ஆதி நாகப்பன்

From Tamil Wiki
ஆதி நாகப்பன்

ஆதி நாகப்பன் (பிப்ரவரி 3, 1926- மே 9, 1976) பத்திரிகையாசிரியர், புனைவு எழுத்தாளர், கட்டுரையாளர், மொழி பெயர்ப்பாளர், வழக்கறிஞர், அரசியல்வாதி எனப் பலத்தளங்களில் இயங்கியவர்.

பிறப்பு, கல்வி

ஆதி நாகப்பன் பிப்ரவரி 3, 1926ல் தமிழ் நாட்டில் பிறந்தார். 1935ல் தனது ஒன்பதாவது வயதில் தனது தந்தையுடன் பினாங்குக்கு வந்தார். ஆரம்பக் கல்வியை முடித்தவர் கெடாவில் அமைந்துள்ள புக்கிட் மெர்த்தாஜம் உயர் பள்ளியில் மேற்கல்வியைத் தொடர்ந்தார். ஜப்பானியர்கள் ஆட்சி ஏற்பட்டதால் அவர் கல்வியைத் தொடர்வதில் தடை ஏற்பட்டது. பத்திரிகை துறையில் எழுந்த ஆர்வத்தால் 1950ல் ஓராண்டு ஊடகத்துறையில் பயின்று டிப்ளோமா பெற லண்டன் சென்றார். 1952ல்  மறுபடியும் லண்டனுக்குப் போய் சட்டம் பயின்றார்.

தனிவாழ்கை

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அமைத்த ஜான்சிராணி படையின் துணை தலைவியான ஜானகியைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஈஸ்வர் நாகப்பன் எனும் ஒரே மகன் உண்டு. தொடக்கத்தில் இ.இ.சி. துரைசிங்கம் (Clough Duraisingam) அவர்களின் சட்ட நிறுவனத்தில் பங்குதாரராக இணைந்தார். பின்னர், சொந்த சட்ட நிறுவனத்தைத் தொடங்கினார்.

இலக்கிய வாழ்கை

ஜானகி

'தமிழ்ச்சுடர்' நாளிதழில் 1948ல் பாகிஸ்தான் இந்தியா பிரிவினையை ஒட்டி ‘கற்பழிக்கப்பட்ட மனைவி’ எனும் சிறுகதை எழுதினார். இக்கதையின் வழி இவர் பரவலாக அறியப்பட்டார்.  மேலும் 1949ல் இவர் தமிழ் நேசன் தலையங்கத்தில் 'மலாயாவில் தமிழ் எழுத்தாளர்கள் இல்லை' என்று எழுதியதால் சீண்டப்பட்ட சுப. நாராயணன், 1950ல் தொடங்கிய முயற்சிதான் கதை வகுப்பு ஆகும்.

பொது வாழ்க்கை 

நேதாஜி அமைத்த விடுதலை இயக்கத்தில் ஆதி நாகப்பனும் பங்கு பெற்று இருந்தார். இந்தியச் சுதந்திரக் கழகத்தின் பிரசாரப் பகுதியில் இவர் நியமனம் பெற்றார். 1946ல் ம.இ.கா கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே ஆதி நாகப்பன் அக்கட்சியில் தொடர்பில் இருந்தார். 1947ல் தன்னுடைய 22ஆவது வயதில் கோலாலம்பூருக்கு வந்து தமிழ்நேசன் நாளிதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். 1950 ஆம் ஆண்டு வரை அப்பொறுப்பில் இருந்த ஆதி நாகப்பன் லண்டனுக்குச் சென்றார். செப்டம்பர் 1951 லண்டனிலிருந்து மலாயா திரும்பியவர் அக்டோபர் 1952 வரை தமிழ் நேசனில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

அரசியல் வாழ்கை

1949ல் தன்னுடைய 24ஆவது வயதில் சிலாங்கூர் மாநிலத்தின் மஇகா தலைவர் ஆனார் ஆதி நாகப்பன். தொடர்ந்து 1963ல் மலேசிய இந்திய காங்கிரஸ்சின் (ம.இ.கா) மேலவை உறுப்பினரானார். 1973ல் ம.இ.காவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். 1965ல் அமைக்கப்பட்ட மலேசியாவில் உள்ளூராட்சி நிறுவனங்கள் பற்றிய அரச ஆய்வுக் குழுவுக்கு அப்போதைய பிரதமர் துன் அப்துல் ரசாக் ஆதி நாகப்பனைத் தலைவராக்கினார். 1974ல் ஆதி நாகப்பன் சட்டத் துறைக்கான துணையமைச்சராக நியமிக்கப்பட்டார். 1976ல் பிரதமர் துறையில் பிரதமர் துறையிலேயே டத்தோ ஆதி நாகப்பனை முழு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இறப்பு

ஆதி நாகப்பன் முழு அமைச்சராக நியமிக்கப்பட்தையடுத்து ம.இ.கா தலைமையில் நடந்த பாராட்டுக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும் போது மே 9, 1976ல் தனது ஐம்பதாவது வயதில், மாரடைப்பில் இறந்தார்.

விருது, பரிசு

  • 1975ல் ‘டான் ஶ்ரீ’ விருதினை மலேசிய அரசு வழங்கியது
  • டான் ஶ்ரீ ஆதி நாகப்பன் பெயரால் சிறந்த எழுத்தாளருக்கு மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆண்டு தோறும் விருதுகள் வழங்கி வருகிறது.

உசாத்துணை

உலகத் தமிழ் களஞ்சியம் (தொகுதி 2) - 2018