second review completed

தத்துவ சரிதை

From Tamil Wiki

தத்துவ சரிதை (சின்னப்பூ வெண்பா) (பொ.யு. 16-ஆம் நூற்றாண்டு) தத்துவராயர் இயற்றிய சின்னப்பூ என்னும் சிற்றிலக்கியம். தன் குருவான சொரூபானந்தரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. சின்னப்பூ என்னும் சிற்றிலக்கிய வகைமையில் இயற்றப்பட்ட ஒரே பிரபந்தம்.

ஆசிரியர்

தத்துவ சரிதையை இயற்றியவர் தத்துவராயர். தனது குரு சொரூபானந்தர் மீது பல சிற்றிலக்கியங்களைப் பாடினார்.

பெயர்க்காரணம்

தத்துவராயரால் இயற்றப்பட்ட அவரது குருநாதரின் சரிதை(வரலாறு) என்பதால் தத்துவ சரிதை எனப் பெயர் பெற்றது.

சின்னப்பூ தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. நாடு, பெயர், ஊர், மலை, ஆறு, மாலை, படை, கொடி, முரசு, செங்கோல் என்பவை அரசனுக்கு உரிய பத்து சின்னங்கள்(உறுப்புக்கள்). அவற்றின் சிறப்புத் தோன்ற நூறு, தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது பாடல்களால் பாடுவது சின்னப்பூ.

தத்துவராயர் தன் குரு சொரூபானந்தரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு அவரது நாடு, பெயர் முதலிய பத்து உறுப்புகளை வெண்பாக்களால் பாடியமையால் இந்நூல் சின்னப்பூ வெண்பா என்ற மற்றொரு பெயரைப் பெற்றது.

நூல் அமைப்பு

தத்துவ சரிதை(சின்னப்பூ வெண்பா) நூறு நேரிசை வெண்பாக்களால் ஆனது. தத்துவராயர் தனது குரு சொரூபானந்தரின் பெயர், நாடு, ஊர், ஆறு, மலை, மா (விலங்கு), கொடி, முரசு, படை, தார்(மாலை) என்னும் பத்து சிறப்புகளைப் பத்து பத்து வெண்பாக்களால் பாடினார். சின்னப்பூ அரசர்கள் மற்றும் தேவர்களின் சிறப்புகளைப் பாடுவதற்கு உரியது என முள்ளியார் கலித்தொகை குறிப்பிடுகிறது. தன் குருவை தெய்வமாகக் கருதியதால் தத்துவ ராயர் அரசர்களுக்குரிய சின்னங்களை அவருக்குரியதாக அமைத்துப் பாடினார்.

நூறு பாடல்களில் சொரூபானந்தரின் ஞானமும், கருணையும், பிறவிப் பிணியறுக்கும் தன்மையும் பாடப்பட்டுள்ளன. கொடி, முரசம் போன்றவை அரசர்க்குரியவை எனினும் சொரூபானந்தரைத் துறவிகளில் அரசராகவும், ஞானத்தின் அரசராகவும் உருவகித்து அவர் பெயரில் சின்னப்பூ இயற்றினார் தத்துவராயர்.

சின்னப்பூ என்னும் சிற்றிலக்கிய வகைமையில் தமிழில் எழுதப்பட்டதாக அறியப்படும் ஒரே நூல் தத்துவ சரிதை.

பாடல் நடை

பேர்

ஏழுபிறப்பு மகல யெனைவந்து
சூழுஞ் சொரூபானந்தச் சுடரே-வாழ்வெலா
மித்தை எனக்களிப்பார் மென்கமலச் சேவடிக்கே
பித்தை யெனக்களிப்பார் பேர்

நாடு

துதிபாடுந் தொண்டர் குதிபாயுங் கண்ணீர்
நதிபாயு மானந்த நாடே- கதியாவி
நாடும் பரம்பரத்தார் நாகத்தார் நாண்மலரார்
நாடும் பரம்பரத்தார் நாடு

ஊர்

விடம்போன் றுடம்போடு மேவ உடம்பைக்
கடம்போலக் காணு மனனே-மடஞ்சேரு
மானம் பலகண்டான் மாதர்கெனு மேதர்க்
கூனம் பலகண்டா னூர்

ஆறு

பொறியிற் சுவையுணரும் புல்லறி வாள
ரறியப் படாத பேரன்பே-மறைமுடிவெப்
போதுமோ தத்தந்தா னானானற் போதங்கொண்
டேதுமோ தத்தந்தான் யாறு

மலை

மூன்றா முருவு முதலுருவு மெவ்வுருவுங்
கோன்றானே யான குணக்குன்றே தோன்றி
யிறக்குமா செய்தா ரெனையொழிய வெல்லா
மறக்குமா செய்தார் மலை

மா(விலங்கு)

தம்மேற் பரங்கெட்டுச் சார்ந்தவ்ர்க்குத் தம்பதத்தை
கைம்மேற் கொடுக்கும் கருணையே-யெம்ம
குலமூன்று மாறினார் நன்னெஞ் சிருப்பார்
மலமூன்று மாறினார் மா

கொடி

கட்டறுத்டென் சிந்தை கருவருத்தெ னெஞ்சத்தறிய
தட்டறுத்து விட்ட தருமமே-கட்ட
முளவாதரித்தா னுவந்தடிமை யென்னை
கொளவா தரித்தான் கொடி

முரசு

வீடுதெளிவார்கட் கன்றி விளம்புபொரு
ணாட வரிதாகு நான்மறையே-யோடுபுலன்
காவா திருப்பார் கருத்தாள ரைத்திருப்பார்
மூவா திருப்பார் முரசு

படை

திட்டந்தத் தெட்டாதே தேசிகன்றாள் சென்னிமே
னட்டாற்றெரிவருதா ஞானமே-முட்டான
வத்தற் கினியா னணுகா வகையருள்வான்
பத்தர்க் கினியான் படை

தார்(மாலை)

அல்லவா மன்மனத்தை யாட்கொள்ள வல்லவா
வல்லவா சொல்லுஞ்சொல் மாலையே-நல்லடியார்
வர்க்கத்துக்குத் தரியான் வந்தாள்வான் வாதியர்கள
டகத்துக்குத் தரியாதான் தார்

உசாத்துணை

தத்துவராயரின் அடங்கன்முறை, ஆர்கைவ் வலைத்தளம்



✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.