under review

தாமரைக்கண்ணன்

From Tamil Wiki
தாமரைக்கண்ணன் (வீ.இராசமாணிக்கம்)

தாமரைக்கண்ணன் (வீ.இராசமாணிக்கம்: ஜூலை 1, 1934 - ஜனவரி 19, 2011) எழுத்தாளர், கட்டுரையாளர், பேச்சாளர், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் எனப் பல களங்களில் இயங்கியவர். பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். தனது படைப்புகளுக்காகத் தமிழக அரசின் விருது பெற்றவர்.

பிறப்பு, கல்வி

தாமரைக்கண்ணன், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆட்சிப்பாக்கம் என்ற கிராமத்தில், மா.வீராசாமி - வீ.பாஞ்சாலி அம்மாள் இணையருக்கு ஜூலை 1, 1934 அன்று மகனாகப் பிறந்தார் . தந்தை ஆசிரியராகப் பணி புரிந்தார். அவர் மூலம் புத்தக வாசிப்புப் பழக்கம் வளர்ந்தது. சிறு வயதில் வாசித்த சுதேசமித்திரன், தமிழ்மணி போன்ற நூல்களால் எழுத்தார்வம் சுடர் விட்டது. உயர்நிலைக் கல்வியைச் சென்னையிலும், ஆசிரியர் பயிற்சிக் கல்வியைத் திருவள்ளூரிலும் பயின்றார். சென்னைப் பல்கலையிலும், அண்ணாமலைப் பல்கலையிலும் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து 1984-ல் சென்னைப் பல்கலையில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மூலம் முதுநிலை கல்வியியல் (எம்.எட்) பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

தாமரைக்கண்ணன், ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே எழுத்துத் துறையிலும் ஈடுபட்டார். பத்மாவதியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு மகன்கள்; ஒரு மகள். கதை, கவிதை, கட்டுரை, நாடகம் என தாமரைக்கண்ணனின் ஆர்வம் பலவாறாக விரிந்தது. பேச்சாளராகவும் திகழ்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

தில்லி தமிழ் எழுத்தாளர் சங்க விழாவில் தாமரைக்கண்ணன்

1957-ல், தாமரைக்கண்ணனின் முதல் படைப்பு 'மங்கையர்க்கரசிக்கு’ என்ற தலைப்பில், 22.01.1957 தேதியிட்ட சௌபாக்கியம் இதழில் வெளியானது. தொடர்ந்து ஆரம்பக்கல்வி, அமுதசுரபி எனப் பல இதழ்களுக்கும் எழுதத் ஆரம்பித்தார். எழில், அன்பெழிலன், கண்ணன், யாரோ, அம்சா, ஜனநாதன், பாஞ்சாலி மகன், அச்சிறுபாக்கத்தார், அகரத்தான், தாமரை எனப் பல்வேறு புனை பெயர்களில் எழுதினார்.

சிறுகதை, நாவல், நாடகம், வரலாறு, கல்வெட்டு ஆய்வு, குழந்தை இலக்கியம் என 52 நுால்கள் எழுதியுள்ளார் தாமரைக்கண்ணன்.

ஆரம்பக்கல்வி, அமுதசுரபி, மாலை முரசு, ராணி, குயில், பிரசண்ட விகடன், தேவி, சுதேசமித்திரன், காதல், காஞ்சி, போர்வாள், குண்டூசி, தினத்தந்தி, தினமலர், தினமணி சுடர் எனப் பல இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. 88 சிறுகதைகள் எழுதியுள்ளார். நாடகங்கள் 17. சென்னை, திருச்சி மற்றும் புதுவை வானொலியில் இவரது 15 நாடகங்கள் ஒலிபரப்பாகி உள்ளன.

கல்வெட்டு ஆராய்ச்சிகளும் பிற கண்டுபிடிப்புகளும்

கல்வெட்டு ஆராய்ச்சியில் தாமரைக்கண்ணனின் விருப்பம் சென்றது. 1976-ல், ஒரத்தியில் நந்திவர்மன், கன்னர தேவன் (கன்னட) கல்வெட்டுகளைக் கண்டறிந்து வெளிக் கொணர்ந்தார். தொடர்ந்து, அனந்தமங்கலம் சமணர் கல்வெட்டு, விஜயநகர காலச் செப்பேடு, தெள்ளாற்றில் ஜேக்ஷ்டாதேவியின் அரிய சிலை, திண்டிவனம் அருகே 1000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு போன்றவற்றைக் கண்டறிந்து 'தினமணி’, 'தினமணி சுடர்’ இதழில் ஆதாரங்களுடனும், படங்களுடனும் வெளியிட்டார்.

தாமரைக்கண்ணன், 1978-ல், மதுராந்தகம் வட்டம் ஈசூரில் சோழர்காலப் பஞ்சலோகப்படிமங்களைக் கண்டறிந்து தொல்பொருள் துறைக்குத் தகவல் தந்தார். மதுராந்தகம் வட்டம், இடைகழிநாடு, கருவம்பாக்கத்தில் வீரகேரளன் காசைக் கண்டறிந்து அதனைத் தொல்பொருள்துறைக்குக் கையளித்தார். கொற்றவை சிலை, சாத்தன் சிலை, சமண தீர்த்தங்கரர்கள் சிலை, திருமால், ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் எனப் தொன்மையான பல ஆலயங்களை, மண்ணுக்கடியில் புதைந்துபோனவைகள் இவர் வெளிப்படுத்தியுள்ளார்.

தாமரைக்கண்ணன் கல்வெட்டுக்களை, செப்பேடுகளை, காசுகளை, சிற்பங்களை, பழமையான ஆலயங்களைக்க் கண்டறிவது, கல்வெட்டுக்களைப் படியெடுப்பது என்று ஆய்வு சார்ந்து இயங்கினார். தனது ஆய்வுகளையும் கண்டுபிடிப்புக்களையும் பற்றி பல்வேறு கருத்தரங்களில் கலந்துகொண்டு பேசியதுடன் தினமணி, தினமணி சுடர், தினமலர் போன்ற இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார். மாணவர்களுக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கும் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தினார். தனது ஆராய்ச்சிகளுக்காக தமிழக அரசின் பரிசினையும் பெற்றார்.

ஆய்வுக் கட்டுரைகள்

தாமரைக்கண்ணன், கருத்தரங்கக் கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார். அமுதசுரபி இதழில் தாமரைக்கண்ணனின் முப்பதுக்கும் மேற்ப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகியுள்ளன. கோயில்கள் குறித்து, அதன் பழைமை, வரலாறு குறித்து நிறைய எழுதியுள்ளார். தினமணி சுடரில் 14 கட்டுரைகள், தினமலரில் 10 கட்டுரைகள், தமிழரசி இதழுக்கு 42 கட்டுரைகள் என்று நிறைய எழுதியுள்ளார்.

கல்விப் பணிகள்

தாமரைக்கண்ணன், தமிழ்நாடு கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும், மைசூர் நடுவண் அரசு மொழி நிறுவனமும் இணைந்து நடத்திய கல்வி ஆராய்ச்சிப் பட்டறையில் கலந்து கொண்டு, தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சிப் பாடநூல்களை எழுதியுள்ளார். பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சியும் அளித்துள்ளார். தமிழ்ப் பாடநூல்கள் தயாரிப்பு ஆசிரியர் குழுவிலும் இருந்திருக்கிறார்.

'வரலாற்றுக் கருவூலம்’ - கல்வெட்டு ஆராய்ச்சி நூலுக்கு முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் வழங்கிய பரிசு.

விருதுகள்

  • சங்கமித்திரை நாடக நூலுக்கு தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு கிடைத்தது
  • வரலாற்றுக் கருவூலம் கல்வெட்டியல் ஆய்வு நூலுக்கு தொல்பொருளியல் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு கிடைத்தது.
  • பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய 'இரகசியம்’ நாடகத்திற்கான முதல் பரிசு
  • சென்னை பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் வழங்கிய பல்கலைச் செம்மல் பட்டம்
  • நியூயார்க் உலகப்பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டம்
  • திண்டிவனம் தமிழ் இலக்கியப் பேரவை வழங்கிய நாடக மாமணிப் பட்டம்
  • ஸ்ரீராம் நிறுவனம் அளித்த பாரதி தமிழ்ப்பணிச் செல்வர்
  • தமிழக அரசு வழங்கிய மாநில நல்லாசிரியர் விருது
  • தமிழக அரசு திருக்குறள் நெறித் தோன்றல் விருது
  • பண்ருட்டி எழுத்தாளர் சங்கம் வழங்கிய இலக்கியச் சித்தர் பட்டம்

- எனப் பல விருதுகளை, கௌரவங்களைப் பெற்றுள்ளார்

மறைவு

ஜனவரி 19, 2011-ல், உடல்நலக்குறைவால் தாமரைக்கண்ணன் காலமானார்.

இலக்கிய இடம்

"இவரது புதிய கண்டுபிடிப்புகளில் தமிழகமே பெருமைப்படக் கூடியது, சுமார் 1500 ஆண்டுகட்கும் முன்னரே ஒரு கோழிக்கு எடுத்த நினைவுக் கல்லை இவர் வெளிப்படுத்தியது ஆகும். அக்கோழியின் உருவத்துடன் பெயரும் பொறிக்கப்பட்டு இருந்த கல்வெட்டு இவரை பாராட்டிக் கொண்டிருக்கும். அது மட்டுமல்ல, அதில் உள்ள சொற்றொடர் பண்டைய தமிழ் இலக்கணத்தில் இடம் பெற்றுள்ளது என்று இவர் ஆராய்ந்து வெளிப்படுத்தியது மேலும் சிறப்பாகும்" என்று வரலாற்றிஞர் டாக்டர் இரா.நாகசாமி பாராட்டியுள்ளார்.

"புலவராயிருந்தாலும் புரியும் தமிழில் எழுதுவதால் இவர் டாக்டர் மு.வரதராசனாருக்கு நிகராக விளங்குகிறார். கதை சொல்லலும் அவருக்கு இவர் சளைக்கவில்லை. இவர் எந்தச் சாராரையும் சேராமலும் சாடாமலும் எழுதுவது போற்றத்தக்கது." என்கிறார், எழுத்தாளர் விந்தன்.

நூல்கள்

நாவல்கள்
  • தங்கத் தாமரை
  • மூன்றாவதுதுருவம்
  • நெஞ்சின் ஆழம்
  • அவள் காத்திருக்கிறாள் (இந்நாவல் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது)
  • பன்னீர் சிந்தும் பனிமலர்
  • நெஞ்சத்தில் நீ
சிறுகதைத் தொகுப்புகள்
  • மனக்காற்றாடி
  • கொன்றைப் பூ ('அத்திப்பூ' என்னும் நாடகம், 1978-ல், 11-ம் வகுப்பு துணைப்பாடநூலில் இடம் பெற்றது)
  • அறுசுவை
  • ஏழுநாள்
  • எல்லாம் இன்பமயம்
  • உயர்ந்த உள்ளம்
  • கனவுக் கண்கள்
  • நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும்
நாடகங்கள்
  • கிள்ளிவளவன் ('கொடைவள்ளல் குமணன்’ என்னும் நாடகம் 12-ம் வகுப்பு சிறப்புத் தமிழில் இடம் பெற்றது)
  • வெண்ணிலா
  • மருதுபாண்டியர்
  • அலெக்ஸாண்டர்
  • கைவிளக்கு
  • சங்கமித்திரை (1984-ல், தமிழகஅரசின்பரிசுபெற்றது)
  • பேசும்ஊமைகள்
  • நல்லநாள்
  • நல்லூர் முல்லை (கன்னடம், இந்தி, தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டது)
  • வளையாபதி
  • பள்ளிக்கூடம்
  • இரகசியம்
  • சாணக்கியன்
வரலாற்று நூல்கள்
  • கருணைக்கடல்
  • திருநாவுக்கரசர்
  • ஒருமனிதன்தெய்வமாகிறான்
  • கருமாரிப்பட்டிசுவாமி
  • சம்புவரையர்
  • ஆட்சீசுவரர் திருக்கோயில்
  • வரலாற்றுக் கருவூலம் (தமிழக அரசின் பரிசு பெற்றது)
  • வரலாறு கூறும் திருத்தலங்கள்
அறிவியல்நூல்
  • வியப்பூட்டும் விண்வெளி்

உசாத்துணை

தாமரைக்கண்ணன் இணையதளம்

தினமணி இரங்கல் குறிப்பு


✅Finalised Page