under review

திருப்புகழ்

From Tamil Wiki
Revision as of 03:43, 15 May 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors; Corrected year suffix text; ; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
திருப்புகழ் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: திருப்புகழ் (பெயர் பட்டியல்)
திருப்புகழ்

திருப்புகழ் (பொ.யு-14-ம் நூற்றாண்டு) முருகன் மீது பாடப்பட்ட தமிழ் பக்தி இலக்கிய நூல். அருணகிரிநாதர் எழுதியது சந்தப்பாடல்கள் கொண்டது. தமிழில் சந்தம் அமைந்த நூல்களில் தலையாயது என்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. இசைப்பாடல்களாக இதன் பாடல்கள் பாடப்படுகின்றன. பிற்காலத்தைய சிற்றிலக்கியங்கள் பலவற்றுக்கும் அமைப்பு கூறுமுறை ஆகியவற்றால் முன்னோடியாக அமைந்தது. முருகனை முதன்மைத் தெய்வமாகக் கொண்ட கௌமாரம் எனும் மதத்தின் தத்துவக் கொள்கைகளும், சக்தியை முதன்மைத் தெய்வமாகக் கொண்ட சாக்த மதத்தின் வாமாசாரம் எனப்படும் மரபின் மறைஞானக் கருத்துக்களும் இந்நூல்களில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

உருவாக்கத் தொன்மம்

பரத்தையரிடம் சென்று நோயுற்று செல்வத்தை இழந்த அருணகிரி தன் தமக்கை ஆதியிடம் தனக்கு பரத்தையரிடம் செல்ல பணம் கேட்டார் என்றும், அப்போது அவர் 'நானும் பெண்தானே?" என்று கேட்டதாகவும், அதனால் அதிர்ச்சி அடைந்த அருணகிரி திருவண்ணாமலை மலை மேல் ஏறி குதித்து உயிர்விடப் போனபோது முருகன் நேரில் தோன்றி நாவில் சரவணபவ என்னும் எழுத்தை எழுதியதாகவும், அதனால் ஞானம் பெற்று தன் அன்னையின் பெயரிலிருந்து தொடங்கி 'முத்தைத் தரு பத்தி' எனும் பாடலுடன் திருப்புகழை பாடியதாகவும் தொன்மக்கதைகள் சொல்கின்றன

உருவாக்கம், அமைப்பு

திருப்புகழ் அருணகிரிநாதரால் எழுதப்பட்டது. இந்நூலின் பெயர் இதுவா அல்லது பின்னாளில் தொகுத்தவர்கள் சூட்டிய பெயரா என்பது தெரியவில்லை.

திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. வ.சு. செங்கல்வராய பிள்ளை தமக்குக் கிடைத்த திருப்புகழ்ப் பாடல்கள் 1307-ல் 1008 சந்தங்கள் உள்ளன என்கிறார். திருப்புகழில் பழந்தமிழ்ச் சந்தங்கள், நாட்டார் மரபு சார்ந்த சந்தங்கள் ஆகியவற்றுடன் சம்ஸ்கிருத மரபின் சந்தங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பண்ணிசை மரபைச் சாராத பலவகையான தாளங்களும் இதில் கையாளப்பட்டுள்ளன. வெவ்வேறு முருகத்தலங்களில் முருகனை துதித்துப் பாடப்பட்ட நூல்களின் பெருந்தொகுப்பு இந்நூல்.

வெளியீடு

1871ல் மாவட்ட நீதிபதியாக இருந்த வ.த. சுப்ரமணிய பிள்ளை சிதம்பரத்தில் ஒரு விவாதத்தில் அருணகிரிநாதரின் பாடல்களைக் கேட்டு அதன்மேல் ஆர்வம் கொண்டார். அவை அப்போது வெவ்வேறு ஓலைச்சுவடிகளிலாக சிதறி பெரும்பாலும் மறக்கப்பட்டிருந்தன. 1871-ல் வி.டி. சுப்ரமணிய பிள்ளை தென்னிந்தியா முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்து எழுத்தோலை உள்ளிட்ட கையெழுத்துப் பிரதிகளை சேகரித்து அருணகிரிநாதர் பாடல்களை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார். 1894-ல் முதலாவது பதிப்பும், 1901-ல் இரண்டாவது பதிப்பும் அவரது மறைவுக்குப் பிறகு அவரது மகன் செங்கல்வராய பிள்ளையால் புத்தகமாக வெளியிடப்பட்டது.

திருப்புகழ் இசையமைப்பு

திருப்புகழ் அதன் வரியமைப்பிலுள்ள தாளம்- சந்தம் ஆகியவற்றால்தான் இசைத்தன்மை கொண்டிருக்கிறது. சுவடிகளில் இருந்து வெளியிடப்பட்டமையால் அதன் இசைவடிவம் கிடைக்கவில்லை. பழங்காலத்தில் அது பண்ணிசையில் எப்படி பாடப்பட்டது என்பது தெளிவாக அறியப்படாமையால் 1901-ல் அது அச்சில் வந்த காலம் முதல் அதை சுவரப்படுத்தி இசையமைக்க பலர் முயன்றுள்ளனர். அருணகிரிநாதர் வராளி, லலிலா, பைரவி, கௌளை, குறிஞ்சி போன்ற ராகங்களுக்கு நிகரான பண்களை குறிப்பிடுகிறார். காஞ்சீபுரம் நைனா பிள்ளை, சித்தூர் சுப்ரமணிய பிள்ளை போன்றவர்கள் திருப்புகழுக்கு இசையமைத்துள்ளனர். ஜி.என்.பாலசுப்ரமணியம், ஆலத்தூர் சகோதரர்கள் ஆகியோர் கர்நாடக இசையின் ராகங்களுக்கு ஏற்ப இசையமைத்துள்ளனர். தண்டபாணி தேசிகர் திருப்புகழை தமிழிசையின் முதன்மையான நூல்களில் ஒன்றாக கண்டு இசையமைத்துள்ளார்.

திருப்புகழ் இசைநிபுணர் ஏ.எஸ்.ராகவன் ஐநூறுக்கும் மேற்பட்ட திருப்புகழ் பாடல்களை நூறுக்கும் மேற்பட்ட ராகங்களில் இசையமைத்து சுவரக்குறிப்புகள் எழுதியிருக்கிறார். திருப்புகழ் அன்பர்கள் என்னும் ஓர் அமைப்பை தொடங்கி திருப்புகழ் இசைவகுப்புகள் வழியாக திருப்புகழை கற்பிக்கவும் பரப்பவும் முயற்சி எடுத்துக்கொண்டார். சித்ரவீணை என். ரவிகிரண் திருப்புகழ் பாடல்களை புகழ்பெறச் செய்தவர்களில் ஒருவர்..

பண்பாட்டு இடம்

சைவத் திருமுறைகளுக்கு பின்னர் சைவ மரபின் முதன்மையான பக்திநூலாக திருப்புகழ் கருதப்படுகிறது. தேவாரத்திற்கு இணையான இசைத்தன்மையும் கவித்தன்மையும் கொண்டது என மதிப்பிடப்படுகிறது. தமிழகத்தில் சைவத்திற்குள் ஒரு தனிப்பிரிவாக விரிந்த முருகவழிபாட்டின் (கௌமாரம்) முதன்மை நூலாக கந்தபுராணம், திருப்புகழ் இரண்டும் வைக்கப்படுகின்றன. முருகபக்தியை முன்வைக்கும் நூல் என்றாலும் திருப்புகழ் எளிமையான பக்திநூல் அல்ல. அதில் சைவ சித்தாந்தம் சார்ந்த தத்துவக் குறிப்புகளும் பல்வேறு மறைஞானம் சார்ந்த குறிப்புகளும் உள்ளன. ஆகவே தொடர்ச்சியாக உரையெழுதி விளக்கப்படும் நூலாகவே அது உள்ளது.

தமிழின் இசைமரபில் விளைந்த முதன்மை நூல்களில் ஒன்றாகவே திருப்புகழ் தமிழிசை முன்னோடிகளால் கருதப்படுகிறது.

திருப்புகழ் இணையவாசிப்பு

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 14-May-2026, 21:23:04 IST