மர்ரே எஸ். ராஜம்
மர்ரே எஸ். ராஜம் (மர்ரே சாக்கை ராஜம்: 1904-1986) ஆங்கிலேயர்களின் நிறுவனமான மர்ரே நிறுவனத்தில் பணியாற்றியவர். இந்திய விடுதலைக்குப் பின் அந்த நிறுவனத்தைப் பொறுப்பேற்று நடத்தியவர். நிறுவனத்தின் பெயருடன் இணைத்து ‘மர்ரே எஸ் ராஜம்’ என்று அழைக்கப்பட்டார். எஸ். வையாபுரிப் பிள்ளையின் ஆலோசனையின் பேரில், அவரது தலைமையில், இலக்கிய நூல்கள் பலவற்றைச் செம்பதிப்பாக, மலிவு விலையில் கொண்டு வந்தவர்.
பிறப்பு, கல்வி
மர்ரே சாக்கை ராஜம் எனும் மர்ரே எஸ். ராஜம், நவம்பர் 22, 1904 அன்று, திருத்துறைப்பூண்டி அருகே உள்ள துளசாபுரம் என்று அழைக்கப்படும் சாக்கையில் பிறந்தார். தந்தை கோபாலையங்கார்; தாயார் கோமளத்தம்மாள். தொடக்க மற்ற்றும் உயர்நிலைக் கல்வியை முடித்தவர், மிகவும் கடினமான, கணக்குத் தணிக்கைப் பிரிவில் சேர்ந்து பயின்றார்.
தனி வாழ்க்கை
படிப்பை முடித்ததும், சென்னையில் ஆங்கிலேயர்களால் நடத்தப்பட்ட ஏல நிறுவனமான மர்ரே நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். பாரத சுதந்திரத்திற்குப் பின், ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய நிலையில், மர்ரே நிறுவன இயக்குநர்களும் வெளியேறினர். அதன் பின் தனது சகோதரருடன் இணைந்து மர்ரே நிறுவனத்தைத் தானே ஏற்று நடத்தினார் ராஜம். அதனால ‘மர்ரே ராஜம்’ என்று இவர் அழைக்கப்பட்டார்.
சமூக வாழ்க்கை
சமூகத்திற்குத் தன்னாலான பல நற்பணிகளைச் செய்ய வேண்டுமென ராஜம் விரும்பினார். அதனால் மர்ரே நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருந்து விலகி நிறுவனத்தைத் தனது சகோதரரின் மருமகனிடம் ஒப்படைத்தார். அதில் கிடைத்த நிதியைக் கொண்டு சில அறக்கட்டளைகளை ஏற்படுத்தினார். அதன் மூலம் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுதல், திருக்கோயில் வளர்ச்சிக்கு உதவுதல் போன்ற நற்பணிகளை மேற்கொண்டார்.
இலக்கிய வாழ்க்கை
1940-ல், எழுத்தாளர் பெ.நா. அப்புசாமியின் மூலம் எஸ். வையாபுரிப் பிள்ளையை நிகழ்வு ஒன்றில் சந்தித்தார் ராஜம். வையாபுரிப் பிள்ளை அப்போது சென்னைப் பல்கலையில் பணியாற்றி வந்தார். அவர், ராஜத்திடம் தமிழ் இலக்கியம் குறித்தும், மலிவு விலையில் இலக்கிய நூல்கள் கிடைப்பதன் தேவை குறித்தும் தெரிவித்தார். மேலும் அவர், “அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் சந்தி பிரித்த பதிப்புகளாகப் பழந்தமிழ் இலக்கியங்களுக்குக் கொண்டுவர வேண்டும்” என்ற தனது விருப்பத்தையும் பகிர்ந்துகொண்டார். ராஜமும் அதனை ஏற்றுக் கொண்டார்.
மர்ரே நிறுவனப் பதிப்புகள்
1955-ல், மர்ரே எஸ். ராஜம், தமிழிலக்கியங்களை மலிவுப்பதிப்பில் வெளியிடும் நோக்கத்துடன், புத்தக வெளியீட்டைத் தொடங்கினார். எஸ். ராஜம், நெ 5, தம்புச்செட்டித் தெரு, சென்னை-01 என்ற முகவரியில் இருந்து பதிப்பகம் செயல்படத்தொடங்கியது. எஸ். வையாபுரிப்பிள்ளையே பதிப்பாசிரியராக இருந்தார். பதிப்பகத்தின் முதல் நூலாக, 1955-ல், நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் முதலாயிரம் சந்தி பிரிக்கப்பட்டு வெளியானது. அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, மேலும் பல இலக்கிய நூல்களை மலிவு விலையில் வெளியிட்டார் ராஜம்.
மர்ரே நிறுவனத்தின் மூலமாக 'தமிழிலக்கியச் செல்வம்' என்ற வகைமையில், 1955 முதல் 1960 வரை பழந்தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள் என 40-க்கும் மேற்பட்ட நூல்களைத் தரமான அச்சில், மலிவு விலையில் வெளியிட்டார் ராஜம்.
பதிப்பாசிரியர்கள்
மர்ரே நிறுவன வெளியீடுகளில் எஸ். வையாபுரிப்பிள்ளையுடன் இணைந்து பதிப்பாசிரியர் குழு ஒன்றும் செயல்பட்டது.
- பி. ஸ்ரீ. ஆச்சார்யா
- தெ. பொ. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
- கி. வா. ஜகந்நாதன்
- அ.ச. ஞானசம்பந்தன்
- பு.ரா. புருஷோத்தம நாயுடு
- மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை
- கம்பன் அடிப்பொடி சா. கணேசன்
- வே. வேங்கடராஜூலு ரெட்டியார்
- நீ. கந்தசாமிப்பிள்ளை
- பெ. நா. அப்புசாமி
- மு. சண்முகம் பிள்ளை
- வி. மு. சுப்பிரமணிய ஐயர்
- ரா.பி. சேதுப்பிள்ளை
உள்ளிட்டோர் மர்ரே நிறுவன வெளியீடுகளின் பதிப்பாசிரியர்களாக அமைந்தனர்.
மர்ரே நிறுவன வெளியீடுகளின் சிறப்புகள்
- ஓரளவு கற்றவரும் எளிதில் புரிந்து கொள்ளுமாறு சொற்களைச் சந்தி பிரித்தும், நிறுத்தற்குறிகள் இட்டும், நூல்களைப் பதிப்பித்தது.
- மூல பாடத்தை மட்டும் எளிய சந்தியமைப்பில் அமைத்துத் தந்தது .
- நூல்களை மிக மிக மலிவு விலையில் வெளியிட்டு இலக்கிய ஆர்வமுள்ள அனைவருக்கும் கிடைக்க வழி செய்தது.
- நூல்களை முகவுரை, நூற்பகுதி, சிறப்புப்பெயர்கள், பாடற்முதற் குறிப்பகராதி என்ற அமைப்பில் வெளியிட்டது.
- நூல்களின் தேவைக்கேற்ப பாட ரூப பேதங்கள், அரும்பத விளக்கம், உரைவிளக்கம், முதற்குறிப்பு அகராதிகள் அமைத்தல், பிரதி குறித்தான பிற தகவல்களைத் தந்தது.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.