தி. ஜ. ரங்கநாதன்
தி.ஜ. ரங்கநாதன் (திங்களூர் ஜக்த்ரட்சகன் ரங்கநாதன்: 1901-1974) எழுத்தாளராகவும் இதழாசிரியராகவும் செயல்பட்டார். சக்தி, மஞ்சரி போன்ற இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றினார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவர். குழந்தை இலக்கிய முன்னோடிகளில் ஒருவர்.
பிறப்பு, கல்வி
திங்களூர் ஜக்த்ரட்சகன் ரங்கநாதன் என்னும் தி.ஜ. ரங்கநாதன், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திங்களூரில் ஏப்ரல் 1901-ல் பிறந்தார். குடும்பச் சூழல்களால் ஓரத்தநாடு பாடசாலையில் நான்காம் வகுப்புவரை படித்தார். தொடர்ந்து சுயமாகப் பயின்று அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்களை அறிந்துகொண்டார். ஆங்கிலப் புத்தகங்களை அகராதிகளின் துணைகொண்டு படித்தார். பல்வேறு நூல்களை வாசித்து இலக்கிய ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். சதுரங்க விளையாட்டில் நன்கு தேர்ச்சி பெற்றவர்.
தனி வாழ்க்கை
தி.ஜ.ரங்கநாதன், சுந்தரவல்லியை 1914-ல் திருமணம் செய்துகொண்டார். சுதந்திர ஆர்வத்தால் விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டார். 1920-ல், அந்நியத் துணி விலக்குப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிவகங்கையில் கைதானார். 11 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார். தி.ஜ.ர.வின் தாய் 1922-ல் காலமானார். தொடர்ந்து தந்தை பார்த்துவந்த கர்ணம் வேலையைத் தாம் கற்றுக் கொண்டார். நில அளவைக்கானப் பயிற்சி பெற்றார். சில மாதம் திண்ணைப் பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார். வழக்குரைஞரின் அலுவலக உதவியாளராகச் சில மாதங்கள் பணிபுரிந்தார். மளிகைக் கடைச் சிற்றாள் உள்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டார்.
இலக்கிய வாழ்க்கை
தி.ஜ.ர., திருக்காராயல் என்ற கிராமத்தில் வசித்து வந்த காலத்தில் “ஐரோப்பிய யுத்த சரித்திரம்” என்ற நூலைப் படித்தார். இந்த நூல் அவருள் பல தாக்கங்களை ஏற்படுத்தியது. எழுத்தார்வத்தால் இதழ்களுக்குக் கதை, கட்டுரைகளை எழுதி அனுப்பினார். தி.ஜ. ரங்கநாதனின் முதல் கட்டுரை 1916-ல், ‘ஆனந்த போதினி'யில் வெளியானது. கவிதை அதே ஆண்டில் ‘ஸ்வராஜ்யா' இதழில் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து சுதேசமித்திரனுக்குத் தொடர்ந்து எழுத ஆரம்பித்தார்.
இதழியல் வாழ்க்கை
தஞ்சாவூரில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த 'சமரச போதினி' இதழில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார் தி.ஜ.ர. அதனை அடுத்து காரைக்குடியில் இருந்து வெளிவந்துகொண்டிருந்த 'ஊழியன்' இதழில் பணிக்குச் சேர்ந்தார். இலக்கிய இதழாக வெளிவந்து கொண்டிருந்த ஊழியன் மூலம் இதழியல் நுட்பங்களை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தார். தொடர்ந்து சுதந்திரச் சங்கு, ஜய பாரதி, ஹனுமான், ஹிந்துஸ்தான், நவமணி போன்ற இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்.
சக்தி இதழ் பணி
வை. கோவிந்தன், 1939, ஆகஸ்ட்டில், புதுக்கோட்டை ராமச்சந்திரபுரத்தில், ‘சக்தி’ இதழைத் தொடங்கினார். ஆரம்பத்தில் வை. கோவிந்தன் நிர்வாக ஆசிரியராகவும், அ. கிருஷ்ணமூர்த்தி ஆசிரியராகவும் பணியாற்றினர். பின்னர் தி.ஜ. ரங்கநாதன் ஆசிரியர் பொறுப்பேற்றார். அதுமுதல் ‘சக்தி’ மாறுபட்ட இதழாக வெளிவரத் தொடங்கியது. மொழிபெயர்ப்பு இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த ரங்கநாதன், தானே பல கட்டுரைகளை, சிறுகதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டார்.
இதழில் பல சிறுகதைகளை, கட்டுரைகளை, குழந்தைகளுக்கான பல படைப்புகளை ரங்கநாதன் எழுதினார்.
மஞ்சரி இதழ்ப் பணி
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.