under review

இளம்புல்லூர்க் காவிதி

From Tamil Wiki
Revision as of 20:09, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

இளம்புல்லூர்க் காவிதி, சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல் சங்கத் தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் இடம் பெற்றுள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

இளம்புல்லூர்க் காவிதி என்னும் பெயரிலுள்ள காவிதி பாண்டிய நாட்டின் சிறந்த உழவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டம். எனவே இவர் பாண்டிய நாட்டுப் புலவர் என்பது அறியப்படுகிறது. புல்லூர் என்பது ஊர் பெயரென்றும் இளம் என்பது இப்புலவரின் இளமையைக் குறிப்பதாகவும் கருதப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

இளம்புல்லூர்க் காவிதி இயற்றிய பாடல் சங்கத் தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் 89- வது பாடலாக இடம் பெற்றுள்ளது.

பாடல்களால் அறியவரும் செய்திகள்

  • வாடைக் காற்றும் மழையும் தலைவியின் பிரிவாற்றாமையை மேலும் அதிகரிக்கின்றன.
  • இளம்புல்லூர்க் காவிதி, உழவராக இருப்பதால் முன்பனி காலத்து உழுந்து பயிரின் இயல்பினை நுட்பமாக விவரித்துள்ளார்.

பாடல் நடை

நற்றிணை 87

முல்லைத் திணை பொருள் முற்றி மறுத்தந்தான்' எனக் கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது

கொண்டல் ஆற்றி விண்தலைச்செறீஇயர்,
திரைப் பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி,
நிரைத்து நிறை கொண்ட கமஞ் சூல் மா மழை
அழி துளி கழிப்பிய வழி பெயற் கடை நாள்,
இரும் பனிப் பருவத்த மயிர்க் காய் உழுந்தின்
அகல் இலை அகல வீசி, அகலாது
அல்கலும் அலைக்கும் நல்கா வாடை,
பரும யானை அயா உயிர்த்தாஅங்கு,
இன்னும் வருமே- தோழி!- வாரா
வன்கணாளரோடு இயைந்த
புன்கண் மாலையும் புலம்பும் முந்துறுத்தே!

(கீழைக் காற்று வீசி வானத்தில் செறிந்துகொண்டது. திரை பிதிர்ந்து பொங்கும் நுரை போல, வானத்து முகடுகளில் விருப்பத்துடன் ஏறி, சூலுற்ற மழைமேகம் பெருமழை பொழிந்த கடைசி நாளைத் தாண்டிவிட்டது.

பனிப் பருவம் தொடங்கியது. அவர் காதலின்பம் நல்காத காலத்தில், உடலில் மயிர் கொண்டுள்ள காய்த்த உழுந்து. செடியின் இலை உதிரும்படி, மிகப் பெரிய யானை கொட்டாவி விடுவது போன்று வாடைக்காற்று வீசுகிறது. அத்துடன் மாலையும் வந்துவிட்டது. இந்த நிலையில் அவர் இல்லாமல் தனிமையில் இருக்கிறோம்.)

உசாத்துணை


✅Finalised Page