வி. சங்கர்
வி. சங்கர் (பிறப்பு: அக்டோபர் 16, 1992) நவீனத் தமிழ் கவிஞர். சங்கரின் சூது பவளம் கண்டேன் அல்லேன் கவிதை தொகுதி 2025-ம் ஆண்டு வெளிவந்தது.
பிறப்பு, கல்வி
வி. சங்கர் அக்டோபர் 16, 1992 அன்று நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் வேலுச்சாமி, தனலட்சுமி தம்பதியருக்குப் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரிகள். பத்தாம் வகுப்பு வரை பரமத்திவேலூரில் உள்ள கொங்கு மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். பன்னிராண்டாம் வகுப்பு திருச்செங்கோடு வித்ய விகாஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
வி. சங்கர் 2017-ம் ஆண்டு சந்திரிகாவை மணந்தார். சங்கர் - சந்திரிகா தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை (இசை வல்லபி). சங்கர் முழு நேர எழுத்தாளராக உள்ளார்.
இலக்கிய வாழ்க்கை
வி. சங்கர் சிறு வயது முதலே வாசிக்கும் ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளி நாட்களில் தமிழ் வெகுஜன எழுத்தை வாசித்த சங்கர் பத்தாம் வகுப்பிற்கு பின் நகராட்சி நூலகத்தில் கிடைத்த ஜெயகாந்தன், பசுவய்யா நூல்கள் மூலம் இலக்கிய வாசிப்பு பரிட்சியம் பெற்றார். கல்லூரி நாட்களில் வாசித்த ஜெயமோகனின் அறம் நூல் வழியாக தீவிர இலக்கிய வாசிப்பிற்குள் முழுமையாக வந்ததாக சங்கர் ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார்.
சங்கரின் முதல் கவிதை தொகுப்பு 'சூது பவளம் கண்டேன் அல்லேன்' நூல் 2025-ம் ஆண்டு வெளியானது. சங்கர் கல்பற்றா நாராயணன், ஜெயமோகன், ஐசக் பாஷவிஸ் சிங்கர், ஆண்டாள், சுப்ரமணிய பாரதி ஆகியோரை தன் ஆதர்ச எழுத்தாளராகக் குறிப்பிடுகிறார்.
விருது
2026-ல் வி.சங்கருக்கு புதுச்சேரி வெண்முரசு வாசகர்வட்டம் அளிக்கும் விருது வழங்கப்பட்டது.
இலக்கிய இடம்
வி. சங்கரின் முதல் கவிதை நூல் 'சூது பவளம் கண்டேன் அல்லேன்' பற்றி லக்ஷ்மி மணிவண்ணன் குறிப்பிடும் போது, "இந்த தொகுப்பில் நெடிய மாலைகளை போன்ற நான்கு கவிதைகள் உள்ளன. ஒவ்வொரு மாலையிலும் தொடுக்கப் பட்டிருக்கும் பூக்கள் ஒவ்வொன்றும் மொத்தத்தோடு தொடர்பு கொண்டிருக்கின்றன. சில இடங்களில் தனித்தும் அவற்றுக்கு ஒரு அனுபவம் இருந்தாலும் கூட மொத்ததோடு அவை ஒன்றுபடுகின்றன. இந்த அமைப்பு முறை நவீன கவிதை வாசிப்பு பழக்கத்திற்கு உவப்பாக இல்லை.ஆனால் இதனால் உண்டாகும் கவிதை அனுபவம் சிறப்பாக இருக்கிறது. வி. சங்கரின் வெளிப்பாட்டுச் சிறப்பு இது" என்கிறார்.
நூல்
- சூது பவளம் கண்டேன் அல்லேன் - சால்ட் பிரசுரம் (2025)
உசாத்துணை
வெளி இணைப்புகள்
- சூது பவளம் கண்டேன் அல்லேன் நூல் வெளியீட்டு விழா காணொளி பதிவுகள்
- சூது பவளம் கண்டேன் அல்லேன் நூல் ஏற்புரை - வி. சங்கர்
- கவிதையின் நிலையான வடிவம் எது? - லட்சுமி மணிவண்ணன், கவிதைகள்.இன்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Apr-2026, 05:42:22 IST