இந்து மதாபிமான சங்கம்
இதழாளர், சமூக சீர்த்திருத்தவாதி சொ. முருகப்பா, எழுத்தாளர், சொற்பொழிவாளர் ராய.சொக்கலிங்கன், வை.சு.சண்முகம் செட்டியார் மற்றும் பல நண்பர்கள் இணைந்து, செப்டம்பர் 10, 1917-ல், காரைக்குடி திருவாசக மடத்தில் தோற்றுவித்த சங்கம், இந்து மதாபிமான சங்கம். ராய.சொக்கலிங்கன் இதன் தலைவராக இருந்தார்
சங்கத்தின் நோக்கம்
ஹிந்து மதத்தையும், தமிழையும் வளர்ப்பதுடன் நாட்டு விடுதலையையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு இச்சங்கம் செயல்பட்டது. இந்து மதாபிமான சங்கம் 1952 முதல் காரைக்குடி சிவன் கோவில் அருகில் சொந்தக் கட்டிடத்தில் செயல்படத் தொடங்கியது.
செயல்பாடுகள்
தமிழ்ப்பெரும்புலவர் மு.ரா.கந்தசாமிக் கவிராயர் மறைந்தபோது அவர் திரட்டி வைத்திருந்த நூல்களை இச்சங்கம் அப்படியே விலை கொடுத்து வாங்கி 1918-ம் ஆண்டு அக்டோபர் 27-ம் நாள் 'விவேகானந்தா நூல் நிலையம்' என்ற பெயரில் ஒரு நூல் நிலையத்தை அமைத்தது. அந்நூலகம் இன்றுவரை செயல்பட்டு வருகிறது. உ.வே.சா., வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, வ.வே.சு.ஐயர், ராஜாஜி, திரு.வி.க., ஞானியார் சுவாமிகள், விபுலானந்தர், டி.கே.சி., ந.மு.வேங்கடசாமி நாட்டார், பண்டிதமணி, ரா.பி.சேதுப்பிள்ளை, உமாமகேசுவரம் பிள்ளை, என பல தமிழறிஞர்கள், சான்றோர்கள் இந்துமதாபிமான சங்கத்துக்கு வருகை தந்து சிறப்புரையாற்றி அதற்குப் பெருமை சேர்த்தனர்.
கானாடுகாத்தான் வை.சு.சண்முகம் செட்டியார், கடையத்திலுள்ள பாரதியாருடன் கடித தொடர்பு கொண்டு கானாடுகாத்தானுக்கு அழைக்க, பாரதியும் அதனை ஏற்றுக் கொண்டார். வரும் வழியில், 1919-ம் ஆண்டு நவம்பர் 9-ம் நாள், மகாகவி பாரதியார் இந்து மதாபிமான சங்கத்துக்கு வருகை தந்ததுடன் ஏழு கவிதைகளையும் இயற்றி அச்சங்கத்தின் பணிகளைப் போற்றினார்.
பாரதி தன் வாழ்நாளில் எடுத்துக்கொண்டதாக, நமக்குக் கிடைத்துள்ள படங்களுள் இரண்டு படங்கள், இங்கு எடுக்கப்ப்பட்டவை.
முதல்வராக இருந்த சி.என். அண்ணாதுரை இந்து மதாபிமான சங்கத்தின் பொன்விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி உள்ளார்.
பாரதி, இந்து மதாபிமான சங்கத்தை வாழ்த்திப் பாடிய கவிதை:
மண்ணுலகின் மீதினிலே எக்காலும்
அமரரைப் போல் மடிவில் லாமல்
திண்ணமுற வாழ்ந்திடலாம்,அதற்குரிய
உபாயமிங்கு செப்பக் கேளீர்!
நண்ணியெலாப் பொருளினிலும் உட்பொருளாய்ச்
செய்கையெலாம் நடத்தும் வீறாய்த்
திண்ணியநல் லறிவொளியாய்த் திகழுமொரு
பரம்பொருளை அகத்தில் சேர்த்து,
செய்கையெலாம் அதன்செய்கை,நினைவெல்லாம்
அதன்நினைவு,தெய்வ மேநாம்
உய்கையுற நாமாகி நமக்குள்ளே
யொளிர்வ தென உறுதி கொண்டு,
யொய்,கயமை,சினம்,சோம்பர்,கவலை,மயல்,
வீண் விருப்பம்,புழுக்கம்,அச்சம்,
ஐயமெனும் பேயையெலாம் ஞானமெனும்
வாளாலே அறுத்தத் தள்ளி.
எப்போதும் ஆனந்தச் சுடர் நிலையில்
வாழ்ந்துயிர்கட் கினிது செய்வோர்,
தப்பாதே இவ்வுலகில் அமரநிலை
பெற்றிடுவார்;சதுர்வே தங்கள்
மெய்ப்பான சாத்திரங்கள் எனுமிவற்றால்
இவ்வுண்மை விளங்கக் கூறும்
துப்பான மதத்தினையே ஹிந்துமத
மெனப்புவியோர் சொல்லு வாரே.
அருமையுறு பொருளிலெலாம் மிக அரிதாய்த்
தனைச்சாரும் அன்பர்க் கிங்கு
பெருமையுறு வாழ்வளிக்கும் நற்றுணையாம்
ஹிந்துமதப் பெற்றி தன்னைக்
கருதியதன் சொற்படி யிங் கொழுகாத
மக்களெலாம் கவலை யென்னும்
ஒருநரகக் குழியதனில் வீழ்ந்துதவித்
தழிகின்றார் ஓய்வி லாமே.
இத்தகைய துயர்நீக்கிக் கிருதயுகந்
தனையுலகில் இசைக்க வல்ல,
புத்தமுதாம் ஹிந்துமதப் பெருமைதனைப்
பாரறியப் புகட்டும் வண்ணம்;
தத்துபுகழ் வளப்பாண்டி நாட்டினிற்
காரைக்குடியூர் தனிலே சால
உத்தமராந் தனவணிகர் குலத்துதித்த
இளைஞர்பலர்,ஊக்கம் மிக்கார்.
உண்மையே தாரகமென் றுணர்ந்திட்டார்,
அன்பொன்றே உறுதி யென்பார்,
வண்மையே குலதர்ம மெனக்கொண்டார்
தொண்டொன்றே வழியாக் கண்டார்;
ஒண்மையுயர் கடவுளிடத் தன்புடையார்;
அவ்வன்பின் ஊற்றத்தாலே
திண்மையுறும் ஹிந்துமத அபிமான
சங்கமொன்று சேர்த்திட்டாரே.
பலநூல்கள் பதிப்பித்தும்,பல பெரியோர்
பிரசங்கம் பண்ணு வித்தும்
நலமுடைய கலாசாலை புத்தகசா
லைபலவும் நாட்டி யுந்தம்
குலமுயர நகருயர நாடுயர
உழைக்கின்றார்,கோடி மேன்மை
நிலவுறஇச் சங்கத்தார் பல்லூழி
வாழ்ந்தொளிர்க,நிலத்தின் மீதே!
சங்கம் இன்று
நாடு,சமயம்,மொழி ஆகியவற்றின் மீதான பற்றினை இளைஞர்களிடம் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்ட, இச்சங்கம், நூறாண்டுகளைக் கடந்து இன்றும் செயல்பட்டு வருகிறது.
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.