திருவேகம்பரந்தாதி
திருவேகம்பரந்தாதி காஞ்சிபுரத்தில் கோவில்கொண்ட ஏகாம்பரநாதரைப் பாடிய அந்தாதி என்னும் சிற்றிலக்கியம். மாதவச் சிவஞான முனிவர் இயற்றியது.
பதிப்பு
திருவேகம்பரந்தாதி 1868-ல் முதலில் களாநிதி அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. இ.இராமசுவாமிப்பிள்ளை என்னும் ஞானசம்பந்தப்பிள்ளையின் உரையுடன் பாண்டித்துரைத் தேவரின் வேண்டுகோளின்படி சித்தாந்த வித்தியாநுபாலன யந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டதாக மூன்றாம் பதிப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் காப்புச் செய்யுளும் முதல் 6 பாடல்களும் கிடைக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்
திருவேகம்பரந்தாதியை இயற்றியவர் சிவஞான முனிவர். மாதவச் சிவஞான முனிவர் என்றும் அழைக்கப்பட்டார். திருவாவடுதுறை ஆதீனத்தின் தம்பிரானாக இருந்தார்.
நூல் அமைப்பு
திருவேகம்பரந்தாதியில் காப்பு, சிறப்புப் பாயிரம் தவிர 94 பாடல்கள் அந்தாதித் தொடையாக அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு அடிகளும் ஒரே சொல்லில் தொடங்கி ஒவ்வொரு அடியிலும் வேறு வேறு பொருளைத் தருமாறு மடக்கணியில் அமைந்துள்ளன.
காஞ்சியில் கோவில் கொண்ட ஏகாம்பரநாதரிடம் தன் ஆணவ, கன்ம மலங்களை அகற்றி , இனிப் பிறவாமையை அருள வேண்டுகிறார் சிவஞான முனிவர். காஞ்சி நகரின் அழகும், வளமும், சிறப்பும் ஏகாம்பரநாதர், காமாட்சியம்மை இருவரின் அருளும் கூறப்படுகின்றன. திரிபுரம் எரித்தமை, கர்ப்பிணிப்பெண்ணின் பேறு காலத்தில் தாயுமானவராக உதவியது, மாலும், பிரம்மனும் அடிமுடி காணாத வண்ணம் நிறைந்தமை, பிள்ளைக்கறி கேட்டு சிறுத்தொண்டருக்கு அருளியமை போன்ற ஆடல்களும், புராணக் குறிப்புகளும் காணப்படுகின்றன.
இடையிடையே இடம்பெறும் அகத்துறைப் பாடல்களில் தலைவி சிவனின் மேல் கொண்ட காதல், நற்றாயிரங்கல்,தோழி செவிலிக்கு அறத்தோடு நிற்றல், பாங்கி தலைவி குறிப்பறிவித்தல் ஆகியவை கூறப்படுகின்றன.
பாடல் நடை
குவலயமாமை
குவலையமாமைவிழியார்மயக்கிற்கொட்கும்புலையேன்
குவலையமாமையுருவெனக்காலன்குறுகிலென்செய்
குவலையமாமைதருங்கச்சியேகம்பகோளரவா
குவலையமாமையினோடணியாக்கொண்டகொள்கையனே.
மடக்கு:
- குவலயம்+ஆம்+மைவிழியார் மயக்கில் கொட்கும் புலையேன்
- கு+அலய+மா+மை+உரு எனக் காலன் குறுகில் என் செய்குவல்
- ஐ+மாமைதரு+கச்சி ஏகம்ப! கோள்+ அற
- வாகு வலையம் +ஆமையின் ஓடு +அணியாக் கொண்ட கொள்கையனே
கேட்டையனாமய
கேட்டையனாமயமாங்கம்பங்கிட்டவொட்டாதமதன்
கேட்டையனாமயன்மீறச்செய்தீங்கைக்கெடுத்தியெனக்
கேட்டையனாமயங்கேலெனவாண்டனன்கேழரியாங்
கேட்டையனாமயனாமறிவாரவன்கீர்த்திகளே.
உசாத்துணை
✅Finalised Page