கர்மயோகி (இதழ்)
கர்மயோகி (1910) பாண்டிச்சேரியிலிருந்து வெளிவந்த தமிழ் மாத இதழ். பாரதியார் இதன் ஆசிரியராகப் பணியாற்றினார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் பல கட்டுரைகள் கர்மயோகி இதழில் வெளியாகின.
பிரசுரம், வெளியீடு
கல்கத்தாவில் அரவிந்தரால் 'கர்மயோகின்' என்ற இதழ் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து தமிழில் பாரதியாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த இதழ் ‘கர்மயோகி'. ஜனவரி 1910 முதல் இவ்விதழ் வெளிவந்தது. கர்மயோகி முதலில் மாத இதழாகவும் பிறகு மார்ச் 1910 முதல் மாதம் இருமுறையாகவும் வெளிவந்தது. மாதமிருமுறை இதழை வி. கோவிந்த ராஜுலு நாயுடு வெளியிட்டார். சைகோன் சின்னையா அச்சகத்தில் இவ்விதழ் அச்சிடப்பட்டு வெளியானது.
உள்ளடக்கம்
கர்மயோகியின் இதழியல் நோக்கு அதன் பெயருக்கேற்ப ஆன்மிகத்தை மையமாகக் கொண்டிருந்தது. என்றாலும் அரசியல் கருத்துக்களுக்கும் அவ்விதழ் இடமளித்தது. இதழின் முகப்பு அட்டையில், குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு கிருஷ்ண பரமாத்மா கீதா உபதேசம் செய்த காட்சிப்படம் இடம் பெற்றது. கீதையின் தத்துவ வாசகங்கள் இடம் பெற்றன. ‘ஆரிய தர்மம், பாரத நாட்டுக் கலைகள், தொழில்கள், காவியங்கள் முதலானவற்றையெல்லாம் பற்றி விவகரிக்கும் ஓர் மாதந்தத் தமிழ்ப்பத்திரிகை’ எனும் அறிவிப்பு இதழின் உள்பக்கம் இடம் பெற்றிருந்தது "ஸ்ரீமான் ஸி . சுப்பிரமணியபாரதி, பத்திராதிபர் ” என்ற குறிப்பும் இடம் பெற்றிருந்தது. 32 பக்கங்களில் கர்மயோகி இதழ் வெளியானது. தனிப்பிரதி ஒன்றின் விலை: 4 அணா. ஆண்டுச்சந்தா: இரண்டு ரூபாய். அரை ஆண்டுச் சந்தா: ஒரு ரூபாய், நான்கணா. வெளிநாடுகளுக்கு ஆண்டுச் சந்தா: மூன்று ரூபாய்.
அரவிந்தரின் அரசியல், தத்துவ சிந்தனைக் கருத்துக்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு கர்மயோகி இதழில் வெளியாகின, பாரதியார், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை விமர்சித்து எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றன. கர்மயோகி இதழ் குறித்து இந்தியா இதழில் பின்வரும் விளம்பரக் குறிப்பு இடம்பெற்றது. ”கர்மயோகி - மாதந்தோறும் வெளியாகும் தமிழ்ப் பத்திரிகை. ஸ்ரீமான் அரவிந்தகோஷ் எழுதும் விஷயங்களடங்கிய ’கர்மயோகின்’ என்ற ஆங்கிலப் பத்திரிகையின் அற்புதமான வியாஸங்கள், வியாக்கியானங்கள், உபதேசங்கள் முதலியவற்றை மொழிபெயர்த்து இப்பத்திரிகை தமிழர்களுக்குதவும். பாரதநாட்டின் தத்துவ சாஸ்திரம், தர்மம், சுதேச பரிபாலனம் முதலியவற்றை உத்தாரணஞ் செய்யும் நோக்கமுடையது. மொழிபெயர்ப்போர் ஸ்ரீயுத ஸி. சுப்பிரமணிய பாரதி முதலியவர்கள். நமது ஜாதீய ஸம்ரக்ஷகனாகிய ஸ்ரீகிருஷ்ணன் பிறந்ததினமான அடுத்த ‘ஸ்ரீ ஜயந்தி'யன்று இப்பத்திரிகையின் முதல் சஞ்சிகை வெளியாகும்.” ஆனால், இந்த விளம்பரத்தின்படி கிருஷ்ண ஜெயந்தி அன்று கர்மயோகி இதழ் வெளிவரவில்லை. ஜனவரி 1910 முதலே வெளிவந்தது.
கர்மயோகியில் பாரதி, ’ஆரிய நாகரிகம்’, ’நமது சொந்த நாடு’, ’ஒற்றுமையே வலிமை’ போன்ற தலைப்புகளில் பல கட்டுரைகளை எழுதினார். பல கட்டுரைகளை மொழிபெயர்த்தார். பதஞ்சலி யோக சூத்திரம் அவற்றுள் குறிப்பிடத்தகுந்த ஒன்று. பகவத் கீதையின் சுலோகங்கள் பலவற்றை உரைநடையிலும் சிலவற்றைக் கவிதை வடிவத்திலும் பாரதியார் தமிழாக்கம் செய்து வெளியிட்டார். பாரதி எழுதிய ‘ஹிந்து தர்மத்தின் ஜீவதத்துவங்கள்’ எனும் கட்டுரையும் இடம் பெற்றிருந்தது. ஆத்ம ஞானம், நான்கு வர்ணங்கள், நவமார்க்கம், சூரிய ஸம்பந்தி, போன்ற தலைப்புகளில் கட்டுரைகள் பல வெளிவந்தன. சிறையில் அடைக்கப்பட்டிருந்த வ.உ. சிதம்பரம் பிள்ளையுடனான சந்திப்பு பற்றிய கட்டுரை ஒன்று மர்மயோகி இதழ் ஒன்றில் இடம் பெற்றிருந்தது. ’மஹாசக்திக்கு விண்ணப்பம்’ போன்ற பாரதியின் கவிதைகள் கர்மயோகி இதழில் வெளியாகின. தூத்துக்குடி சுதேச ஸ்டீமர் பற்றிய விளம்பரம், சிறையில் இருந்த வ.உ.சி.க்கு நிதி உதவி செய்த அயலகத் தமிழர்களின் பெயர்கள், அவர்கள் அளித்த நிதி விவரங்கள் கர்மயோகி இதழில் இடம் பெற்றன. விளம்பரங்களுக்கும் இவ்விதழ் இடமளித்தது. சித்திரப் படங்களும் இவ்விதழில் இடம்பெற்றன.
பங்களிப்பாளர்கள்
- பாரதியார்
- அரவிந்தர்
- வ.வே.சு. ஐயர்
- நீலகண்ட பிரம்மச்சாரி
- பரலி சு. நெல்லையப்பர்
- எஸ்.ஹெச்.டி. மனோரஞ்சிதம்
- பி.பி. சுப்பிரமணியம்
- லக்ஷ்மண சங்கரன்
- அப்பன்
- MIDI COLONIAL
- ஒற்றன்
இதழ் நிறுத்தம்
ஓராண்டுக்கு மேல் வெளிவந்த கர்மயோகி இதழ், பிரிட்டிஷாரின் பறிமுதல்கள் மற்றும் சந்தாதாரர்களின் ஆதரவின்மையால் நின்று போனது.
மதிப்பீடு
இலக்கியம், தத்துவம், அரசியல், மொழிபெயர்ப்பு என பாரதியாரின் பன்முக ஆளுமைத் திறன்கள் வெளிப்பட்ட இதழ்களுள் கர்மயோகியும் ஒன்று. பாரதியாரின் ஆசிரியத்துவத்தில் புதுச்சேரியில் இருந்து வெளிவந்த இந்தியா, விஜயா போன்ற இதழ்களின் வரிசயில் குறிப்பிடத்தகுந்த ஓர் இதழாக கர்மயோகி இதழ் மதிப்பிடப்படுகிறது.
உசாத்துணை
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.