under review

தி. சதாசிவ ஐயர்

From Tamil Wiki
Revision as of 20:14, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
தி. சதாசிவ ஐயர்

தி. சதாசிவ ஐயர் (முகாந்திரம் தி. சதாசிவ ஐயர்) (செப்டம்பர் 22, 1882 - நவம்பர் 27, 1950) ஈழத்து தமிழ் தமிழறிஞர், எழுத்தாளர், புலவர். வடமொழி இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

தி. சதாசிவ ஐயர் யாழ்ப்பாணம் தெற்கு அளவெட்டியில் பெருமாக்கடவை என்னும் ஊரில் செப்டம்பர் 22, 1882-ஆம் ஆண்டு தியாகராஜ ஐயர், செல்லம்மாள் இணையருக்குப் பிறந்தார். ஆரம்பக் கல்வியை அளவெட்டி அருணோதயாக் கல்லூரியில் பயின்றார். யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் பயின்றார். லண்டன் கேம்ப்ரிஜ் சிரேஷ்ட பரீட்சைக்கு ஆங்கில மொழியில் எழுதி தேர்ச்சி பெற்று இரு வருட ஆசிரியப்பயிற்சி பெற்றார். கல்கத்தாப் பல்கலைக் கழகத்தின் எஃப்.ஏ.(F.A.) தேர்வில் முதற் பிரிவில் தேறினார்.

ஆசிரியப்பணி

தி. சதாசிவ ஐயர் மல்லாகம் ஆங்கில வித்தியாசாலையிலும் கந்தரோடை ஆங்கில வித்தியாசாலையிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். 1910-ல் முதல் கல்வித்திணைக்களத்தில் வித்தியாதரிசியாகவும்(Director of Education), 1927 முதல் பகுதி வித்தியாதரிசியாகவும் பணியாற்றினார். இலங்கையில் பண்டிதர் பரம்பரை ஒன்றை உருவாக்கினார்.

அமைப்புப்பணி

யாழ்ப்பாணத்தில் 1921-ல் தோற்றுவிக்கப்பட்ட ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்கத்தை நிறுவியதில் முக்கிய பங்காற்றினார். நீண்ட காலம் இதன் செயலாளராக இருந்தார். சங்கம் நடத்திய பிரவேச பண்டிதர், பால பண்டிதர், பண்டிதர் சோதனைகளில் தேறியவர்களுக்கு பள்ளிகளில் ஆசிரிய நியமனம் கிடைக்க வழி செய்தார். தனது சொந்தச் செலவில் சுன்னாகம் கதிரமலை தேவஸ்தானம் எதிரில் பிராசீன பாடசாலை என்ற பெயரில் பாடசாலை ஒன்றை அமைத்தார். இப்பாடசாலையில் தமிழும் சமஸ்கிருதமும் பயிற்றுவிக்கப்பட்டன. சி.கணேசையர் இப்பாடசாலைக்கு பொறுப்பாக இருந்தார்.

அக்டோபர் 17, 1921இல் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை சைவப்பிராகச வித்தியாசாலை மண்டபத்தில் தமிழறிஞர் கூட்டமொன்றைக் கூட்டினார். இதில் சி. கணேசஐயர், நவநீதகிருஷ்ண பாரதியார், சுவாமி விபுலானந்தர் , அ. குமாரசுவாமிப் புலவர், சு. நடேசபிள்ளை, வே. மகாலிங்கசிவம், க. சோமசுந்தரப்புலவர் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதழியல்

ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்கத்தினர் 1942-ஆம் ஆண்டில் வெளியிட்ட ”கலாநிதி” என்ற பத்திரிகைக்கு ஆசிரியராகப் பணியாற்றினார். 1945-ல் 'சுவதர்மபோதம்' என்ற மும்மாத இதழுக்கு ஆசிரியராக இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

சமஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் புலமை பெற்றவர். காளிதாசரின் 'இருது சம்ஹாரம்' ( ऋतुसंहार;) என்னும் காப்பியத்தை 'இருது சங்கார காவியம்' என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்தார். 'தேவி தோத்திர மஞ்சரி', 'தேவி மானச பூசை அந்தாதி' ஆகிய நூல்களையும் தமிழில் எழுதினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வழங்கும் நாட்டார் பாடல்களைத் தொகுத்து ”வசந்தன் கவித்திரட்டு” என்னும் நூலாக வெளியிட்டார். மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள் கொண்ட ஏட்டுப் பிரதிகளை அச்சேற்றி வெளியிட்டார். குழந்தைகளுக்காகப் பிள்ளைப் பாட்டு நூல் வெளிவர உதவினார்.

விருதுகள்

  • இலங்கை அரசு 1938-ல் தி. சதாசிவ ஐயருக்கு வெள்ளிப்பதக்கம், ”முகாந்திரம்” என்னும் கௌரவ பட்டத்தை அளித்தது.

மறைவு

தி. சதாசிவ ஐயர் நவம்பர் 27, 1950-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • கதிர்காம மும்மணிமாலை
  • தேவி தோத்திர மஞ்சரி
  • தேவி மானச பூசை அந்தாதி
  • அளவெட்டி பெருமாக்கடவைப் பிள்ளையார் இரட்டைமணிமாலை
  • தமிழ்மொழிப் பயிற்சியும் தேர்ச்சியும்
மொழிபெயர்ப்புகள்
  • இருது சங்கார காவியம்
  • மேக தூதம்
வெளியிட்ட நூல்கள்
  • கரவை வேலன் கோவை
  • வசந்தன் கவித்திரட்டு
  • ஐங்குறுநூறு (மூலமும் உரையும்)

உசாத்துணை


✅Finalised Page