under review

கி.சரஸ்வதி அம்மாள்

From Tamil Wiki
Revision as of 11:08, 14 January 2023 by Madhusaml (talk | contribs) (ஒளியும் நிழலும் நாவல் சுட்டி)

To read the article in English: Ki. Saraswathi Ammal. ‎

தெய்வத்திற்கு மேல் (சிறுகதை) (நன்றி: அரவிந்த் சுவாமிநாதன்)

கி. சரஸ்வதி அம்மாள் (1901) தமிழில் கதைகளும் நாவல்களும் எழுதியவர். ஆரம்பகாலப் பெண் எழுத்தாளர்களில் ஒருவர். நீதிபதி வி.கிருஷ்ணசாமி ஐயரின் மகள். இவர் சகோதரி கி.சாவித்ரி அம்மாளும் சகோதரர் கி.சந்திரசேகரனும் எழுத்தாளர்கள். புரட்சிகரமான பல சிந்தனைகளை உள்ளடக்கிய கதைகளை எழுதியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

கி.சரஸ்வதி அம்மாள் நீதிபதி வி.கிருஷ்ணசாமி ஐயர் பாலாம்பாள் இணையருக்கு 1901-ல் பிறந்தார். இவருடைய தங்கை கி.சாவித்ரி அம்மாள், தம்பி கி.சந்திரசேகரன் ஆகியோரும் எழுத்தாளர்கள். இவரது கணவர் எஸ். சுப்ரமணிய ஐயர் அக்காலத்தின் புகழ்பெற்ற வழக்குரைஞர்களில் ஒருவர்.

இலக்கிய வாழ்க்கை

சரஸ்வதி அம்மாள் 1950களிலேயே புரட்சிகரமான பல சிந்தனைகளை உள்ளடக்கிய கதைகளை எழுதியவர். சரஸ்வதி அம்மாளின் முதல் சிறுகதை 'அதிலும் ஒரு லாபம்’ கலைமகள் பொங்கல் மலரில் வெளியானது. கி.வா.ஜ இவரை தொடர்ந்து ஊக்குவித்து எழுத வைத்தார்.

கலைமகள், கல்கி, மங்கை இதழ்களில் குறிப்பிடத்தகுந்த சிறுகதைகளை எழுதினார். கி.சரஸ்வதி அம்மாள் 1949-ல் கலைமகள் நாராயணசாமி ஐயர் நினைவு நாவல்போட்டியில் ’நிழலும் ஒளியும்’ என்னும் நாவலுக்காக பரிசு பெற்றார். ' நிழலும் ஒளியும் " போன்ற நாவல்களையும் கலைமகள் காரியாலாயம் வெளியிட்டுள்ளது . பின்னர் கலைமகளில் தொடராக வெளியானது . அதன் பின்னர் 1950 ல் நூலாக்கம் பெற்றது. பின்னர் இந்நாவல் கலைமகளில் தொடராகவும் வெளியானது. அதன்பின் நூலாக்கம் பெற்றது. இந்நாவலுக்கு எழுத்து இதழில் சி.சு.செல்லப்பா "ஒரு காலகட்டத்தின் மனப்போராட்டச் சித்தரிப்பு நாவல்" என விரிவான விமர்சனம் எழுதியிருக்கிறார்[1]. ஒரு சிறு கிராமத்தில் ஒதுங்கி வாழும் பிராமணக்குடும்பம் ஒன்று புறவுலக அரசியல் நிகழ்வுகளால் தவிர்க்கமுடியாதபடி அலைவுறுவதைச் சித்தரிக்கும் நாவல் இது என சிட்டி-சிவபாத சுந்தரம் அவர்களின் தமிழ்நாவல் நூலில் குறிப்பிடுகிறார்கள்.

'அதிலும் ஒரு லாபம்', 'தெய்வத்திற்கு மேல்', 'ஆசி மொழிகள்', 'சம்பந்தி உபசாரம்' போன்றவை சரஸ்வதி அம்மாளின் குறிப்பிடத் தகுந்த சிறுகதைகளாகும். "இரட்டைக் கதைகள்" என்ற தலைப்பில் கலைமகளில் இவர் எழுதிய கதை மிகுந்த வரவேற்பைப் பெற்ற ஒன்று. மங்கை, கல்கி, குமரிமலர், ஆனந்தவிகடன் போன்ற இதழ்களிலும் குறிப்பிடத்தகுந்த சிறுகதைகளை இவர் எழுதியிருக்கிறார்.

இலக்கிய இடம்

இவரது எழுத்தைப் பற்றி டி.கே.சி., "பெண்டுகளது இதய உலகம் தனியான ஆர்வமும் வேகமும் கொண்டது. இத்தகைய விசித்திரமான உலகத்தை ஆடவர் பார்த்தார்கள், தெளிவுபட எடுத்துச் சொன்னார்கள் என்பது இல்லை. பேராசிரியர்கள் எல்லாருக்கும் இந்த விஷயம் கஷ்டமாகத்தான் இருந்திருக்கிறது. ஆகவே ஆடவர் எழுதியுள்ள இலக்கியங்களில் பெண்பகுதி - சந்திரனில் சூரியனைக் காணாத இருட்பகுதி போல - மங்கலான பகுதிதான். அந்தப் பகுதியை வெளிச்சம் போட்டுக் காட்டுவது போலக் காட்டுகிறார் சரஸ்வதி அம்மாள்" என்கிறார்.

தன் கதைகள் பற்றி சரஸ்வதி அம்மாள், "கதையின் போக்குக்கு ஆசிரியர் பொறுப்பாளியாக முடியுமா? நதிகளுக்கும் அருவிகளுக்கும் ஏன் சின்னஞ் சிறிய ஊற்றுக்களுக்குங்கூட மலைகள் உற்பத்தி ஸ்தானமாக இருக்கின்றன. ஆனால் அவைகள் கீழ்நோக்கி வழி செய்து கொண்டு தம் போக்கில் செல்வதற்கு மலை பொறுப்பாளி ஆகிறதா? மகா கவியோ. வெறும் எழுத்தாளனோ இருவரும் அத்தகையவர்களே. கவியினுடைய பெரும் காவியத்துக்கும் எழுத்தாளனுடைய சாதாரண எழுத்துக்கும் முழுவதும் அவர்களே பொறுப்பாளியாகிறார்கள் என்று நிச்சயமாகச் சொல்லிவிட முடியாது என்பதே என் கதையின் அனுபவத்திலிருந்து நான் தெரிந்து கொண்டது. கதையின் போக்குக்கு எழுத்தாளர் முழுதும் பொறுப்பாளியாகமாட்டார். அவ்வளவு தான். கவிதையும், எழுத்தும் தங்கள் போக்குக்குத் தாங்களே காரணம் என்று எனக்குப் பட்டதைச் சொல்லி நிறுத்திக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கி.சரஸ்வதியைப் பற்றி அம்பை, "கி. சாவித்ரி அம்மாளின் சகோதரியான கி. சரஸ்வதி அம்மாள் மனோதத்துவ ரீதியில் 'கன்றின் குரல்’ (1956) என்ற வித்தியாசமான நாவலை எழுதினார். இளம் மாணவன் ஒருவன் தன்னிலும் பெரிய பெண்ணைக் காதலிப்பதைக் கருவாக வைத்து எழுதிய நாவல். "Calf Love" என்று ஆங்கிலத்தில் கூறுவதை கன்றின் குரலாக மாற்றியவர்" என்கிறார்.

நூல்கள்

நாவல்கள்
  • ஒளியும் நிழலும் - 1949
  • தெய்வத்திற்கு மேல்(சிறுகதை) - 1944
சிறுகதைகள்
  • அதிலும் ஒரு லாபம்
  • தெய்வத்திற்கு மேல்
  • ஆசி மொழிகள்
  • சம்பந்தி உபசாரம்

உசாத்துணை

  • "விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (1892-1947)": தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
  • "விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1 : 1907-1947)"; தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.

அடிக்குறிப்புகள்

  1. ஒளியும் நிழலும், எழுத்து இதழ்- விமர்சனம் - https://www.tamildigitallibrary.in/admin/assets/periodicals/TVA_PRL_0000540_எழுத்து_1963_05-55.pdf


✅Finalised Page