under review

இரண்டாம் திருவந்தாதி

From Tamil Wiki
Revision as of 16:04, 22 June 2023 by Meenambigai (talk | contribs) (Spell Check done)

இரண்டாம் திருவந்தாதி திருமாலைப் போற்றி பூதத்தாழ்வாரால் இயற்றப்பட்ட நூல். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் காலவரிசையில் இரண்டாவதாக இயற்றப்பட்டது. மூன்றாம் ஆயிரத்தின் இயற்பா தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அந்தாதி அமைப்பில் 100 பாடல்களைக் கொண்டது. பூதத்தாழ்வாரால் திருக்கோயிலூரில் திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்து பாடப்பட்ட இவ்வந்தாதி "அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக" என்னும் வரியை முதலடியாகக் கொண்டு துவங்குகிறது.

தோற்றம்

முதலாழ்வார்கள் (பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்) மூவரும் திருக்கோயிலூரில் உலகளந்த பெருமாளின் ஆலயத்திற்கருகில் ஓர் இடைகழியில் மழைக்கு ஒதுங்கியபோது நான்காவது நபர் ஒருவர் தம்மை நெருக்குவதாக உணர்ந்தனர். இருட்டில் விளக்கு இல்லாமையால் பாசுரங்களால் விளக்கேற்ற எண்ணி பொய்கையாழ்வார் 'வையம் தகளியா வார்கடலே நெய்யாக' என்று தொடங்கி 100 பாசுரங்களை அந்தாதியாகப் பாடினார். இந்த நூறு பாசுரங்களும் 'முதலாம் திருவந்தாதி' எனப் பெயர் பெற்றன. தொடர்ந்து பூதத்தாழ்வார் 'அன்பே தகளியா' எனத் தொடங்கி 100 பாசுரங்களைப் பாடினார்.இவை இரண்டாம் திருவந்தாதி எனப் பெயர் பெற்றன.

பார்க்க: முதலாழ்வார்கள்-திருக்கோயிலூரில் சந்திப்பு.

நூல் அமைப்பு

திருக்குருகைப்பிரான் பிள்ளான் இரண்டாம் திருவந்தாதிக்கு இயற்றிய பாயிரம் (தனியன்).

என்பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா
அன்பே தகளி யளித்தானை, - நன்புகழ்சேர்
சீதத்தார் முத்துகள் சேரும் கடல்மல்லைப்
பூதத்தார் பொன்னங்கழல்.

முதல் பாடல்:

அன்பே தளியா ஆர்வமே நெய்யாக,
இன்புருகு சிந்தை யிடுதிரியா, - நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்.

என்று தொடங்கி அந்தாதியாக 100 பாடல்களைக் கொண்ட இரண்டாம் திருவந்தாதி

மாலே. நெடியானே.கண்ணனே, விண்ணவர்க்கு
மேலா வியந்துழாய்க் கண்ணியனே, - மேலால்
விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே, என்றன்
அளவன்றால் யானுடைய அன்பு.

என்ற பாடலோடு முடிவு பெறுகிறது.

முக்கியமான பாடல்கள் : பார்க்க பூதத்தாழ்வார்.

உசாத்துணை



✅Finalised Page