under review

கும்பகோணப் புராணம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
 
(One intermediate revision by the same user not shown)
Line 49: Line 49:


======கிருதகம்பள விதி கூறிய அத்தியாயம்======
======கிருதகம்பள விதி கூறிய அத்தியாயம்======
(கிருத கம்பளம்-நெய்யனால் நனைக்கப்பட்ட கம்பளம்)  
(கிருத கம்பளம்-நெய்யினால் நனைக்கப்பட்ட கம்பளம்)  


மெல்லிய ஆடையில் நெய்யை உருக்கி நனைத்து, மாலையில் காஞ்சியிலுள்ள ஏகாம்பரநாதன் முன் வைத்து, நெய்யுடன் பல பண்டங்களைப் படைத்து கிருதகம்பளத்தை அழகுறச் சார்த்தி , கற்பூர ஆரத்தி செய்து  “ கங்கையலம்பும் வேணியா! ” என்று சொல்லி , இரவெல்லாம் துயில் நீத்து வைகறை எழுந்து நாட்கடனை முடித்து சிவனடியாருக்கு  உணவளிக்க வேண்டும். இப்பூசை மாசிமாத முழுநிலவில் செய்தல் நன்று. பூசையால் புத்தியும் முத்தியும் பெருகும். செல்வமும் புகழும்  சேரும் . பாபம் போகும் .  
மெல்லிய ஆடையில் நெய்யை உருக்கி நனைத்து, மாலையில் காஞ்சியிலுள்ள ஏகாம்பரநாதன் முன் வைத்து, நெய்யுடன் பல பண்டங்களைப் படைத்து கிருதகம்பளத்தை அழகுறச் சார்த்தி , கற்பூர ஆரத்தி செய்து  “ கங்கையலம்பும் வேணியா! ” என்று சொல்லி , இரவெல்லாம் துயில் நீத்து வைகறை எழுந்து நாட்கடனை முடித்து சிவனடியாருக்கு  உணவளிக்க வேண்டும். இப்பூசை மாசிமாத முழுநிலவில் செய்தல் நன்று. பூசையால் புத்தியும் முத்தியும் பெருகும். செல்வமும் புகழும்  சேரும் . பாபம் போகும் .  


சுமேதா என்பவன் வெறுமை நீங்க கோதம முனிவரின் சொல்படி கிருதகம்பள பூசை செய்து பலன் பெற்றான்.  
சுமேதா என்பவன் வெறுமை நீங்க கோதம முனிவரின் சொல்படி கிருதகம்பள பூசை செய்து பலன் பெற்றான்.


======சீதகும்பமும் திலபூசையும் உரைத்த அத்தியாயம்======
======சீதகும்பமும் திலபூசையும் உரைத்த அத்தியாயம்======
Line 168: Line 168:
*[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM0lZYy&tag=%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D#book1/49 கும்பகோணப் புராணம், தமிழ் இணைய கல்விக் கழகம்]
*[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM0lZYy&tag=%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D#book1/49 கும்பகோணப் புராணம், தமிழ் இணைய கல்விக் கழகம்]
*[https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM7jZly.TVA_BOK_0008315/page/n21/mode/2up கும்பகோணப் புராணம்-சொக்கப்ப புலவர், ஆர்கைவ் வலைத்தளம்]
*[https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM7jZly.TVA_BOK_0008315/page/n21/mode/2up கும்பகோணப் புராணம்-சொக்கப்ப புலவர், ஆர்கைவ் வலைத்தளம்]
{{Second review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 12:15, 8 May 2024

Kumbakonapuranam.jpg

கும்பகோணப் புராணம்(பொ.யு. 17-ம் நூற்றாண்டு) சோழ நாட்டிலுள்ள கும்பகோணம் என்னும் தலத்தைப் பாடிய நூல். சொக்கப்ப புலவரால் இயற்றப்பட்டது. கும்பகோணப் புராணம் என்ற பெயரில் இரு நூல்கள் உள்ளன. மற்றொரு கும்பகோணப் புராணம் அகோர முனிவரால் இயற்றப்பட்டது.

பதிப்பு, வரலாறு

கும்பகோணப் புராணத்தை தஞ்சை சரஸ்வதி மகால் நூல் நிலையத்தின் சுவடிப் பதிப்புகளிலிருந்து மு. சடகோப ராமானுஜம் பிள்ளை பிழை நீக்கி, பாடபேதங்கள், அருஞ்சொற்பொருள் மற்றும் குறிப்புரையுடன் 1970-ல் பதிப்பித்தார். நூலின் இறுதியில் இருந்த, காப்புச் செய்யுள்களாக இருந்திருக்கலாம் எனக் கருதத்தக்க சில தனிப்பாடல்களையும் இணைத்து பதிப்பித்தார்.

ஆசிரியர்

கும்பகோணைப் புராணத்தை இயற்றியவர் கொக்கநாதப் புலவர்(சொக்கப்ப புலவர்). சின காஞ்சி சென்று கிருத கம்பளப் பூசை செய்தால் பயனுண்டென்று கூறுவதாலும் , தொண்டை நாட்டு அரசூர் சொக்கன் என்று தன்னைக் கூறிக் கொள்வதாலும் , இவர் தொண்டை நாட்டைச் சேர்ந்தவர் என அறிகிறோம். சைவ சித்தாந்தத்தில் தேர்ச்சி பெற்றவர். இவரது ஆசிரியர் இலக்கண விளக்கம் இயற்றிய திருவாரூர் வைத்தியநாத தேசிகர் என்பது பின்வரும் பாடல் மூலம் அறிய வருகிறது.

அவமொழித் தென்னுள்ளத் தமுத மூறுதீஞ்
சுவையெனத் தமிழ்வளஞ் சுரந்து நல்குமே
தவமெனக் கமலையி லிருந்த தேசிகன்
தவவணை வயித்திய நாதன் றாள்களே

தென்னக மராத்திய மன்னர்களுக்கு தஞ்சை தான் தலை நகரம் என்றாலும் திருவிடைமருதூர், திருவாரூர், கும்பகோணம் முதலிய ஊர்களிலும் அரண்மனைகள் இருந்தன. ஸாஹஜி (நூலில் சகசி) என்ற அரசர் கும்பகோணத்திலேயே தன் வாழ்நாளில் பெரும்பகுதியைக் கழித்திருக்கின்றாரென்றும், சகசி மன்னர் தமிழ் தெலுங்கு மராத்தி மொழிகளில் நூல்கள் இயற்றியதும் சொக்கப்ப புலவரின் கும்பகோணப் புராணம் மூலம் அறிய வருகிறது.

கொண்டல் கண்துயிலுஞ் சோலைக் குடந்தையிற் பலருமேவத்
தண்டமிழ்ப் புலவன் வெற்றித் தாரைவேற்றானை மன்னன்
மண்டலம் புரக்குஞ் செங்கோன் மனு நிகர் சகசிவாழ் நாள்
தொண்டை... நாட்டரைசு சொக்கன்னரசவை சொற்றதன்றே

என்ற பாடல் மூலம் சகசி அரசன் மிகுந்த நீதிமான் என்பதும், புலவர்களிடத்து மிக்க பற்றுள்ளவன் என்பதும், சொக்கநாதப் புலவரது நாடு தொண்டை நாடு என்பதும், கும்பகோணப் புராணம் சகசி அவைக்களத்தில் அரங்கேற்றியது என்பதும் இந் நூலுக்கு இவர் வைத்த பெயர் குடந்தைப் புராணம் என்பதும் விளங்குகின்றன.

நூல் அமைப்பு

கும்பகோணப் புராணம் 27 அத்தியாயங்களில், 1075 பாடல்களில் கும்பகோணத்தின் தலப்பெருமையையும் சிவ வழிபாட்டின் சிறப்பையும் கூறுகிறது. மற்ற நூல்களைப் போலல்லாது விநாயகர் வணக்கம் முதலிய கடவுள் வாழ்த்துப் பாடல்கள் நூலின் இறுதியில் காணப்படுகின்றன. தல புராணமாக இருப்பினும் இந்நூலில் பல சைவ சித்தாந்தக் கருத்துகள் கூறப்படுகின்றன. நிர்க்குணப் பிரம்மம் பற்றியும் கூறப்படுகிறது.

நைமிசாரணியச் சிறப்புரைத்த அத்தியாயம்

முதல் அத்தியாயம் நைமிசாரண்யத்தின் சிறப்பைக் கூறுகிறது.நைமிசாரண்யம், சிவபெருமான் தன் அருள் பெட்டகத்தைத் திறந்தாற் போன்றது; முனிவர்களின் உறைவிடம் ; ஞான பூமி.அங்கு சூத மாமுனிவர் வந்தார். சிவ ரகசியம் என்ற நூலைப்பற்றி முனிவர்களுக்குக் கூறத் தொடங்கினார்.

திருக்கயிலாயச் சிறப்புரைத்த அத்தியாயம்

கைலாச மலையின் சிறப்பு கூறப்படுகிறது. அங்குள்ள நாகணப் பறவைகள் ஆகமத்துக்குப் பொருள் கூறுவன போல் குரலெழுப்பின. அதனைக் கேட்டுக் காகங்கள் மகிழ்ந்தன. வேங்கை , சிங்கம் முதலிய கொடிய விலங்குகள் தவம் இயற்றுகின்றன . அம் மலையின் ஒளியால் சூரிய ஒளி மின் மினியின் ஒளி போன்றிருக்கின்றது. அகந்தை தீர்ந்தவர்களின் ஆரவார ஓசைகள் கேட்கின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த கயிலையில் நந்தியம் பெருமான் கையில் பிரம்பு கொண்டு உடன்வர அரியணை மீது உமையோடு வந்து சிவபெருமான் அமர்ந்தார்.

கும்பகோணச் சிறப்புரைத்த அத்தியாயம்

உமையம்மை சிவனிடம் உலக உயிர்கள் வினை நீங்கிப் முக்தியடைவதற்குரிய தலம் எது?" என்று கேட்டதற்கு சிவன் கும்பகோணமே அதற்கான தலம் எனக்கூறி அதன் பெருமைகளைப் பின்வருமாறு கூறுகிறார்.

கும்பகோணத்தை காவிரியும், அரிசிலாறும் சுற்றி வருகின்றன. அந்நகர் செல்வ வளம் மிக்கது. கும்பகோணத்தில் மாந்தாதா , கும்பலிங்கப் பூசை புரிந்ததன் பயனாக , உலகை ஒரு குடைக்கீழ் ஆண்டான். அவன் ஆட்சியில் புலியும் பசுவும் ஒன்றாக நீரருந்தின மாளவ நாட்டு மன்னன் சத்திய கீர்த்தி, பிரம்மஹத்தி தோஷத்தை இந் நகரத்துக் காசிப தீர்த்தத்தில் மூழ்கித் தீர்த்துக்கொண்டான். சோமலிமங்கார்ச்சனையால் சந்திரன் தன் உடல் நோய் நீங்கி வளம் பெற்றான், குபேரன் சிவனுக்குத் தோழனாகி, அலகாபுரிக்குத் தலைவனானான். மயனால் தன் ஒளியை இழந்த சூரியன் மீண்டும் ஒளி பெற்றான். சக்கராயுதம் வேண்டி விஷ்ணு ஆயிரம் மலர்களால் அர்ச்சனை செய்யும்போது அவற்றுள் ஒன்று குறையத் தன் கண்ணைப் பறித்து வழிபாடு செய்தார். கும்பம் சாய்ந்தபோது அதிலிருந்து அமுதம் பொங்கி எழுந்து அந்த இடம் பொற்றாமரைக்குளமாயிற்று. சோமயாகத்தின் பலனாக மகாமகக்குளம் உண்டாயிற்று . அக்குளத்துள் அச்சுவ தீர்த்தம், அழல் தீர்த்தம் முதலான பல தீர்த்தங்களுண்டு . கங்கை முதலான தீர்த்தங்கள் ஒன்று சேந்தது போன்ற அதனுள் ஒருமுறை முழுகினால் பாவம் போகும். பன்னிரெண்டாண்டுக்கு ஒரு முறை அங்கு மகாமகம் என்னும் விழா நடக்கும்.

சிவபூசை யுபகரணங் கூறிய அத்தியாயம்

இந்த அத்தியாயத்தில் சிவபூசை செய்யும் முறை கூறப்படுகிறது.

காலையில் இறைவனுக்குத் திருமஞ்சனம்(அபிஷேகம்) செய்து, வெண்ணீறு சந்தனம் பூசி, தூய ஆடை அணிவித்து எருக்கு போன்ற மலரால் வழிபட வேண்டுமென்று சாபால உபரிடதம் கூறுகிறது. அதன்பின் நிவேதனம்(படைப்பு). அதன்பின் தீபம் அருக்கியம் கொடுத்து ஐந்தெழுத்தை நூற்றெட்டு முறை ஜபிக்க வேண்டும் . இடக் காலைத் தரையில் மடித்துச் சதா சிவத்தை அபிமுகமாக நோக்கி அவன் திருப் பெயர்களைச் சொல்லி பிழை பொறுக்க வேண்டி, நீரை பூவொடு விட்டு வில்வத்தால் மூன்று முறை தொட்டுச் சத்தியோஜாதம் முதலிய முகங்களைச் சொல்லி ஜெபித்து மும்முறை வலம் வந்து ஐந்தெழுத்தைப் பலமுறை சொல்ல வேண்டும். நோயற்ற வாழ்வை வேண்டி தீர்த்தம் பருக வேண்டும்.

மாலையில் தீர்த்தக் கரையில் மூத்த பிள்ளையாரைத் தொழுது “ சம்பு கேசாய நம : ” “ சிவாய நம : ” என்று மும்முறை சொல்லி ஆசமனம் செய்யவேண்டும். பின் பிராணாயாமம் செய்து திருநீறணிந்து அக்கமணி புனைந்து அந்தி தொழ வேண்டும்.

ஐப்பசி கார்த்திகையில் தாமரை மலரால் வழிபாடு செய்தால் வீடுபேறடைவர். மார்கழியில் வெள்ளெருக்கு மலரால் வழிபட்டால் பொன்விமானம் மீது வானில் பொலிவர். ஆறு பெரும்பொழுதுகளிலும் முப்பதாயிரம் முறை மலரால் வழிபாடு செய்பவர் தாம் விரும்புபவற்றைப் பெறுவர்- இவ்வாறு சிவபூஜையின் பலன்கள் கூறப்படுகின்றன.

சிவபுண்ணியம் உரைத்த அத்தியாயம்

சிவாலயத்தில் நெய் விளக்கேற்றல், அடியார் சேவை போன்றவை செய்பவர் சிவலோகம் செல்வர் . அகிற்புகை , குங்கிலியப்புகை முதலியன கொண்டு வழிபாடு செய்பவர் பிறவாமை எய்துவர். ஆலயத்தில் வண்ணம் தீட்டுதல் , சுதையால் துலங்கவைத்தல் , யாழ் குழல் முதலிய கொண்டு இறைவனை மகிழவைத்தல் போன்றவை செய்பவர்கள் கருவிடை எய்தார்(பிறவி இல்லை) . .ஆலயத்தில் அலகிட்டு மெழுகிட்டு உழவாரத் தொண்டு செய்பவர் சிவலோகம் செல்வர். கும்ப மாதத்தில் கிருதகம்பளத்தால்(நெய்யால் நனைக்கப்பட்ட கம்பளம்) வழிபாடு செய்பவர் சிவபதவி பெறுவர்.

கிருதகம்பள விதி கூறிய அத்தியாயம்

(கிருத கம்பளம்-நெய்யினால் நனைக்கப்பட்ட கம்பளம்)

மெல்லிய ஆடையில் நெய்யை உருக்கி நனைத்து, மாலையில் காஞ்சியிலுள்ள ஏகாம்பரநாதன் முன் வைத்து, நெய்யுடன் பல பண்டங்களைப் படைத்து கிருதகம்பளத்தை அழகுறச் சார்த்தி , கற்பூர ஆரத்தி செய்து “ கங்கையலம்பும் வேணியா! ” என்று சொல்லி , இரவெல்லாம் துயில் நீத்து வைகறை எழுந்து நாட்கடனை முடித்து சிவனடியாருக்கு உணவளிக்க வேண்டும். இப்பூசை மாசிமாத முழுநிலவில் செய்தல் நன்று. பூசையால் புத்தியும் முத்தியும் பெருகும். செல்வமும் புகழும் சேரும் . பாபம் போகும் .

சுமேதா என்பவன் வெறுமை நீங்க கோதம முனிவரின் சொல்படி கிருதகம்பள பூசை செய்து பலன் பெற்றான்.

சீதகும்பமும் திலபூசையும் உரைத்த அத்தியாயம்

சித்திரை முதல் ஆவணி வரையுள்ள மாதங்களில் இறைவனுக்கு நல்ல நீரில் மணப் பொருள்கள் சேர்த்துத் திருமஞ்சனமாட்டி மலர்கொண்டு வழிபட்டால் செல்வம் வளர்ந்து நல்வாழ்வும், வினை அகன்று முத்தியும் கிடைக்கும்.எள்ளினால் பூசை செய்வேனென்று சங்கல்பம் செய்து கொண்டு, பாலால் திருமஞ்சனம் செய்து, பாலமுதோடு முக்கனிகளையும் நிவேதித்து , அருக்கியம் கொடுத்துப் பங்குனித் திங்களில் எள்ளினால் பூசை செய்யவேண்டும் . சித்திரைத் திங்கள் வளர்பிறை நவமியோடு கூடிய நாளிலும் கிரகண காலத்தும் எள்ளினால் வழிபாடு செய்தால் நாம் செய்த தீவினை போகும்; தென்புலத்தார்க்குக் (இறந்தவர்களுக்கு) கடன்கள் செய்யும் பயனும் கிடைக்கும்.

சிவனாம மகிமை உரைத்த அத்தியாயம்

நிதம் எனும் நாட்டில் , தீயவனாய அந்தணன் ஒருவன் பக்திமானாகிய அந்நாட்டரசனைக் கொல்லும்பொருட்டு வில்லுடன் அந்தப்புரத்தில் நுழைந்தான். உறங்கிக்கொண்டிருந்த அரசன் விழித்து அந்தணனைக் கண்டு கொல்லச் சென்றான். அந்தணன் சிவனடியார்போல் நடித்து சிவனின் நாமத்தைப் பாட ஆரம்பிக்க, அரசன் சிவனடியாரைக் கொல்லத் துணிந்ததை எண்ணி வருந்தி, அந்தணனை வணங்கி மரியாதை செய்தான். இறைநாமத்தின் மகிமை உணர்ந்த அந்தணன் மனம் திருந்தி உண்மையான பக்தனானான்.

வாணலிங்க மகிமை உரைத்த அத்தியாயம்

பலவகையான் லிங்கங்கள் வழிபாட்டில் உள்ளன. வாணலிங்கம் நர்மதை ஆற்றிலிருக்கிறது. நர்மதையின் நீர்கொண்டு அந்த லிங்கத்தை வழிபட்டால் சிவ பதவி பெறுவர் என்று அகத்தியர் ஓர் சிவயோகிக்கு உபதேசித்த வரலாறு கூறப்படுகிறது. வழிப்பறி செய்யும் வேடனொருவன் வாணலிங்கத்தை வில்வத்தால் அர்ச்சனை செய்து வந்தான். அவனால் வழிப்பறிக்காகக் கொல்லப்பட்டவர்களும் அவன் சிவனடியாராதலால் நற்கதி அடைந்தனர். ஒருமுறை கொடிய அந்தணன் ஒருவனை வேடன் வாணலிங்கத்தால் அடித்துக்கொல்ல, வாணலிங்கத்தால் அடிபட்டதால் யமன் அவன் கொடியவனானாலும் சிவலோகம் செல்லத் தக்கவன் என்று கூறினான். வாணலிங்கத்தின் மகிமை அத்தகையது.

வேடன் கதிபெற்ற அத்தியாயம்

நர்மதைக் கரையில் லிங்க வழிபாடு செய்த வேடனொருவன் அவ்வழியே வந்த அந்தணர்களை லிங்கத்தால் அடித்துக்கொன்று அவர்களின் குருதியால் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து உடல்களை வில்வத்தால் மூடினான். தண்டிக்க வந்த அரசனின் படையால் அவனைக் கொல்ல முடியவில்லை. சிவன் அவர்கள் முன் தோன்றி வேடன் சிவவழிபாடு செய்ததால் அவன் நற்கதி பெறுவான் எனக் கூறி மறைந்தார்.

வாணலிங்க மகிமை கூறிய அத்தியாயம்

வாணலிங்கார்ச்சனையால் பிறவிக்கடல் கடக்கலாம். வல்வினைபோம். பிறவிப்பிணிக்கு நன்மருந்து . பொறாமை முதலிய தீக்குணங்களில்லார்க்கே இவ்வழிபாடு கிட்டும். இதற்கிணையானது வேறெதுவுமில்லை . ஆதலால் சிவனையே பதியாக நினைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

வாணலிங்கத் தரிசனம் உரைத்த அத்தியாயம்

வாணலிங்க பூஜை செய்த அந்தணனொருவன் முனிவரின் சொல் கேட்டு தன் பாவங்கள் நீங்கப்பெற்ற கதை.

சிவயோக விரதம் உரைத்த அத்தியாயம்

ஓர் அந்தணன் தன் தீவினைகளின் காரணமாக தாழ்ந்த குலப்பெண்ணாகப் பிறந்து, சிவபூஜை செய்ததால் ஒரே பிறவியில் தீவினை நீங்கப்பெற்றதைக் கூறுகிறது.

சிவசரிதம் கூறிய அத்தியாயம்

கேதாரத்தீசனை உள்ளன்புடன் பூசிப்பவர் பெறும் யோகசித்திகளைக் கூறுகிறது. அவர்கள் இம்மையில் செல்வம் உடையவராக இருப்பர். இறுதியில் பந்தம் நீங்கி சிவகதி பெறுவர்.

அபராதங் கூறிய அத்தியாயம்

தேவர்கள் சிவாலய வழிபாடு செய்யும் முறைமையை சிவனிடம் கேட்டறிந்தனர். தூய்மையாகச் செல்லவேண்டும். மேலாடையோ, தலைப்பாகையோ, செருப்போ அணியலாகாது; கோமுகி நீரில் கால் வைக்கலாகாது. கோவிலை வலம் வராதவர்கள், கோவில் சுவற்றை அசுத்தம் செய்பவர்கள் போன்றவர் இழிபிறவி எய்துவர்.

விபூதி மகிமை கூறிய அத்தியாயம்

இருவகை ஸ்னானங்கள்(நீராடுதல்) உண்டு. நீரில் மூழ்குதல் மற்றும் உடல் முழுதும் திருநீறு பூசல். வெண்ணீறு பூசுதலால் பல திருத்தலங்களை தரிசித்த பலன் உண்டாகும். திருநீறு அணியாதவன் வைதீக காரியங்கள் செய்யத் தகுதியற்றவன்.

காலந்தவறாது முக்காலங்களிலும் நீறு பூசுபவன் , இறைவனை இடைவிடாமல் நினைப்பவன் இவர்கள் இறைவனுக்கு நிகரானவர். நீறணியாதவன் பாவி. அக்கமணி(ருத்ராக்ஷ மாலை), நீறு அணிந்தபின் முப்புண்டரமாகத் திருநீற்றை தலையில் அணிய வேண்டும்.

கலிவிடம்பன் அத்தியாயம்

மக்கள் முதல் மூன்று யுகங்களிலும் நீறணிந்து இறை வழிபாடு ஒழுங்காகச் செய்து வந்தனர். பாவமூர்த்திகள் உண்மையான சிவனடியார்களை நெருங்க முடியவில்லை. அவை படையாகத் திரண்டு எமனிடம் சென்று சிவனடியார்களை நெருங்க முடியாமல் இருப்பதை கூறி முறையிட்டனர். யமன் அவர்களை சிவனடியார் அல்லாதவர்களிடம் சென்று வசிக்குமாறு வழி கூறினான். அவர்களுக்கான அடையாளங்களையும் கூறினான்.

காசியின் சிறப்புரைத்த அத்தியாயம்

துசவான் என்னும் முனிவர் காசிக்குச்சென்றார் , செல்லும்வழியில் முனிவர் பலரைச் சந்தித்து அவர்களுடன் காசிக்குப் போய்ச் சேர்ந்தார். முனிவர் பலரோடு விசுவலிங்க தரிசனம் முடித்தபின், அதன் பயனால் எல்லோரும் முத்திபெற்றனர். நல்வினைப்பயனால் காசியில் இறக்க நேர்ந்தது.

கும்பகோணச் சிறப்புரைத்த அத்தியாயம்

பிறவிச் சேற்றைத் தன் புகழெனும் நீரால் கழுவும் தாயாய், முத்திப்பயிர் விளையும் வயலாய், பாச வேரறுக்கும் பதியாய் விளங்குவது குடந்தை. அப்பதியில் வாழ்பவர், காண்பவர், நினைப்பவர் கும்பகோணமென்று ஒருமுறை சொன்னவர் அனைவருக்கும் முத்திகொடுக்கும் தலம். ஆதிகும்பேசன் பூசை, தரிசனம், அடியவர் நட்பு, தியானம், வலம்வரல் முதலியவை அவர்களுக்குக் கிடைக்கும். கரியில் நெருப்புப் பற்றுவதுபோல் ஞானம் பற்றும். அங்கு செய்யும் தவம் ஒன்றாயினும் கோடியாய் வளரும்.

பிரமன் மாயனைக் கண்ட அத்தியாயம்

பிரம்மன் திருமாலைக்கண்டு சிவபூஜையின் மகிமையைக் கூறுமாறு கேட்கிறான். சிவன் பூஜை முறையைக் கூறுகிறார்

சுதை வடிவிலமைந்த கும்பேசனை மணம் வீசும் மலர்களாலும், வில்வத்தாலும், அன்பு எனும் மலராலும் பூஜை செய்தால் பிறவிக்கடல் வற்றும்; முக்தி கிடைக்கும் . அதிகாலை எழுந்து காலைக் கடனை முடித்து, நீராடி, நீறு பூசி , முப்புண்டரமும் தரித்தபின் முறையாக அர்ச்சனை புரிந்தால் பயனுண்டாகும்.

மாயன் சிவபூசை மகிமை கூறிய அத்தியாயம்

தேவர்க்குத் தலைவனான இந்திரன் சிவ வழிபாட்டால் இந்திரபதவி அடைந்தான். சிவவழிபாட்டை விட்டு மற்ற கடவுளரைப் போற்றல் கரும்பை விட்டு இரும்பைத் தின்றல் போன்றது. மாதொரு பாகனை அர்ச்சிக்காதவன் உயர் குலத்தவனாயினும் நரகம் செல்வான். புலன் வழியில் புத்தியைச் செலுத்துபவன் ,சிவபூசை மறந்தவன், உண்ணுஞ்சோறும் பருகும் நீரும் மலத்துக்கு ஒப்பானவை. ஐம்புலன்களையடக்கி, முக்கரணங்களை மடக்கி, அன்பினால் சிவ பூசை செய்பவனுக்கு செல்வம் கிட்டும். பூசனை செய்யாதவன் செல்வம் அழியும். சைவசீலத்தின் வழிநில்லாதவன் செய்யும் செயல்கள் பயனற்றவை.

சிவபத்தர் மகிமை கூறிய அத்தியாயம்

அனைத்து குலத்தவரும் சிவ சின்னம் தரித்து சிவ வழிபாட்டில் ஈடுபட்டால் அவர்கள் சைவர்களே. மக்களால் போற்றப் படுவார்கள் . சிவபத்தியால் அசுவமேதம் செய்த பலனுண்டு . சிவபக்தியறியார் அறுசுவையோடு அளிக்கும் அன்ன தானத்தால் என்ன பயன்? சிவபத்தியில்லார்க்கு மனத்தை அடக்கிச் செய்யும் தவம்தான் என்ன செய்யும்? ஐந்தெழுத்தை ஓதுபவன் எண்ணிலா வளம் பெறுவான்.சிவனை வணங்கி ஒருமுறை வெண்ணீறிட்டால் பழுதகல அறம் எல்லாம் பலிக்கும். அவனை அர்ச்சனை செய்தால் நற்குலத்து உத்தமனாவான். சொற்கலை தேர்ந்தவனாக இருப்பான்.

சிவயோகியைக் கண்ட அத்தியாயம்

சிங்கமும் மானும் ஒன்றாக நீரருந்தும் பொதிகையில் முனிவர்கள் ஆசிரமம் இருந்தது. குறுமுனிவன் அகத்தியன் அந்த சிவயோகிகளைக் கண்டார்.

சிவபூசை விதி கூறிய அத்தியாயம்

குறுமுனி, சிவபூசை விதியை முனிவர்களுக்குச் சொன்னார். வைகறை துயில் நீத்துச் சிவனை வணங்கி பால் நிற வெண்ணீறணிய வேண்டும். அக்கமணி அணிந்து சிவபூசைக்குரிய மந்திரங்களைச் செபம் செய்ய வேண்டும். சிவலிங்கத்திற்கு வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். அஞ்செழுத்தை எண்ணி ருத்திரம் செபித்து அவன் திருவடி வணங்க வேண்டும்.

பிரதக்கண விதிகூறிய அத்தியாயம்

சிவபெருமான் அபிஷேக நீர்செல்லும் கோமுகிக்குச் சோமசூத்திரம் என்று பெயர். அதனைத் தாண்டிச் செல்லாமல் செய்யும் பிரதட்சணத்துக்கு சோமசூத்திரப் பிரதட்சணமென்று சாத்திரம் கூறுகின்றது. நந்தியை வணங்கி அவரிடமிருந்து தொடங்கி இடமாக வந்து சண்டேசுரப் பெருமானை வணங்கி வந்த வழியே திரும்பி நந்தியை அடைந்து அவர் பின்புறமாகக் கோமுகிவரை வலம் வந்து பின் வந்தவழியே திரும்பிப்போய் நந்தியை வணங்கிப் பின் இடமாக வந்து சண்டேசுரப் பெருமானைத் தொழுது பின் திரும்பி நந்தியை அடைந்து இறைவனை வணங்கல் வேண்டும். இந்தப் பிரதட்சணம் ஒன்பது முறை செய்வது நன்று. இவ்வகையாகக் காலை மாலை வேளைகளில் செய்யலாமென்றும் பிரதோஷ காலங்களில் செய்யலாமென்றும் இவ்வாறு செய்வதால் எல்லாப் பாவங்களும் நலியுமென்றும், பந்தம் நீங்குமென்றும் அறியப்படுகிறது.

பூசைக்கு உபகரணங் கூறிய அத்தியாயம்

பூசை செய்பவன் கிழக்கு முகமாக இருத்தல் வேண்டும். அக்கமாலை, விபூதியணிதல் வேண்டும். தூய்மையான நீரில் மணப்பொருள்கள் சேர்த்து, அகங்குளிர நோக்கிச் சதாசிவத்தையெண்ணி, உருத்திரம் செபித்துக்கொண்டு, அந்நீரை அபிஷேகம் செய்ய வேண்டும். வெள்ளிய தூய ஆடையால் திருமேனியை ஒற்றவேண்டும். பால்போன்ற ஆடையை அணிவித்து நீறு பூசி முந்நூல் சார்த்தித் தொழ வேண்டும். நல்ல மலரை அவன் திருவடிகளில் சார்த்தவேண்டும். வில்வமில்லாத சிவ பூஜை பயனற்றது.

சில தனிப்பாடல்கள்

காப்புச் செய்ய்ல்ௐஅளெனக் கருதத்தக்க சில இறைவணக்கப் பாடல்களும், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், அகத்தியர் ஆகியோரை வாழ்த்தும் பாடல்கள் உள்ளன. மநுநிகர் சகசி, தொண்டை நாட்டு அரசூர் சொக்கப்பப் புலவர் இவர்கள் வாழ்ந்ததும் , சகசி அரசவையில் சொக்கப்பப் புலவர் அரங்கேற்றியதைப் பற்றிய குறிப்பும் காணப்படுகிறது. மறையவர், மன்னர் முதலானவர்களும் குடந்தையும் வாழ்கவே என முடிகின்றது.

நூலின் மூலம் அறிய வரும் செய்திகள்

இந்நூலில் நகரச் சிறப்பை அடுத்து விரிவாகக் கூறப்படும் இந்நகரின் சிறப்பியல்பாக அமைந்தவை கும்பேசர்கோயில், நாகேசர்கோயில், மகாமகக்குளம். குடமூக்கென்பது திரிந்து கும்பகோணன் என ஆனதாகக் கூறுகிறது. யாகம் செய்தபோது , யாகத்தில் வைத்திருந்த கும்பம் சாய்ந்ததால் கும்பகோணம் என்றபெயர் வந்ததாகத் தெரியவருகிறத . இவ்வாறே ஒவ்வொரு பொருளுக்கும் உள்ள பெயர்க்காரணத்தை இந்நூலில் காணலாம். சங்கரன் என்ற சொல் மங்களத்தைச் செய்பவன் - என்ற பொருளில் வழங்குகிறது.

இந்நூலுள், ஆசிரியரால் வற்புறுத்திப் பேசப்படுவன: திருநீறு, உருத்திராக்கம், வில்வம், லிங்க வழிபாடு. கும்பகோணச் சிறப்புரைத்த அத்தியாயம் வாணலிங்கமகிமை கூறிய அத்தியாயம் என்னும் இரு அத்தியாயங்களின் தலைப்புக்கள் இருமுறை வந்துள்ளன. ஆனால் அவற்றுள் சொல்லப்பட்ட செய்திகள் வெவ்வேறாக உள்ளன.

இந்நூலில் சோமசூத்திர வழிபாட்டு முறையென்ற கடுமையான வழிபாட்டு முறை ஒன்றும் குறிப்பிடப்படுகிறது. இச்சோமசூத்திர முறையை பிரதக்கண விதி கூறிய அத்தியாயத்தில் கூறுகின்றார்.

தென்னக மராத்திய மன்னர்களுக்கு தஞ்சை தான் தலை நகரம் என்றாலும் திருவிடைமருதூர், திருவாரூர் , கும்பகோணம் முதலிய ஊர்களிலும் அரண்மனைகள் இருந்தன. சகசி என்ற அரசர் கும்பகோணத்திலேயே தன் வாழ்நாளில் பெரும்பகுதியைக் கழித்திருக்கின்றாரென்று இந்நூல் மூலம்தெரிகின்றது . சகசி மன்னர் தமிழ் தெலுங்கு மராத்தி மொழிகளில் நூல்கள் இயற்றியதும் அறிய வருகிறது.

பாடல் நடை

சிவபூசை உபகரணம்

கானிடை நட்ட மாடுங் கண்ணுதல்
கமலத் தாளின்
மானிடர் மாட ராசி வழங்குமர்ச்
சனையிற் கோடி
தானுவந் தளிக்கும் வில்வம் தறுகிளை
யொன்று சாத்தில்
ஏனையர்ச் சனைக டானும் வில்வத்துக்
கிணையொப் பாகும்

வாணலிங்கச் சிறப்பு

பரசிவ முருவதுவே வாணலிங்க
வுருவமெனப் பகர நாளும்
திரமுறவே தொட்டாலு மதிபாவ
கோடிகளுஞ் சிந்தையுமம் மயமாக்கும்
வரமுறுமச் சிவலிங்கந் தொடவருதல்
கிட்டாது மருவுமார்பிற் காதல்
வரமல கமெனக் கற்றவர்க்குங்
கிடையாத கதியைக் காட்டும்

வேடன் கதிபெற்றது

பாற்றினஞ் சுழலும் வெற்றிப் பரசுபா
ணியனே போற்றி ! நீற்றொளி பழுத்த மேனி நின்மலா
போற்றி ! திங்கள் கீற்றொளிர் பவள வேணிக் கேடிலாப்
பொருளே ! போற்றி ! தோற்றமு மீறு மில்லாச் சூழ்சுடர்
மூர்த்தி ! போற்றி

உசாத்துணை


✅Finalised Page