being created

அனுராதா ரமணன்

From Tamil Wiki
Revision as of 00:19, 29 January 2023 by ASN (talk | contribs) (Page created; Para Added, Image Added, Interlink Created:)
Tamil Writer Anuradha Ramanan

அனுராதா ரமணன் (அனுராதா, அனு, வசந்தி ராஜன்) (ஜூன் 29, 1947-மே 16, 2010) எழுத்தாளர். ஓவியர். பொது வாசிப்புக்குரிய பல படைப்புகளை எழுதினார். இதழாசிரியராகச் செயல்பட்டார். இவரது படைப்புகளில் சில திரைப்படங்களாக, தொலைக்காட்சித் தொடர்களாக வெளியாகின. குடும்ப நல ஆலோசகராகச் செயல்பட்டார்.

பிறப்பு, கல்வி

அனுராதா ரமணன் தஞ்சாவூரில், ஜூன் 29, 1947-ல், நடராஜன் - சாரதா இணையருக்குப் பிறந்தார். தந்தை மேட்டுர் கெமிகல்ஸில் பொறியாளராகப் பணியாற்றினார். அனுராதா ரமணன் சென்னையில் தாத்தாவின் வீட்டில் வளர்ந்தார். ராஜா முத்தையா மேல்நிலைப் பள்ளியில் படித்தார். சென்னை எழும்பூரில் உள்ள ஓவியக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

அனுராதாவுக்கு பதினெட்டு வயதில் ரமணனுடன் திருமணம் நிகழ்ந்தது. பத்தே ஆண்டுகளில் கணவனை இழந்தார். ‘ஸ்பெஷாலிடி பப்ளிகேஷன்ஸ்’ நிறுவனத்தில் பணியாற்றினார். மகள்கள்: சுதா, சுபா.

இதழியல் வாழ்க்கை

அனுராதா ரமணன், Indian Housewife, Grahani aur Grahasti, மங்கையர் மலர் ஆகிய இதழ்களில் பக்க வடிவமைப்பாளராகப் பணியாற்றினார். ‘மங்கை’ இதழின் ஆசிரியர் குழுவில் சில காலம் பணியாற்றினார். ’சுபமங்களா’ இதழில் கோமல் சுவாமிநாதனுக்கு முன் ஆசிரியராகப் பணிபுரிந்தார். ‘வளையோசை’ என்ற இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

எழுத்தாளர் அனுராதா ரமணன்

அனுராதா ரமணன், கல்கி, தேவன், ஜெயகாந்தன், தி. ஜானகிராமன் ஆகியோரது படைப்புகளால் ஈர்க்கப்பட்டார். மங்கை இதழின் ஆசிரியர் சாரதி, அனுராதா ரமணனை எழுத ஊக்குவித்தார்.

’கனவுமலர்கள் கருகும்போது’ என்னும் முதல் சிறுகதை, நவம்பர் 15, 1977-ல் மங்கை இதழில் வெளியானது. ‘சாம்பவி’ என்ற பெயரில் அக்கதையை எழுதியிருந்தார். அந்தக் கதைக்கான ஓவியத்தை ’அனு’ என்ற பெயரில் வரைந்திருந்தார். அந்தச் சிறுகதைக்குக் கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து ஆனந்த விகடன், இதயம் பேசுகிறது, சாவி, தினமணி கதிர், குங்குமம் போன்ற இதழ்களுக்கு எழுதினார். முதல் நாவல் ’மூடிக் கிடக்கிறது நெஞ்சம்' என்பதாகும்.

இவர் எழுதிய, ‘சிறை’ சிறுகதை, ஆனந்த விகடன் பொன்விழா சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு பெற்றது. தொடர்ந்து சிறுகதைகள், நாவல்கள், தொடர்கள், கட்டுரைகள் என்று எழுதினார். முன்னணிப் பெண் எழுத்தாளர்களுள் ஒருவரானார். இவரது படைப்புகளில் சில கன்னடம் மற்றும் தெலுங்கில்  மொழிபெயர்க்கப்பட்டன. தினமலர் வாரமலர் இதழில், இவர் எழுதிய 'அன்புடன் அந்தரங்கம்' பகுதி பலராலும் வரவேற்கப்பட்டது.  15 ஆண்டு களுக்கும் மேலாக அக்கட்டுரைத் தொடர் வெளிவந்தது.

குங்குமம் இதழில் டிசம்பர் சீஸன் இசை விமர்சனத்தை எழுதினார்.

இடையில் சிலகாலம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். பின் அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் எழுத்துலகில் செயல்பட்டார். குடும்பப் பிரச்சனைகள் பலவற்றுக்குத் தீர்வு காண உதவும் ஆலோசகராகவும் aனுராதா ரமணன் செயல்பட்டார்.


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.