சாமி சிதம்பரனார்
சாமி சிதம்பரம் (டிசம்பர் 1, 1900 – ஜனவரி 17, 1961) ஒரு தமிழ் இதழாளர், எழுத்தாளர் மற்றும் திராவிட இயக்கச் செயல்பாட்டாளர்.
பிறப்பு
சாமி சிதம்பரம் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள கடக்கம் எனும் சிற்றூரில் 1900- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1- ஆம் நாள் பிறந்தார். இவரது பெற்றோர் சாமிநாத மலையமான் மற்றும் கமலாம்பாள் அம்மையார்.
கல்வி
சாமி சிதம்பரம், 1923-ஆம் ஆண்டு “பண்டிதர்” பட்டம் பெற்றார்.
ஆசிரியர் பணி
சாமி சிதம்பரம், முதலில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழாசிரியரகப் பணியாற்றினார். பின்னர் அன்றைய தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்த அரசமடம் மற்றும் பாபநாசம் மாவட்டக்கழக உயர்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். தமிழறிஞர்களில் ஒருவரான இலக்குவனார், சாமி சிதம்பரத்தின் மாணவராவார்.
திருமணம்
சாமி சிதம்பரம் 1930- ஆம் ஆண்டு சிவகாமி என்னும் கணவனை இழந்த பெண்ணை சுயமரியாதைத் திருமண முறையில் மணம் புரிந்தார். இத்திருமணம் ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை மாநாட்டுப் பந்தலில் நடந்தது.
சுயமரியாதை இயக்கத்தில்
சாமி சிதம்பரம், ஈ.வே. ராமசாமியின் கொள்கைகளால் கவரப்பட்டு அவரது சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார். ஈ.வே. ராமசாமி 1929-30 -இல் மலேசியா சென்ற போது சாமி சிதம்பரமும் உடன் சென்றார். ஈ.வே. ராமசாமி சுயமரியாதை இயக்கத்தை ஒரு பொதுவுடைமைக் கட்சியாக மாற்ற நினைத்த போது அதனை சாமி சிதம்பரம் எதிர்த்தார். எஸ். ராமனாதனும் சிதம்பரத்துடன் சேர்ந்து எதிர்த்ததால் ஈ.வே. ராமசாமி சுயமரியாதை இயக்கத்தை மாற்றாமல் சுயமரியாதை சமதர்மக் கட்சி என்ற பெயரில் தனியே ஒரு கட்சியைத் தொடங்கினார். 1940-களில் ஈ.வே. ராமசாமியுடன் ஏற்பட்ட கொள்கை வேறுபாட்டால் சாமி சிதம்பரம் திராவிடர் கழகத்தை விட்டு வெளியேறினார். திராவிட இயக்கம் முன்வைத்த திராவிட-ஆரிய முரண் கொள்கையை மறுத்து இருவரும் ஒரே இனம் என்ற கருத்தை வலியுறுத்தினார்.
இதழியல்
சாமி சிதம்பரம், 1930- களில் பகுத்தறிவு, புரட்சி, குடியரசு, திராவிடன், விடுதலை போன்ற திராவிட /சுயமரியாதை இயக்க இதழ்களில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். இவை தவிர தினமணி, வெற்றிமுரசு, சரஸ்வதி ஆகிய இதழ்களிலும் பணியாற்றினார். 1936-38 -ஆம் ஆண்டுகளில் அறிவுக்கொடி என்னும் பத்திரிக்கையை கும்பகோணத்தில் நடத்தினார். 1950- களில் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் அதிகாரபூர்வ இதழான ஜனசக்தியில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.
ஆய்வுக் கருத்துகள்
சாமி சிதம்பரம், தனது ஆராய்ச்சி கருத்துகளாக கீழ்காண்பவற்றை முன்வைத்தார்;
- சிலப்பதிகாரம், திருக்குறள் போன்ற நூல்கள் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவையல்ல; பிற்காலத்தியவை. .
- இளங்கோவடிகள் செங்குட்டுவனின் உடன்பிறந்தவர் அல்லர்.
- சிலப்பதிகாரத்தில் கூறப்படும் சேரன் செங்குட்டுவனின் வட நாட்டுப் படையெடுப்பு (கனக-விஜயர்களை வெற்றி கொள்ளுதல்) தமிழர்கள் வடநாட்டவர்பாற் கொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத் திணிக்கப்பட்ட புனைவு.
படைப்புகள்
சாமி சிதம்பரம் மாணவர்களுக்கான் பாடநூல்கள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நாடகங்கள், இலக்கிய ஆய்வு நூல்கள் என சுமார் அறுபது நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் சில:
- அணைந்த விளக்கு - குண்டலகேசி காப்பியம்
- அணைந்த விளக்கு (வசன நாடகம்)
- அருட்பிரகாசர் அமுத வாசகம்
- அருணகிரியார் - குருபரர் அறிவுரைகள்
- அருள்நெறித் தொடர் (1-6)
- ஆபுத்திரன் அல்லது சமூக ஊழியன்
- இலக்கிய நுழைவாயில்
- இலக்கியம் என்றால் என்ன? - இரு பகுதிகள்
- இன்பசாகரன் (வசன நாடகம்)
- கம்பன் கண்ட தமிழகம் (1955)
- கற்பரசியார் நளாயினி வெண்பா
- காரல் ஹென்றி மார்க்ஸ்
- சாமி. சிதம்பரனார் சிந்தனைச்செய்யுள்
- சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் தத்துவம்
- சிலப்பதிகாரக் காலத்து தமிழ்நாடு
- தமிழர் தலைவர் ( இந்நூல், 1939- ஆம் ஆண்டு வரையான ஈ.வே. ராமசாமி பெரியாரின் வாழ்க்கை வரலாற்றைப் பதிந்துள்ளது)
- தொல்காப்பியத் தமிழர்
- நாலடியார் பாட்டும் உரையும்
- பத்துப் பாட்டும் பண்டைத் தமிழரும்
- பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும்
- புகழேந்தியின் புலமை
- புதிய தமிழகம்
- புதுக்குறள்
- மாதர் சுதந்திரம் அல்லது பெண்மக்கள் பெருமை (1931)
- மாயூரம் முன்சீப் வேதநாயகம்பிள்ளை
- வடலூரார் வாய்மொழி
- வளரும் தமிழ்
- வள்ளலார் கூறும் வாழ்க்கை நெறி
மறைவு
சாமி சிதம்பரம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஜனவர் 17, 1961அன்று மறைந்தார்.
நாட்டுடைமை
சாமி சிதம்பரத்தின் படைப்புகள் 2000-ல் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டன.
உசாத்துணை
தமிழ் வளர்த்த பெருமக்கள், அல்லயன்ஸ் நூற்றாண்டு வெளியீடு
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.