்சுவடு இதழில் எழுதப்பட்ட பலி என்னும் சிறுகதை அவருக்கு இலக்கியக் கவனத்தைப்பெற்றுத் தந்தது. காலச்சுவடு இதழிலும் பிற இதழ்களிலும் தொடர்ந்து எழுதினார் இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் என அசோகமித்திரன், பூமணி, தி.ஜானகி ராமன், சுந்தர ராமசாமி ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

இலக்கிய இடம்

தேவிபாரதியின் நிழலின் தனிமை என்னும் நாவல் அவருடைய தலைசிறந்த ஆக்கமாக கொள்ளப்படுகிறது. இந்நாவலில் இளமையிலேயே ஒரு பழிவாங்கும் வஞ்சத்தை கொண்டிருக்கும் கதைநாயகனை அந்த வஞ்சமே மெல்லமெல்ல வன்முறையில் இருந்து விடுவித்து மீட்பென ஆகும் சித்திரம் வலுவாகவும் சுருக்கமாகவும் சொல்லப்பட்டுள்ளது. தேவிபாரதியின் நட்ராஜ் மகாராஜ் ஒரு சாமானியனுக்கு வரலாற்றுப் பாத்திரம் ஒன்று தற்செயலாக வந்தமையும்போது அந்தச் சுமையில் அவன் நிலைதடுமாறிச் சிதையும் காட்சியை அளிக்கிறது. ”தீவிரமும் அங்கதமுமாகச் சிரிக்க வாய்ப்புள்ள இடங்கள் இந்நாவலில் அதிகம் உண்டு. ஆனால் சிரிக்க இயலாது. அந்தச் சிரிக்கவியலாத வலியையும் மூச்சுத் திணறலையும் வாசகன் உணரும் வண்ணம் எழுதியிருப்பதுதான் தேவிபாரதி என்ற எழுத்தாளர் அடைந்திருக்கும் வெற்றி” என்று நட்ராஜ் மகாராஜ் பற்றி விமர்சகர் சங்கர ராமசுப்ரமணியம் குறிப்பிடுகிறார்.*

குடிநாசுவர்கள் எனப்படும் நாவிதர்களின் வாழ்க்கைப் பின்னணியில் அமைந்துள்ள நீர்வழிப்படூம் என்னும் நாவலில் காரு என்பவரின் இறப்பினூடாக அவருடைய சோகவாழ்க்கையின் சித்திரம் சொல்லப்படுகிறது. செட்டி என்பவருடன் அவர் மனைவி சென்றுவிடுகிறார். அவள் அவனால் கைவிடப்பட்டு திரும்பி வந்தபோது அவர் மீண்டும் ஏற்றுக்கொண்டாலும் உளச்சிதைவுக்கு ஆளாகிறார். அவருடைய இறப்பு வழியாக அந்த ஊர் அவருடைய வாழ்க்கைக்கு ஆற்றும் எதிர்வினைகள் விவரிக்கப்படுகின்றன. ”புறச்சூழலின் காரணமாக தன்னுடைய அடிப்படைக் கட்டமைப்பை ஒட்டுமொத்த சமூகமும் மாற்றிக்கொண்டிருக்கும் வேளையில் அதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாத மனிதர்களுக்கு நிகழக்கூடியதைச் சொல்லும் படைப்பாக இந்நூலை எடுத்துக் கொள்ளலாம்.பழைய நிலவுடைமைச் சமூகத்திலிருந்து நவீன சமூகமாக இன்றிருக்கும் நிலைக்கு மாற ஆரம்பித்த சென்ற காலகட்டத்தின் கதை இந்நாவல்” என அந்தியூர் மணி இந்நாவல் பற்றி குறிப்பிடுகிறார்.*

தேவிபாரதியின் நாவல்கள் நவீனத்துவ நாவல்களின் வடிவஒருமையும் அடர்த்தியான மொழியும் சுருக்கமான விவரணையும் கொண்டவை. கதாபாத்திரங்களை விரிவாக சித்தரிப்பதோ, நாடகீயமான தருணங்களை உருவாக்குவதோ இல்லை. நாவல்களில் விவாதத்தன்மையும் இல்லை. வாழ்க்கையின் ஒரு கீற்று தீவிரமாக முன்வைக்கப்பட்டு அதன் வழியாக வாசகனிடம் சில ஆழ்ந்த வினாக்கள் உருவாக்கப்படுகின்றன. ஒரு படைப்பாளியாக தேவிபாரதியின் இடம் என்பது சென்றகாலத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் மனிதர்களில் மீட்பில்லாது அழிபவர்களின் துயரத்தைச் சொன்னார் என்பதுதான். அதன் வழியாக வரலாற்றில் எளியமனிதர்களின் இடமென்ன என்னும் ஆழமான வினாவை எழுப்புகிறார்.

விருதுகள்

நிழலின் தனிமை, ஜெயந்தன் விருது,

அறிஞர் போற்றுதும் விருது, திருச்சி

தன்னறம் விருது 2022

நூல்பட்டியல்

சிறுகதை தொகுதிகள்
  • பலி
  • கண் விழுத்த மறுநாள்
  • மூன்றாவது விலா எலும்பும் விழுதுகற்ற ஆல மரமும்.
  • பிறகொரு இரவு
  • வீடென்ப. . .
  • தேவபாரதி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் (தன்னறம் வெளியீடு - 2022)
கட்டுரைகள்
  • புழுதிக்குள் சில சித்திரங்கள் [ரசியல் கட்டுரைகள்]
  • அற்ற குளத்து அறபுத மீன்கள்
  • சினிமா பாரடைஸோ [திரைப்படக்கட்டுரைகள்]
நாவல்கள்
  • நிழலின் தனிமை
  • நட்ராஜ் மகராஜ்
  • நீர்வழப் படூஉம் -நாவல்.
தொகுப்பாசிரியர்
  • சொல்லில் அடங்காத வாழ்க்கை [காலச்சுவடு கதைகள்]

உசாத்துணை

https://devibharathi.blogspot.com/