under review

எஸ்.ஏ. உதயன்

From Tamil Wiki
எஸ்.ஏ. உதயன்

எஸ்.ஏ.உதயன் ஈழத்து எழுத்தாளர். (பிறப்பு: 1964 ஜனவரி 23) எஸ்.ஏ.உதயன் ஒரு எழுத்தாளராக மாத்திரமன்றி நடிகராக, நாடக எழுத்தாளராக, நெறியாளராக, ஒப்பனைக் கலைஞராக பன்முக ஆற்றல் கொண்டவராக நான்கு தசாப்தங்களுக்கு மேலாக இயங்கிவருபவர்.

பிறப்பு - கல்வி

எஸ்.ஏ.உதயன் இலங்கை வடபகுதியின் மன்னார் மாவட்டத்தின் பேசாலை என்ற இடத்தைப் பிறப்பிடமாக் கொண்டவர். இவரது இயற்பெயர் ஏ.ஜே.கே.துரம். ஆரம்பக்கல்வியை மன்னார் பற்றிமா மத்திய மகா வித்தியாலயத்திலும், பின்னர் தமிழகத்தில் எல்லிஸ் ட்வுன் கூத்தன் பட்டறையில் நாடக அரங்காற்றுகையில் டிப்ளோமா கற்கை நெறியையும் நிறைவு செய்தார். கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் நுண்கலைப்பிரிவில் ஆசிரியப் பயிற்சியை நிறைவுசெய்தார். மன்னார் துள்ளுக்குடியிருப்பு ரோமன் கத்தோலிக்க தமிழ்கலவன் பாடசாலையில் தற்போது பிரதி அதிபராகக் கடமையாற்றுகிறார்.

தனி வாழ்க்கை

1983 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற கலவரமான காலப்பகுதியை அடுத்து - இடம்பெயர்ந்து - தமிழகம் சென்று 1986 முதல் 1990 ஆம் ஆண்டுவரை தமிழக அகதி முகாம்களில் வாழ்ந்தவர். எஸ்.ஏ.உதயன் 1986 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி ஜெயராணி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள்

ஈரோஸ் இயக்க வாழ்க்கை

1983 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை ஈழ புரட்சி அமைப்பில் (ஈரோஸ்) எஸ்.ஏ.உதயன் அங்கம் வகித்தார். ஈழப்போராளிகளுக்கு எண்பதுகளில் முற்பகுதியில் உத்தரப்பிரதேசத்தில் இந்திய அரசினால் வழங்கப்பட்ட ஆயுதப்பயிற்சி குறித்த ஈரோஸ் அமைப்பின் சார்பிலான தனது அனுபவத்தை "யுபி 83" என்ற நாவலாக எழுதினார்.

இலக்கியம்

கூத்து மரபின் வழியாக இலக்கியக் கூறுகளைக் கண்டடைந்து அதன் ஊடாக ஈழ எழுத்துக்கு அறிமுகமானவர் கே.எஸ். உதயன். இவர் எழுதிய முதலாவது நாவலான "லோமியா" ஈழ இலக்கியத்திற்கு மன்னார் பிரதேசத்திலிருந்து பங்களிப்பான முதல் பிரதி. இது ஈழத்தின் நெய்தல் நில வாழ்வின் பரிணமாத்தை பச்சையாகப் பதிவு செய்த நாவல் என்றும் குறிப்பிடலாம். கே.எஸ். உதயனின் அனைத்து நாவல்களும் அவர் எதிர்கொண்ட வாழ்வினதும் தான் சார்ந்த மண்ணினதும் மக்களதும் பண்பாட்டு கூறுகளினதும் களம் சார்ந்ததாவே அமைந்திருக்கின்றன. அவரது கப்பித்தான் என்ற நாவல், மன்னார் பேசாலைப் பகுதியில் நீண்டகாலமாக அரங்கேற்றப்பட்டுவரும் "உடக்குபாஸ்" என்ற தனித்துவமான நாடகத்தைப் பற்றியது.

இலக்கிய இடம்

உதயனின் எழுத்துக்கள் குறித்து எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் குறிப்பிடும்போது, "எழுத்தை ஆளும் சக்தி கொண்டவர் எஸ்.ஏ. உதயன. தமிழில் எழுதி பிரபல்யமடைந்த கேரளக்காரரான ஆ.மாதவனுக்கு திருவனந்தபுரம் சாலை கம்போளக் கடைத்தெரு கணக்கு வழக்கின்றி கதைகள் கூறுகின்றது என்று விமர்சகர்கள் வியந்து கூறுவதுணர்டு. அந்தக் கடைத்தெரு பற்றி அவர் எழுதிய கதைகள் ஒரு தொகுப்பாக வெளியிடப்பட்டபோது, அதற்கு அவர் இட்ட பெயர் 'கடைத்தெரு கதைகள்" என்பதாகும். அதேபோல் மன்னார் மண்ணும் அதன் அரங்குகளும் உதயன் அவர்களுக்கு நிறையவே கதைகள் கூறுகின்றன. உதயனின் எழுத்துக்கள், அரங்காற்றுகைகளில் உள்ள உள் நிகழ்வுகளை - உள் நிர்பந்தங்களை - ஒவ்வொன்றாகப் பிரித்துக்காட்டி வாசகனை உள்ளீர்த்துக்கொள்பவை" என்கிறார்.

நூல்கள்

சிறுகதைகள்
  • குண்டுசேர் - (சிறுகதைத் தொகுப்பு) - 2012
நாவல்
  • லோமியா (நாவல்) - 2008 சாளரம் வெளியீடு - சென்னை.
  • தெம்மாடுகள் (நாவல்) - 2009 திருப்புமுனை வெளியீடு - மன்னார்.
  • வாசாப்பு (நாவல்) - 2010 திருமறைக் கலாமன்ற வெளியீடு - கொழும்பு.
  • சொடுதா - (நாவல்) - 2011 கலையருவி வெளியீடு - மன்னார்.
  • சங்குமுள்ளு - (நாவல்) - 2017 - சைபர் சிற்றி பதிப்பகம் - மன்னார்
  • உ.பி.83 (நாவல்) - 2018 - காக்கை சிறகினிலே பதிப்பகம் - சென்னை.
  • அலுவாக்கரை (நாவல்) - 2019 - கொடகே பதிப்பகம் - கொழும்பு
  • கப்பித்தான் - (நாவல்) - 2022- எதிர் பதிப்பகம் - சென்னை
மொழிபெயர்ப்புகள்

"லோமியா" நாவல் லீலா ரத்னவினால் 2010 இல் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

அரங்காற்றுகை

நாட்டுக்கூத்து, நாடகங்கள் உட்பட எண்பதுகளுக்கும் மேற்பட்ட அரங்காற்றுகைகளை எழுதி மேடையேற்றியவர். 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியில் "துயர இரவுகள்" - (கூத்துருவ நாடகம்), "பாதை தெரியுது பார்" - (குறியீட்டு நாடகம்), "ருத்ர தாண்டவம்" - (குறியீட்டு நாடகம்) போன்ற ஈழவிடுதலைப் போராட்டம் தொடர்பாக பரப்புரை நாடகங்களை தமிழகத்தில் அரங்கேற்றினார். மன்னாரிலும் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் தொடர்ந்தும் நாடகங்களை அரங்கேற்றிவருகிறார். "விடிந்து விட்ட பொழுதினில்" என்ற இசை இறுவட்டினையும் வெளியிட்டார்.

விருதுகள்

  • ஆனந்த கீரித்திக - 1998 இலங்கையின் சிறந்த நாடக நெறியாளருக்கான விருது
  • லோமியா - 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் இலக்கிய விருது - வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம். பவளசுந்தராம்பாள் தமிழியல் விருது. இலங்கை இலக்கியப் பேரவை விருது ஆகியவற்றைப் பெற்றது.
  • "தெம்மாடுகள்" - 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்தநூல் இலக்கிய விருது - வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் - எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது ஆகியவற்றைப் பெற்றது.
  • "வாசாப்பு" - எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது  
  • இலங்கை அரசின் தேசிய சாஹித்திய விருது - 2010 (சொடுதா), 2011 (வாசாப்பு), 2019 (அலுவாக்கரை)
  • இலங்கை அரசின் "தேசிய கலைஞர் விருது" - 2013 ஆம் ஆண்டு
  • தமிழ் தூது தனிநாயம் அடிகளார் நூற்றாண்டு விழாவில் - "நற்புகழ் நாவற்கோன் விருது" - 2013
  • "சொடுதூ" நாவலுக்கு - "கொடகே தேசிய சாஹித்ய விருது" - 2012
  • "சங்கு முள்ளு" நாவலுக்காக - கிழக்கிலங்கை பேனா இலக்கியப் பேரவையினால் - "ஹரினா முஸ்தபா பேனா விருது" - 2013

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.