under review

ச. முருகபூபதி

From Tamil Wiki
vikatan.com
அரூ மின்னிதழ்

ச. முருகபூபதி (பிறப்பு: ஏப்ரல் 29, 1971) மணல்மகுடி நாடக நிலத்தின் நிறுவனர் மற்றும் இயக்குனர். 1987-ஆம் ஆண்டு தெரு நாடக இயக்கத்தைத் தொடங்கியது முதல் நடிகர், நாடக ஆசிரியர், இசையமைப்பாளர் என சுமார் முப்பது ஆண்டுகளாக நாடகத்துறையில் செயல்பட்டுவருகிறார். கடந்த பதினைந்து ஆண்டுகளாக குழந்தைகளுக்கான நாடகங்களை இயற்றியும் கற்பித்தும் வருகிறார். குழந்தைகள் நாடகங்களில் பல்வேறு பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டமைக்காக இந்திய அரசின் சங்கீத் நாடக அகாடமியின் உஸ்தாத் பிஸ்மில்லாகான் யுவ புரஸ்கார் விருதைப் (2011) பெற்றார்.

பிறப்பு, கல்வி

ச.முருகபூபதி ஏப்ரல் 29, 1971 அன்று தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் எழுத்தாளர் எம். எஸ். சண்முகம்,-சரஸ்வதி இணையருக்குப் பிறந்தார். புகழ்பெற்ற நாடக ஆளுமையான மதுரகவி பாஸ்கரதாஸ் சுவாமி முருகபூபதியின் தாய்வழிப் பாட்டனார். சகோதரர்கள் எழுத்தாளர்கள் ச. தமிழ்ச்செல்வன் மற்றும் கோணங்கி.

இளம் வயதில் கோவில்பட்டி பொட்டலில் நடைபெறும் சர்க்கஸில் ஒரு காட்சிக்கும், மற்றொரு காட்சிக்குமான இடைவெளியை நிரப்பி, ரசிகர்களை தக்கவைக்கும் கோமாளி வேடம் ச.முருகபூபதியைக் கவர்ந்தது. கோமாளி வேடம் போடுபவருடன் நட்பு கொண்டார். அவர் நினைவுப் பரிசாகக் கொடுத்த மவுத் ஆர்கானைக் கொண்டு நண்பர்களுடன் நாடகக்குழுவைத் தொடங்கி,தெருமுனையில் நாடகம் போடத் துவங்கினார். பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் நாடகத்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

நாடகத்துறை

தேரியாள் மண்விலங்கு நாடகம் அரூ மின்னிதழ்
சூர்ப்பணங்கு
மிருகவிதூஷகம்

முருகபூபதி தன் சகோதரர்கள் நடத்தி வந்த 'சிருஷ்டி' நாடகக்குழுவில் நடிக்கத் துவங்கினார். 1989-ல் தாக்கப்பட்டு இறந்த இந்தியாவின் புகழ்பெற்ற நாடகக் கலைஞர் சஃப்தர் ஹஷ்மிக்கு அஞ்சலிசெலுத்தும் வகையில் நடத்தப்பட்ட 'சஃப்தர் ஹஷ்மி நாடகக் குழு' என்ற நாடகத்தில் நடித்தார். அந்நாடகம் 150 முறை கிராமங்களில் நிகழ்த்தப்பட்டது. 1993-ல் ரஷ்ய எழுத்தாளர் ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின்' Notes From a Dead House' நாவலை 'மரணவீட்டின் குறிப்புகள்' என்ற பெயரில் எழுதி இயக்கினார். 1994-ல் மூன்றாம் உலக நாடுகளில் நடைபெறும் குற்றங்களை மையமாகக் கொண்டு அவர் எழுதிய நாடகம் 'சரித்திரத்தின் அதீத மியூசியம்'

1999-ஆம் வருடம் கோவில்பட்டியில் `மணல்மகுடி நாடக்குழு’ வைத் துவக்கினார். முருகபூபதியின் தொடக்ககாலத் தயாரிப்புக்களான 'மரணவீட்டின் குறிப்புகள்', 'சரித்திரத்தின் அதீத ம்யூசியம்' போன்றவை முழுக்கவும் ஐரோப்பிய நவீனத்துவத்தின் சாயலைக் கொண்டு, தஸ்தெயெவ்ஸ்கி, சார்த்தர் போன்ற  மேற்கத்தியப் படைப்பாளிகளின் தொனியில் வெளிப்பட்டன. அதன்பின் அவற்றிற்கு நேர் எதிரான கருத்தியல் தளத்தைக் கொண்ட நாடகங்களை எழுதி அரங்கேற்றினார். அந்நாடகங்கள் நவீனத்துவத்தை உதறிவிட்டு பின்னோக்கிச் சென்று மரபின் இருப்பில் இருப்பதாக நம்பும் நல்ல அம்சங்களைப் பேசத் தொடங்கின.

மணல்மகுடி நாடக நிலம் குழு கடந்த இருபது ஆண்டுகளாக தமிழ்நாட்டின் மரபுசார்ந்த தொல் சடங்குகளை, இசைவடிவங்களை, கலைபண்பாட்டு நிகழ்வுகளை ஆய்வுசெய்து அவற்றிலிருந்து நவீன நாடக மொழியை உருவாக்கி தமிழகம் மற்றும் இந்தியாவெங்கும் பல்வேறு நாடக நிகழ்வுகளில் நவீன நாடகங்களை நிகழ்த்திவருகிறது.'வனத்தாதி', 'கூந்தல் நகரம்', 'செம்மூதாய்,' ;குற்றம் பற்றிய உடல்', 'மிருக விதூஷகம்', 'சூர்ப்பணங்கு', 'குகைமரவாசிகள்' என ச. முருகபூபதியின் நாடகங்கள் சலனங்களை உருவாக்கின. பல சர்வதேச கலைவிழாக்களில் நடிக்கப்பட்டன. அவரது நாடகங்களில் இசைக்கோர்வையும், நாடக ஒளியமைப்பும் (Theatre Lighting) தனித்துவம் பெற்றவை. நாடோடிகளின் புல்லாங்குழல், ஆஸ்திரேலியப் பழங்குடியினரான அபாரிஜின்களின் டிஜிருடு, ஆப்பிரிக்கக் தோல் கருவி என வெவ்வேறு நிலங்களில் இசைக்கப்படும் இசைக்கருவிகளைச் தமது நாடகங்களில் இசைக்கும் வழக்கமுடையவர் முருகபூபதி.நாடகங்கள் மட்டுமின்றி, மரபுசார் தொல் சடங்குகளை, இசை வடிவங்களை கலை பண்பாட்டு நிகழ்வுகளை ஆய்வுசெய்து புதிய நாடகமொழியை உருவாக்கிவருகிறார்

கருத்தரங்குகள்

'மணல்மகுடி' நாடக வரலாறு, நாடகக் கல்வி, பண்பாடும் நாடகமும், நாடகக்கலையின் இன்றைய தேவை, பார்வையாளர் பண்பாடு போன்ற நாடகம் தொடர்புடைய தலைப்புகளில் இந்தியாவின் தலைசிறந்த நாடகப்படைப்பாளிகள், பேராசிரியர்கள், கலைஞர்களைக் கொண்டு அறிவுசார் கருத்தரங்குகள் நடத்தி வருகிறது.

கலைவழிக்கல்வி பயிற்சிப் பட்டறைகள்

'மணல்மகுடி' தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நாடகக்கலைஞர்களைக் கொண்டு கதை சொல்லும் கலை, கதை வழிக்கற்பித்தல், ஓவியம் இயற்கைச் செயல்பாட்டுவழிக் கற்றல், குறித்த பயிற்சிப் பட்டறைகளை நடத்திவருகிறது.

பொம்மைகள் தயாரிப்புப் பயிற்சி

'மணல்மகுடி' தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் துணிகள் மற்றும் காகிதங்களைக் கொண்டு பொம்மைகள் தயாரித்தல் பயிற்சிகளை கொடுத்து வருகிறது.

இலக்கிய/பண்பாட்டு இடம்

மணல்மகுடி நாடகக்குழு பெருவளர்ச்சி கண்டு தமிழ் அறிவுசார் சமூகத்தில் பல உரையாடல்களை நிகழ்த்தியுள்ளது. நாம் கைவிட்டவற்றின் குரலாக ஒலிப்பவை ச.முருகபூபதியின் நாடகங்களும் எழுத்துகளும். அறிவின் அகங்காரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டு, பித்துநிலையின் தீவிரத்தைப் பேசுபவை. பித்துநிலையில் உள்ளவர்கள், நாடோடிகள், தெருப்பாடகர்கள், சபிக்கப்பட்டவர்கள், சொந்த நிலத்தில் வாழ முடியாமல் துரத்தப்பட்டவர்களின் ஓலங்களே அவரின் நாடகங்கள். பூமி, எல்லா உயிர்களுக்குமானதென்பதை வலியுறுத்துபவை.

முருகபூபதி, தன் நாடகங்களில் சொல்லையும் காட்சியையும் ஒரு வரைகோடாக்கிய பிறகு அதன் உட்பொதிவைப் பார்வையாளனிடம் வளர்த்தெடுக்கவிடுகிறார். இது சங்க இலக்கியங்களில் காணப்படும் தமிழின் தொன்மையான இலக்கியக் கூறுமுறையாகும்.

சொந்த பூமிக்குத் திரும்புதல்-சொந்த அடையாளத்திற்கு-பழைய வாழ்முறைக்குத் திரும்புதல் என்பதில் உறுதியான தொனியைக் கொண்டவை ச. முருகபூபதியின் நாடகங்கள். "செவ்வியல் கலைகளுக்கான புழங்கு வெளி ஒருபோதும் வெகுசன மக்கள் நெருங்குவதற்கானதாக இல்லை, மாறாக, நாட்டார் கலைகள் அந்த மக்களுடனேயே இருக்கின்றன" என்று குறிப்பிடும் முருகபூபதி சடங்குகளை மறத்தலென்பது நமது அடையாளங்களிலிருந்து நம்மைத் துண்டித்துக்கொள்வது என்பதால் மக்களுக்கான கலை வடிவங்களை நாட்டார் கலைகளிலிருந்தும் சடங்குகளிலிருந்தும் உருவாக்குகிறார். சடங்குகள் பெரும்பாலும் சாதிகளோடு தொடர்புடையவை என்பதும், சடங்கார்ந்த படைப்புகள் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பின் அல்லது ஒரு மதச்சடங்கின் எல்லைக்குள் சுருங்கிப்போகும் அச்சமிருப்பதும் எண்ணத்தக்கவை.

"பல்லுயிர் வாழ்வின் ஆதாரமான சூழலியலின் நசிவை வீரியமிக்க நாடகமுயற்சி. அதில் காலனிய அடையாள அழிப்பின் வழி(Decolonising mind) தமிழ் அடையாளங்கள் மீளாக்கம் செய்யப்படுகின்றன.தமிழ் நாடகக்கலையினை வடிவம் சார்ந்து அடுத்த தளத்திற்கு நகர்த்தும் முனைப்பையும் மாற்றுத்தேடலையும் பூபதியிடம் காணமுடிகிறது.இவை தமிழ் நாடகச் சூழலில் மாற்றுப்பாதையை ஏற்படுத்துவதோடு புதிய சாளரங்களை உடைத்துத் திறக்கும் ஆற்றலுடையவையாக இருக்கின்றன.நாடக ஆளுமைகள் அருகி வரும் நிலையில் முருகபூபதியும் அவர்களது குழுவினரும் பெருத்த நம்பிக்கையையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர்" என்று இரத்தினக்குமார் குறிப்பிடுகிறார்.[1]

"முருகபூபதியின் நாடக மொழி சமகால நாடகத்தில் தவிர்க்கவும் இயலாதது. தமிழ் நாடக மொழியின் சமகாலப் பெரும் பாய்ச்சல் அது. அக விழிப்புணர்வு அதிகம் கொண்ட பெருங்கலைஞனால் உருவாக்கப்பட்டது. ஆனால் அம்மொழியின் மூலம் பெருத்த அசதியையும் உருவாக்கிவிடுபவர் முருகபூபதி. படைப்பு உருவாக்க வேண்டிய அகவுந்துதலையும் கலை மகிழ்ச்சியையும் அவரே நோகடித்தும் விடுவார். அதற்குக் காரணம் மொழிக்கு ஒரு முற்போக்கு முகச்சாயத்தைப் பூசிவிட்டால் போதுமென்று அவர் நம்பிக்கை கொண்டிருப்பதுதான்." என்று லக்ஷ்மி மணிவண்ணன் குறிப்பிடுகிறார்.

படைப்புகள்

நாடகங்கள்
  • சரித்திரத்தின் அதீத மியூசியம்
  • உதிரமுகமூடி
  • வனத்தாதி
  • கூந்தல் நகரம்
  • செம்மூதாய்
  • குற்றம் பற்றிய உடல்
  • மிருகவிதூஷகம்
  • சூர்ப்பணங்கு
  • குகைமரவாசிகள்
  • மாயக்கோமாளிகளின் ஜாலக்கண்ணாடி
  • நீர்நாடோடிகள்
தேசிய மற்றும் உலக நாடக விழாக்களில் பங்கேற்ற நாடகங்கள்
தேசிய நாடகத் திருவிழாக்கள்
  • ஜூன், 2011 “மிருகவிதூஷகம்” (Animal Jesters) புரிசை நாடகத் திருவிழா, புரிசை, காஞ்சிபுரம், தமிழ்நாடு
  • அக்டோபர், 2011 “மிருகவிதூஷகம்” (Animal Jesters) கமீலான் சர்வதேச கலைத்திருவிழா – 2011 புதுச்சேரி
  • செப்டம்பர், 2012 “சூர்ப்பணங்கு” கமீலான் சர்வதேச கலைத்திருவிழா – 2012 புதுச்சேரி
  • 2013 “சூர்ப்பணங்கு” முத்ராதி தேசிய நாடகத்திருவிழா, நம்ம துளுவ கலா சங்கேதனம், கார்க்காலா], உடுப்பி, கர்நாடகா.
  • மார்ச், 2013 “மிருகவிதூஷகம்” (Animal Jesters) மஹிந்திரா மாண்பமை நாடக விருதுகள் (META) தேசிய நாடகத் திருவிழா, புதுதில்லி.
  • செப்டம்பர், 2013 குகைமரவாசிகள்” (Cave Tree Dwellers), உஸ்தாத் பிஸ்மில்லாகான் யுவ புரஸ்கார் இசை, நடன, நாடகத் திருவிழா, சங்கீத் நாடக் அகாடமி, புதுதில்லி.
  • ஜனவரி,2014- “குகைமரவாசிகள் ” (Cave Tree Dwellers) முத்ராதி தேசிய நாடகத்திருவிழா, நம்ம துளுவ கலா சங்கேதனம், கார்க்காலா, உடுப்பி, கர்நாடகா.
  • மார்ச், 2016 குகைமரவாசிகள்” (Cave Tree Dwellers) குப்பீ வீரண்ணா தேசிய நாடகத் திருவிழா, Dr. குப்பீ வீரண்ணா ரங்காமிந்தரா, குப்பீ[, கர்நாடகா
  • மார்ச், 2016 “குகைமரவாசிகள்” (Cave Tree Dwellers), மஹிந்திரா மாண்பமை நாடக விருதுகள், (META) தேசிய நாடகத்திருவிழா புதுதில்லி.
  • நவம்பர், 2016 “மாயக்கோமாளிகளின் ஜாலக்கண்ணாடி ” (Illusional Clowns Mystique Mirror) ரங்கா சங்கரா நாடகத் திருவிழா, பெங்களூர், கர்நாடகா.
  • 2017, “மாயக்கோமாளிகளின் ஜாலக்கண்ணாடி ” (Illusional Clowns Mystique Mirror) மினர்வா நாட்யசன்ஸ்கிருதி சார்ச்சகேந்திரா மூன்றாவது தேசிய நாடகத் திருவிழா – கொல்கத்தா
  • மார்ச் 2017, “மிருகவிதூஷகம்” (Animal Jesters) செய்தி மக்கள் தொடர்புத்துறை, கேரளா அரசு ) தேசிய நாடகத் திருவிழா-2017 திருவனந்தபுரம், கேரளா.
  • ஏப்ரல் 2017, “மாயக்கோமாளிகளின் ஜாலக்கண்ணாடி” (Illusional Clowns Mystique Mirror) ராங்திவானி தேசிய நாடகத்திருவிழா-2017 ராங்காயான தர்வார், கர்நாடகா

சர்வதேச நாடகத் திருவிழாக்கள்[தொகு]

  • 2009, ஜனவரி செம்மூதாய் பதினொன்றாவது பாரத் ரங் மகோத்சவ், தேசிய நாடகப்பள்ளி, புதுதில்லி.
  • 2012, ஜனவரி மிருகவிதூஷகம் பதினான்காவது பாரத் ரங் மகோத்சவ், தேசிய நாடகப்பள்ளி, புதுதில்லி.
  • 2013, ஜனவரி சூர்ப்பணங்கு பதினைந்தாவது பாரத் ரங் மகோத்சவ், தேசிய நாடகப்பள்ளி, புதுதில்லி.
  • 2015, பிப்ரவரி மாயக்கோமாளிகளின் ஜாலக்கண்ணாடி பதினேழாவது பாரத் ரங் மகோத்சவ், தேசிய நாடகப்பள்ளி, புதுதில்லி.
  • 2016, செப்டம்பர் மாயக்கோமாளிகளின் ஜாலக்கண்ணாடி பாண்டிஆர்ட் சர்வதேச கலைத் திருவாழா- 2017, பாண்டிச்சேரி.
  • 2017, பிப்ரவரி மாயக்கோமாளிகளின் ஜாலக்கண்ணாடி, கேரளா சர்வதேச நாடகத் திருவிழா – 2017, திருச்சூர், கேரளா.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.