ஆடுதுறை மாசாத்தனார்

From Tamil Wiki
Revision as of 17:01, 2 November 2022 by Siva Angammal (talk | contribs)

ஆடுதுறை மாசாத்தனார், சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடியதாக ஒரு பாடல் சங்கத் தொகை நூலான  புறநானூறுவில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

ஆடுதுறை மாசாத்தனார் என்னும் பெயரிலுள்ள சாத்தன் என்னும் சொல் வணிக குலத்தவரைக் குறிக்கும் சொல். மாசாத்தனார் என்பது பெருவணிகரைக் குறிக்கும். ஆடுதுறை மாசாத்தனாரின் ஊர் ஆடுதுறை எனக் கொள்ளலாம். இந்த ஆடுதுறையை இக்காலத்தில் திருவாடுதுறை என்கின்றனர்.  ஆடுகள் மிகுதியாக இருந்ததால் அந்த ஊர் ஆடுதுறை எனப் பெயர் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. திருமந்திரம் இயற்றிய திருமூலர் இவ்வூரில் வாழ்ந்தவர். திருமூலர் ஆடுமேய்த்த வரலாற்றைப் பெரியபுராணம் குறிப்பிடுகிறது.

இலக்கிய வாழ்க்கை

ஆடுதுறை மாசாத்தனார் இயற்றிய ஒரு பாடல் சங்கத் தொகை நூலான புறநானூறுவின் 227- வது பாடலாக இடம் பெற்றுள்ளது. இப்பாடலில் புலவனும், பன்னிரு  புலவர்களால் பாடப்பட்டவனுமான  சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் இறந்தபோது வருந்தி, கூற்றுவனை, விதையை தின்ற உழவனைப் போன்றவனே இத்தனை நாள் பசியாற்றியவனை கொன்ற நன்றியில்லாதவனே என  பழிக்கிறார்.

பாடலால் அறியப்படும் செய்திகள்

புறநானூறு 227
  • பாடப்பட்டவர்: சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்
  • திணை: பொதுவியல்.
  • துறை: கையறுநிலை
  • உயிர்களை உண்டு பசி ஆறும்  கூற்றமே! நீ பெரிதும் அறிவில்லாதவன். உனக்குத் தந்திரம் தெரியவில்லை. விதையைத் தின்றுவிட்டால் விளைச்சல் எப்படிக் கிடைக்கும்? விளைச்சல் இல்லையேல் பசியாறுதல் எப்படி?
  • இனிமேல்தான் உனக்குத் தெரியும், நான் சொல்வது உண்மையென்று. போரில் வெற்றி கண்ட வகையில் வாள் வீரர், யானை, குதிரை ஆகியவை குருதி வெள்ளத்தில் போர்க்களத்தில் மடியும்படி இவன் இதுவரையில் உனக்கு உதவிவந்தான், இவன் உதவியால் நீ உன் பசியைத் தீர்த்துக்கொண்டாய்.
  • ஆற்றலில் இவன் உனக்கு ஒப்பானவன். பென்னால் செய்த பசுமைநிற பூணைக் கையில் பூண்டிருக்கும் வளவன் இவன். வண்டு மொய்க்கும் பூ மாலையைத் தலையில் சூடிக்கொண்டிருப்பவன். இளமை முறுக்கு உள்ளவன்.
  • இவனைக் கொன்றுவிட்டாயே! இனி உன் பசியைத் தீர்க்கவல்லவர் யார் இருக்கிறார்?

பாடல் நடை

புறநானூறு 227

நனிபே தையே, நயனில் கூற்றம்!

விரகுஇன் மையின் வித்துஅட்டு, உண்டனை

இன்னுங் காண்குவை, நன்வாய் ஆகுதல்;

ஒளிறுவாள் மறவரும், களிறும், மாவும்,

குருதியும் குரூஉப்புனற் பொருகளத்து ஒழிய,

நாளும் ஆனான் கடந்துஅட்டு, என்றும் நின்

வாடுபசி அருந்திய பழிதீர் ஆற்றல்

நின்னோர் அன்ன பொன்னியற் பெரும்பூண்

வளவன் என்னும் வண்டுமூசு கண்ணி

இனையோற் கொண்டனை ஆயின்,

இனியார் மற்றுநின் பசிதீர்ப் போரே?

உசாத்துணை

சங்கத் தமிழ் புலவர் வரிசை 1, புலவர் கா. கோவிந்தன், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

புறநானூறு 227, தமிழ் சுரங்கம் இணையதளம்