ஆர். காளிப்ரஸாத்

From Tamil Wiki
Revision as of 16:10, 16 February 2022 by Anangan (talk | contribs)
ஆர். காளிப்ரஸாத்

ஆர். காளிப்ரஸாத் (6-4-1979) எழுத்தாளர். சிறுகதையாசிரியர். இலக்கிய விமர்சகர். கட்டுரையாளர்.மொழிபெயர்ப்பாளர். சென்னை 'நற்றுணை இலக்கியக் கலந்துரையாடல்' குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு, கல்வி

ஆர். காளிப்ரஸாத் 6-4-1979ஆம் ஆண்டு பட்டுக்கோட்டையில் பிறந்தார். தந்தை ரெங்கமணி. அன்னை புஷ்பவல்லி. மன்னார்குடி, நாகப்பட்டினம் முதலிய ஊர்களில் பள்ளி, கல்லூரி கல்வியை பயின்றார்.

தனிவாழ்க்கை

2009ஆம் ஆண்டு திருமணம். மனைவி ஆர்த்தி. இரண்டு பிள்ளைகள் மகள் அத்விகா சாதனா. மகன் அஸ்வத் நாராயணன். சென்னை திருமுல்லைவாயலில் வசிக்கிறார்.

சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

செப்டம்பர் 2016 ஆம் ஆண்டு சொல்வனம் இணைய இதழில் "விடிவு" என்ற முதல் சிறுகதை வெளியாகியது. அக்கதைக்கு எழுத்தாளர் ஜெயமோகன் அவரது இணையத்தில் நீண்ட விமர்சனம் எழுதினார். கிழக்கு  பதிப்பகம் நடத்தும் 'சென்னையர் கதைகள்' பரிசு போட்டியில்   'ஆர்வலர்' கதை 2018ஆம் ஆண்டு பரிசு பெற்றது. இணைய இதழ்களில் தொடர்ந்து சிறுகதைகளும் இலக்கிய விமர்சனங்களும் எழுதியுள்ளார்.  

ஆங்கிலத்திலிருந்து சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். விலாஸ் சாரங் கின் The Dhamma man என்ற நாவலை 'தம்மம் தந்தவன்' என்று 2019ஆம் ஆண்டு மொழிபெயர்த்தார். அந்நாவல் இலக்கிய உலகில் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தியது. ஆர். காளிப்ரசாத்தின் முதல் சிறுகதைத் தொகுப்பு எழுத்தாளர் நாஞ்சில் நாடன் முன்னுரையுடன் 2021ஆம் ஆண்டு யாவரும் பதிப்பகம் வெளியிட்டது. அச்சிறுகதைத் தொகுப்பிற்கு நல்ல வரவேற்பும் விமர்சனம் கிடைத்தது.

இலக்கியத்தில் தன் முன்னோடிகளாக பாலகுமாரன், சுஜாதா, நாஞ்சில் நாடன், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோரை குறிப்பிடுகிறார்.

பங்களிப்பு

நற்றுனை இலக்கிய கலந்துரையாடல்

சென்னை இலக்கிய நண்பர்களுடன் இணைந்து "நற்றுணை இலக்கிய கலந்துரையாடல்" என்ற இலக்கியக் குழுவை ஒருங்கிணைத்திருக்கிறார். இணையத்தின் வழி  மாதம் ஒருமுறை நடைபெறும் இக்கலந்துரையாடலில் எழுத்தாளர் ஜெயமோகன்,   கரு. ஆறுமுகத்தமிழன், அருண்மொழிநங்கை, கடலூர் சீனு, சுரேஷ்பாபு ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றி இருக்கிறார்கள்.

சென்னை விஷ்ணுபுரம் நண்பர்களுடன் இணைந்து மாதந்தோறும்  வெண்முரசு நாவல் குறித்த கலந்துரையாடலை ஒருங்கிணைத்திருக்கிறார்.

இலக்கிய இடம்

ஆர். காளிப்ரஸாத்தின் படைப்புலகம் நகர்புற வாழ்க்கையின் அலைச்சலை பகடியுடன் சித்தரித்து சொல்பவை. நவீன வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தையும் சிக்கலையும்  அலட்டல் இல்லாமல்  நேரே காட்டுபவை. அவர் பணி செய்த மின்சாரம் சார்ந்த  துறையிலிருந்து உருவகங்களை அவர் கதையில் உண்டாக்கியிருக்கிறார். அவருடைய கதைகள் யதார்த்த வாழ்க்கையை காட்டி அதிலிருந்து மேல் எழுவதற்கு முயற்சி செய்பவை.

நூல்கள்

சிறுகதை தொகுப்பு

ஆள்தலும் அளத்தலும் (2021)

மொழிபெயர்ப்பு

தம்மம் தந்தவன்- விலாஸ் சாரங் - தமிழில் ஆர். காப்ரஸாத்- 2019

உசாத்துணை

ஆர். காளிப்ரஸாத் வலைப்பக்கம்