under review

கலாப்ரியா: Difference between revisions

From Tamil Wiki
(Inserted READ ENGLISH template link to English page)
 
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Kalapriya|Title of target article=Kalapriya}}
[[File:kalapiriya.jpg|thumb|கலாப்ரியா]]
[[File:kalapiriya.jpg|thumb|கலாப்ரியா]]
[[File:Kal1.jpg|thumb|கலாப்ரியா குழந்தையாக]]
[[File:Kal1.jpg|thumb|கலாப்ரியா குழந்தையாக]]

Latest revision as of 11:11, 15 August 2023

To read the article in English: Kalapriya. ‎

கலாப்ரியா
கலாப்ரியா குழந்தையாக
கலாப்ரியா சிறுவனாக
கலாப்ரியா இளைஞராக
கலாப்ரியா வண்ணதாசன் இளைஞர்களாக ( போஸ்டர் ஒட்டியபின்)
கலாபிப்ரியா கி.ராஜநாராயணனுடன்
கலாப்ரியா, விக்ரமாதித்யன், வண்ணதாசன், வண்ணநிலவன்
கலாப்ரியா குடும்பத்துடன்
கலாப்ரியா மனைவியுடன்
முதல் கவிதைத்தொகுப்பு ’வெள்ளம்’ கைப்பிரதி

கலாப்ரியா (பிறப்பு: ஜுலை 30, 1950). இயற்பெயர் டி.கே சோமசுந்தரம். எழுபதுகளி்ல் எழுதத்துவங்கிய நவீன தமிழ் கவிஞர். நேரடியாகச் சித்திரங்களை அடுக்கியபடியே போகும் பாணியை கொண்டது இவருடைய கவிதைகள். கவிதை, கட்டுரை, தன்வரலாறு, சிறுகதை, நாவல் என நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

பிறப்பு, கல்வி

கலாப்ரியா தாமிரவருணி கரையில்

தி.க. சோமசுந்தரம் என்ற இயற்பெயர் கொண்ட கலாப்ரியா ஜூலை 30, 1950 அன்று திருநெல்வேலி சுடலைமாடன் தெருவில் (கடையநல்லூரில்) பிறந்தார். தந்தை கந்தசாமி. தாய் சண்முகவடிவு.பள்ளி படிப்பை திருநெல்வேலி ஷாஃப்டர் உயர்நிலைப்பள்ளியில் முடித்தார். இளங்கலை கணிதவியலை நெல்லை ம. தி. தா இந்துக் கல்லூரியிலும், முதுகலை கணிதவியலை நெல்லை யோவான் கல்லூரியிலும் (1971 முதல் 1973)படித்து முடித்தார்.

தனி வாழ்க்கை

2009 -ல் இந்தியன் ஓவர் சீஸ் வங்கிப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற இவர் தற்பொழுது தென்காசி அருகே உள்ள இடைக்கால் என்ற கிராமத்தில் தன் குடும்பத்துடன் வசிக்கிறார்.

கலாப்ரியா 1978ல் சரஸ்வதியை மணந்தார். இவர் பள்ளியில் கணித ஆசிரியையாகவும், தலைமை ஆசிரியையாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் அகிலாண்ட பாரதி, மருத்துவர். இளைய மகள் தரணி, பொறியாளர். கலாப்ரியாவின் இரு மகள்களும் நூல்களை எழுதியுள்ளனர். அகிலாண்டபாரதி மருத்துவநூல்களை எழுதுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

கலாப்ரியா திருமணம்

கலாப்ரியாவின் குடும்பச்சூழலும், பள்ளிப்பருவத்தில் ஒரே தெருவில் வசித்த வண்ணதாசன் உடனான நட்பும் எழுதுவதற்கான ஆர்வத்தை உருவாக்கியது. கலாப்ரியா, வண்ணதாசன், வண்ணநிலவன், விக்ரமாதித்யன் ஆகியோர் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் நெல்லைப்பகுதியில் இருந்து எழுதவந்தவர்கள். நெல்லை எழுத்தாளர்கள் என அடையாளப்படுத்தப்படுகிறார்கள். சி.என். அண்ணாதுரையின் மறைவை ஒட்டி இவர் எழுதிய இரங்கற்பா இவருடைய முதல் கவிதையாக கருதப்படுகிறது. ’கசடதபற’ இதழில் 'என்னுடைய மேட்டுநிலம்’ என்னும் கவிதை பிரசுரமாகியது. இது கலாப்ரியாவின் பிரசுரமான முதல் கவிதை. தாகூரின் கவிதையை தழுவி எழுதப்பட்டது.

கவிதைகள்

'கும்பம்' என்ற புனைபெயரில் முதலில் எழுதிய கலாப்ரியா, வண்ணநிலவனின் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த கையெழுத்து பத்திரிக்கையான பெருநை-யில் "கலாப்ரியா" என்ற பெயரில் எழுதத்துவங்கினார். சசிகலா என்னும் புனைவுக்கதாபாத்திரம் கலாப்ரியாவின் கவிதைகளில் கவிஞனின் இழந்த காதலியாக சித்தரிக்கப்படுகிறது. அப்பெயரை ஒட்டியே கலாப்ரியா என்னும் பெயரைச் சூட்டிக்கொண்டார். கசடதபற(1968), வானம்பாடி, கணையாழி, தீபம் ஆகிய இதழ்களில் அவருடைய ஆரம்பக்கால கவிதைகள் வெளிவந்தன. நவீன கவிஞராக தன்னை ஆரம்பகாலங்களில் பாதித்த கவிஞர்கள் என வைதீஸ்வரன், ஞானக்கூத்தன் இருவரையும் குறிப்பிடுகிறார். கலாப்ரியாவின் கவிதைகள் பிரம்மராஜன், தமிழவன் ஆகியோரால் தமிழில் கவனிக்கச்செய்யப்பட்டன. கலாப்ரியா நவீனத்தமிழில் புனைவுத்தன்மையும் கொண்ட நீண்ட கவிதைகளை எழுதி ஒரு திசைமாற்றத்தை உருவாக்கினார். நீள்கவிதையான எட்டையபுரம் 1982ல் பாரதி நூற்றாண்டை ஒட்டி வெளிவந்தது. பகடியும் விமர்சனமும் கொண்ட படைப்பு அது. பின்னர் மற்றாங்கே முதலிய நீள்கவிதைகளையும் எழுதினார்.

கட்டுரைகள்

கலாப்ரியா பிற்காலத்தில் தன் தனிவாழ்க்கையை ஒட்டிய நினைவுகளை கட்டுரைகளாக எழுதினார். இளமையில் திரைப்படங்கள் சார்ந்து அமைந்த அனுபவங்கள் பற்றியும் இலக்கியப்படைப்புகள் பற்றியும் எழுதியிருக்கிறார். அவை நூல்களாயின.

புனைவுகள்

கலாப்ரியா தன் நினைவுகளை புனைவின் சாயலுடன் எழுதிய ’நினைவின் தாழ்வாரங்கள்’ (2009) ஒரு தொடக்கம். அவருடைய புனைவுகளில் உருள்பெருந்தேர் குறிப்பிடத்தக்கது. கலாப்ரியாவின் முதல் நாவல் வேனல் 2017.

அமைப்புப்பணிகள்

1998, 2000, 2001 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை குற்றாலத்தில் "பதிவுகள்" என்ற கவிதை பட்டறையை ஒருங்கிணைத்தார். மூன்று நாட்கள் நடக்கும் இந்த நிகழ்வில் தமிழ், மலையாள, கன்னட கவிஞர்கள் பங்குபெற்று உரையாடல்களும் விவாதங்களும் நிகழ்ந்தன. இந்த சந்திப்பின் வழியாக கவிதைகளில் நிகழ்ந்த பாதிப்பு 'குற்றாலம் எஃபெக்ட்' என்று இலக்கிய சூழலில் குறிப்பிடப்படுகிறது. இந்த சந்திப்பின் தாக்கம் பல எழுத்தாளர்களால் குறிப்பிடப்படுள்ளது.

இலக்கிய இடம்

தமிழ் நவீனக் கவிதை க.நா.சுப்ரமணியம் மொழியாக்கம் செய்த எஸ்ரா பவுண்ட் எழுதிய A Retrospect” and “A Few Don’ts” என்னும் படிமவியல் சார்ந்த கட்டுரையில் இருந்தே உருவாகிவந்தது. ஆகவே படிமங்களே அதன் அடிப்படையாக அமைந்தன. படிமங்களில்லாமல், நேரடியான சித்தரிப்புகளாகவும் வெறும் காட்சிகளாகவும் விரியும் புதிய கவிதைப்பாணியை கலாப்ரியா தமிழுக்கு அறிமுகம் செய்தார். அது காட்சித்தன்மை கொண்ட சங்ககாலக் கவிதைகளின் அழகியலுக்கு மிக அணுக்கமானதாகவும் அமைந்தது.

"வாழ்வின் ஒரு தருணம். ஒரு கதைத்துளி, இவ்விரண்டும் அல்லாத காட்சிகள் என தமிழில் கலாப்ரியாவின் கவிதைகளிலேயே காணக்கிடைக்கிறது. அவருடைய தனி இயல்பு, தமிழ்க்கவிதைக்கு அவருடைய கொடை அது. அவருடைய தொடக்ககாலக் கவிதைகள் முதலே இந்த இயல்பு தொடர்ச்சியாக இருந்துவருகிறது. இவை அளிக்கும் அகத்தூண்டல் [Evocation] மட்டுமே இவற்றை கவிதைகளாக்குகின்றன. மேலதிகமான அர்த்தமோ வாழ்க்கைக்குறிப்போ இவற்றுக்குத் தேவையில்லை என எதையும் கரந்து வைத்துக்கொள்ளாத காட்சிகள். குழந்தைகள் அல்லது மலர்கள் போல. அவ்வண்ணம் அவை இருப்பதனாலேயே கவிதையாக ஆகின்றவை." என்று எழுத்தாளர் ஜெயமோகன் 'வெறுமே மலர்பவை' என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார்.[1]

"நமக்குக் கற்பிக்கப்பட்டிருக்கும் நாகரீகத்தை முன்னிட்டு நாம் வெளிக்காட்டாது ஒளித்துக்கொள்ள விரும்புகிற இச்சை உணர்வுகளை, அவை வெறும் உடல் சார்ந்த காமம் மாத்திரமல்ல குற்றம், மரணம், பசி, அழுக்கு, அசிங்கம் என நாம் நேர்கொண்டும் பாராமல் ஒதுக்கி வைக்கும் நிழலான விஷயங்கள் எல்லாவற்றையும் பட்டவர்த்தனமாக எழுதுவது என்பது கலாப்ரியாவிடம் இயல்பானதாக உள்ளது ..” என்று எழுத்தாளர் க. மோகனரங்கன் 'புனல் பொய்யாப் பொருநை' என்ற கலாப்ரியா கவிதைகள் குறித்த கட்டுரையில் குறிப்பிடுகிறார். [2]

விருதுகள்

  • தமிழக அரசின் கலைமாமணி விருது
  • கவிஞர் சிற்பி இலக்கியவிருது
  • ஜஸ்டிஸ் வி. ஆர். கிருஷ்ணய்யர் விருது, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், நெல்லை
  • 2010, சிறந்த கட்டுரைத் தொகுப்பு - நினைவின் தாழ்வாரங்கள் - விகடன் விருது, மற்றும் சுஜாதா விருது
  • 2012, கண்ணதாசன் இலக்கிய விருது - கோவை
  • 2012, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
  • கவிஞர் தேவமகள் இலக்கிய விருது
  • கவிதைக்கணம் வாழ்நாள் சாதனையாளர் விருது
  • 2017, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் கலைஞர் மு.கருணாநி பொற்கிழி விருது.
  • 2017, திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளியின் "அறிஞர் போற்றுதும்" விருது
  • 2017, மனோன்மணியம் சுந்தரனார் விருது
  • 2018, கோவை விஜயா பதிப்பக வாசகர் வட்டத்தின் "ஜெயகாந்தன் விருது"
  • 2019, அமெரிக்கவாழ் தமிழர்களின் "விளக்கு" அமைப்பின் "புதுமைப்பித்தன் நினைவு விருது".

படைப்புகள்

கவிதைத் தொகுப்புகள்
  • வெள்ளம், 1973
  • தீர்த்த யாத்திரை, 1974
  • மற்றாங்கே, 1979
  • எட்டயபுரம், 1983
  • சுயம்வரம், 1985
  • உலகெல்லாம் சூரியன், 1993
  • அனிச்சம், 2000
  • வனம் புகுதல், 2003
  • எல்லாம் கலந்த காற்று, 2007
  • நான் நீ மீன், 2011
  • உளமுற்ற தீ, 2013
  • தண்ணீர்ச் சிறகுகள், 2014
  • சொந்த ஊர் மழை, 2015- நற்றினை பதிப்பகம்
  • தூண்டில்மிதவையின் குற்ற உணர்ச்சி, 2016- டிஸ்கவரி புக் பேலஸ்
  • பனிக்கால ஊஞ்சல், 2016- உயிர்மை பதிப்பகம்
  • பேனாவுக்குள் அலையாடும் கடல், 2017- டிஸ்கவரி புக் பேலஸ்
  • சொல் உளி, 2018 - சந்தியா பதிப்பகம்
  • மௌனத்தின் வயது, 2019 - சந்தியா பதிப்பகம்
  • சங்க காலத்து வெயில், 2021 - சந்தியா பதிப்பகம்
  • கலாப்ரியா கவிதைகள், (தொகை நூல்), 1994-காவ்யா
  • கலாப்ரியா கவிதைகள், (தொகை நூல்), 2000-தமிழினி
  • கலாப்ரியா கவிதைகள், (தொகை நூல்), 2010-சந்தியா
  • கலாப்ரியா கவிதைகள் (இரண்டாம் தொகுதி), 2020
கட்டுரை தொகுப்பு
  • சுவரொட்டி, (தமிழ் திரைப்படக் கட்டுரைகள்), 2013.
  • மறைந்து திரியும் நீரோடை (இலக்கியக் கட்டுரைகள்), 2014
  • மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள் (இலக்கியக் கட்டுரைகள்), 2015- சந்தியா பதிப்பகம்
  • என் உள்ளம் அழகான வெள்ளித்திரை (தமிழ் திரைப்படக் கட்டுரைகள்), 2015- சந்தியா பதிப்பகம்
  • சில செய்திகள் சில படிமங்கள் (இலக்கியக் கட்டுரைகள் ), 2016- சந்தியா பதிப்பகம்
  • அன்பெனும் தனி ஊசல் (இலக்கியக் கட்டுரைகள் ), 2018
  • பாடலென்றும் புதியது (திரைப்படக் கட்டுரைகள்), 2018- சந்தியா பதிப்பகம்
  • கல்லில் வடித்த சொல் போலே (கட்டுரைகள், நேர்காணல்கள்), 2021- சந்தியா பதிப்பகம்
தன்வரலாற்று நூல்கள்
  • நினைவின் தாழ்வாரங்கள், 2009
  • ஓடும் நதி, 2010
  • உருள் பெருந்தேர், 2011
  • காற்றின் பாடல், 2013
  • போகின்ற பாதையெல்லாம், 2016-
சிறுகதை தொகுப்பு
  • வானில் விழுந்த கோடுகள், 2018
நாவல்
  • வேனல், 2017
  • பெயரிடப்படாத படம், 2019
  • பேரருவி, 2020
  • மாக்காளை, 2021

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

இணைப்புகள்


✅Finalised Page