under review

கும்பேசர் குறவஞ்சி

From Tamil Wiki
Revision as of 11:13, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
தமிழ் இணைய கல்விக்கழகம்

கும்பேசர் குறவஞ்சி (பொ.யு. 17-ம் நூற்றாண்டு) கும்பகோணத்தில் கோவில் கொண்ட கும்பேசரை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட குறவஞ்சி என்னும் சிற்றிலக்கிய வகைமையைச் சார்ந்த நூல்.

ஆசிரியர்

கும்பேசர் குறவஞ்சியை இயற்றியவர் பாபநாச முதலியார். பாபநாச முதலியார் கும்பகோணத்தில் 18-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வசித்தவர். கும்பகோணம் வாணாதுறை வடக்கு வீதியில் திருவேங்கடம் பிள்ளை என்பவர் வசித்திருந்த வீடு இவர் வீடென்று சில பழைய பத்திரங்களால் தெரியவந்தது. இவர் காலத்தில் தஞ்சையில் மராட்டியர் ஆட்சி செய்தனர். ஏகோஜி என்ற மராட்டிய மன்னரை இவர் இந்நூலில் (பாடல் 6, 43) பாடியுள்ளார்.

காலம்

கும்பேசர் குறவஞ்சி நூலில் ’இரவலர் தருவான்றஞ்சை யேகோசி ராசன்’ என வரும் குறிப்பின் மூலம் இந்நூல் மராட்டியர் மன்னர் ஏகோஜி காலத்தையது என அறிய முடிகிறது. ஏகோஜி மன்னரின் காலம் பொ.யு. 1674 - 1684.

பார்க்க: மராட்டியர் ஆட்சி கால தமிழ் இலக்கியங்கள்

பதிப்பு, வெளியீடு

கும்பேசர் குறவஞ்சியின் ஓலைச்சுவடிகள் உ.வே. சாமிநாதையரிடம் இருந்தன. அந்நூலை சீர்நோக்கி பதிப்பிக்க வேண்டுமென்ற உ.வே. சா வின் ஆவல் அவர் வாழ்நாளில் நிறைவேறவில்லை. அவரது மகன் கல்யாணசுந்தரையர் 1944-ல் கும்பேசர் குறவஞ்சியைப் பதிப்பித்தார். இதைப்பற்றி நூலின் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்- "உத்தேசமாக 60 வருடங்களுக்குமுன் என் தந்தையாரவர்கள் கும்பேசர் குறவஞ்சியின் சில ஏட்டுப்பிரதிகளைத் தேடி எடுத்துப் பிரதி செய்து வைத்திருந்தார்கள். தாம் முதன் முதல் உத்தியோகஞ் செய்துவந்த தலமாதல் பற்றிக் குடந்தை விஷயமான இக் குறவஞ்சியை அவர்கள் தாம் பதிப்பிக்க வேண்டிய நூல்களுள் ஒன்றாக எண்ணியிருந்தார்கள். அவர்களுக்கிருந்த முக்கியமான பல வேலைகளால் இதனை அவர்கள் வெளியிடவில்லை. 1941-ல் அவர்கள் இந்நூலாசிரியராகிய பாபநாச முதலியாரைப் பற்றி வெளியிட்ட கட்டுரை ஒன்றில், 'அவர் இயற்றிய குறவஞ்சி மறைவில் இருக்கிறது அந்த நாடகம் உலக அரங்கில் ஏறுங்காலம் எப்போது வருமோ!' என்று குறித்திருக்கிறார்கள். அவர்களுடைய விருப்பம் இப்போது. மகாமகத்தெருவுக்கு முன்பு ஈடேறியது ஸ்ரீ கும்பேசுவரருடைய திருவருளின் செயலென்றே எண்ணுகிறேன்".

நூல் அமைப்பு

கும்பேசர் குறவஞ்சி கும்பகோணத்தில் எழுந்தருளியிருக்கும் கும்பேசர் மீது குடந்தை பாபநாச முதலியாரால் இயற்றப்பட்டது. பெரும்பாலும் கீர்த்தனைகளாகவும், இடையிடையே வெண்பா, அகவல், விருத்தம், கொச்சக்கலிப்பா, கட்டளைக்கலிப்பா, கட்டளைக்கலித்துறை முதலியபா வகைகளோடும் எழுதப்பட்டது.

கிடைத்த பிரதிகளில் கீர்த்தனங்கள் பலவற்றுக்கு இராகங்களின் பெயர் காணப்படவில்லை; தலைப்பில் இராகம் என்ற சொல்மட்டும் பதிப்பிக்கப்பட்டது.

கும்பேசர் மீது ஒரு நாயகி காதல் கொண்டு விரக தாபத்தால் துன்பமடைகிறாள். அப்போது ஒரு குறத்தி வந்து தன் நாட்டு வளத்தையும் மலை வளத்தையும் சொல்லிக் 'கும்பநாதர் உனக்கு அருள் செய்வார்' என்று குறி சொல்கிறாள். அப்போது அவளைத் தேடிக் கொண்டு அவள் நாயகனாகிய குறவன் வருகிறான். குறத்தியும் குறவனும்சேர்ந்து கும்பேசரைத் துதிக்கிறார்கள். இதனோடு நாடகம் முடிகிறது.

இதனுள் தலைவியின் கூற்றாக வரும் பாடல்கள் புறத்திணை கைக்கிளை வகையைச் சேர்ந்தவை. மன்மதோபாலம்பனம், சந்திரோபாலம்பனம், தென்றலைப்பழித்தல், பொழுது கண்டிரங்கல், காமமிகக்கழிபடர் கிளவி ஆகிய துறைகளில் பாடல்கள் அமைந்துள்ளன.

கும்பகோணம் பற்றிய குறிப்புகள்

குடந்தையில் உள்ள அரிசிலாறு, ஆராவமுதர், ஈழந்திறை கொண்டார், காசியபன் மடு, காயாரோகணம், காவேரி, குலோத்துங்க காளி, சப்தகன்னிகைகள், நவநதிகள், பகவ தீரித்தம், பேராரவாரப் பிள்ளையார், பொற்றாமரைக்குளம்; மங்கைநாயகி, மாமகத்தீர்த்தம் பற்றிய குறிப்புகள் கும்பேசர் குறவஞ்சியில் காணப்படுகின்றன.

குடந்தை தொடர்பான பின்வரும் புராணச் செய்திகள் இந்நூலில் காணப்படுகின்றன: எலும்புகள் தாமரை மலர்களாக மாறினமை, கோதமரின் கோஹத்தி தவிர்ந்தமை, ஒரு நாய் பேறு பெற்றது, இராமபிரான் கும்பேசரை வழிபட்டு இரவணனைக் கொல்லத்தக்க வலிமை பெற்றது, பிரகஸ்பதி வழிபட்டுத் தேவகுருவானது, ஆதிசேஷன் கும்பேசரை வழிபட்டு பூபாரத்தை ஒரு தலையில் சுமக்கும் வலிமை பெற்றது, ஏம மாமுனி இத்தலத்திற் தவம் செய்து முத்தியடைந்தது, இந்திரன் பிள்ளைப் பேற்றைப் பெற்றது, நவநதிகள் தம் பாவங்களைத் தீர்த்துக் கொண்டது, கும்பேசர் உற்பவித்த வரலாறு, மாந்தாதா கும்பேசரை வழிபட்டு ஏகசக்ராதி பதியானது முதலியன.

நிகழ்த்து கலையாக

கும்பேசர் குறவஞ்சி நாடகத்தைக் கும்பகோணத்திலிருந்த கோப்பு நடராஜ செட்டியார் என்பவர் நடனக்கலைஞர்களைக் கொண்டு மாசிமகத் திருவிழாவின்போது நடைபெறச் செய்தாரென்று பாயிரச் செய்யுள் தெரிவிக்கிறது.

பாடல் நடை

நாயகி கும்பேசர்மேல் காதல் கொள்ளல்

தண்ணறவ மலர்ச்சோலைத் திருக்குடந்தைக்
    கும்பேசர் தரணி மீதில்
விண்ணவர்பண் ணவர்துதித்து நண்ணவிடை
    மேற்பவனி மேவக் கண்டு
கண்ணளவி நன்றிமன வளவினளப்
    பரியபெருங் காதல் கொண்ட‌
வண்ணமுலைச் செகன்மோகி னிப்பெண்மத
    ன‌னுமயங்க வருகின்றாளே. (14)

தலைவி இரங்கல்

வருவாய் வருவாய் என்று வழிபார்த்துப் பார்த்தெனது
தெருவினின்று நின்றலைந்தேனடி சகியே


ஒருதாய்க் கொருபெண் பிறந்தலைந் தேனுன்
திருவுள மிரங்காத தேதோ சகியே


மிளகுபத மாகுமுன்னே கடுகுபொடி யாகுமென்
றுளவு சொன்னதைச் சொல்லவொண் ணாதோ சகியே


குளிர்மதிச் சடையாளர் கும்பலிங் கேசர்வரக்
களவிற்குறி சொல்வாரைக் காணேன் சகியே.

உசாத்துணை


✅Finalised Page