கடுகு பெருந்தேவனார்
கடுகு பெருந்தேவனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
கடுகு பெருந்தேவனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். பாரதம் பாடிய பெருந்தேவனாரிலிருந்து வேறுபடுத்தி அறிய கடுகு என்னும் சிறப்பு சொல் பெயரடையாக சேர்க்கப்பட்டுள்ளது. எனினும் பெயர் காரணத்தை அறிய இயலவில்லை.
இலக்கிய வாழ்க்கை
கடுகு பெருந்தேவனார் பாடிய பாடல் குறுந்தொகையில் 255-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. பொருளீட்டும் பொருட்டு பிரிந்து சென்ற தலைவர் தன் மேல் உள்ள அன்பு மிகுதியால் இடைவழியில் திரும்பி வந்து விடுவாரோ என ஐயம் கொண்ட தலைவியை ஆற்றுப்படுத்த தோழி உரைப்பதாக பாலைத் திணையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- ஆடவர் பொருளீட்டச் செல்லும் பாலை நிலத்து வழியில் கடும் வறட்சி காணப்படும். வறட்சியினால் உண்டான தாகத்தால் தவிக்கும் தனது யானைக்கூட்டத்திற்கு நீர் கொண்டு வரும் பொருட்டு வளைந்த ஒட்டைகளற்ற அடிப்பாகத்தையுடைய யாமரத்தை ஆண் யானை தந்தத்தால் குத்திப் பிளக்கும். யாமரத்தின் பிளவினூடாக வரும் நீரை யானைக் கூட்டம் அருந்தும்.
பாடல் நடை
குறுந்தொகை - 255
- திணை: பாலை கூற்று: இடை நின்று மீள்வர் எனக் கவன்ற கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது
பொத்தில் காழ அத்த யாஅத்துப்
பொரியரை முழுமுதல் உருவக் குத்தி
மறங்கெழு தடக்கையின் வாங்கி உயங்குநடைச்
சிறுகண் பெருநிரை உறுபசி தீர்க்கும்
தடமருப் பியானை கண்டனர் தோழி
தங்கட னிறீஇய ரெண்ணி யிடந்தொறும்
காமர் பொருட்பிணிப் போகிய
நாம்வெங் காதலர் சென்ற வாறே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - அதியன் விண்ணத்தனார் முதலிய 44 புலவர்கள்: புலவர் க.கோவிந்தன்
- குறுந்தொகை - 255:nallakurunthokai
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-May-2025, 11:16:03 IST