under review

பெருந்தேவபாணி

From Tamil Wiki
Revision as of 17:35, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பெருந்தேவபாணி பன்னிரு திருமுறைகளில் பதினோராம் திருமுறையில் இடம்பெறும் நூல். நக்கீரதேவ நாயனார் இயற்றியது.

ஆசிரியர்

பெருந்தேவபாணியை இயற்றியவர் நக்கீரதேவ நாயனார். திருமுருகாற்றுப்படை இயற்றிய நக்கீரரும் இவரும் ஒருவர் அல்லர் என்பதும், சொல் வழக்கு முதலியவற்றாலும் பொருள் அமைதியாலும், தேவார திருவாசகக் கருத்துக்களும் சொற்றொடர்களும் இடம் பெற்றிருப்பதாலும் சமயக் குரவர்க்குப் பின் பொ.யு. 9-ம் நூற்றாண்டில் வாழ்ந்த நக்கீரர் என்ற ஒருவரால் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதும் ஆய்வாளர்களின் கருத்து.

நூல் அமைப்பு

தேவ பாணி' இசைப்பாவின் வகைகளுள் ஒன்று. தெய்வத்தை முன்னிலையில் வைத்துப் பாடியதால் இப்பெயர் பெற்றது.

ஏனையொன்றே தேவர்ப் பராஅய முன்னிலைக் கண்ணே'

என்று தொல்காப்பியத்தில் இதற்கான இலக்கணம் கூறப்படுகிறது. அடிகளின் எண்ணிக்கை கொண்டு 'பெருந்தேவபாணி', 'சிறுதேவபாணி' என இரு வகைகள் உள்ளதாக அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார். பெருந்தேவபாணி பாடல்களுக்கு பண்ணும் சுரமும் வகுக்கப்பட்டிருக்கவேண்டும், அவை மறைந்திருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

நக்கீரதேவர் திருவாலவாயிறைவனை 'சிவபெருமானே பெருந்தேவன்' எனக்கொண்டு முன்னிலைப்படுத்திப் பாடியதால் பெருந்தேவபாணி என்று பெயர் பெற்றது. ஆறுபத்தேழு அடிகளா லான ஆசிரியப்பாவாக ஆமைந்துள்ளது. சிவனின் புகழை 56 அடிகளில் பாடுகிறது.ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு சிறப்பு சொல்லப்படுகிறது.

இறைவனுடைய திருப்பெயர்களையும், உயிர்களைக் காக்க வேண்டிச் செய்த அருட் செயல்களையும், உலகெலாம் நிறந்து, அதற்கு அப்பாலும் நீக்கமற நிறைந்துள்ள இறைவனது மெய்ம்மைத் தன்மையையும் நக்கீரதேவர் இப்பெருந்தேவபாணியில் போற்றுகிறார். திருவாலவாயிறைவனை நோக்கி, " உன் அருளாணைக்கு மாறுபட நடந்த எளியேன்மேல் கொண்ட சினத்தை நீக்கி அருள் செய்க. இதுவே உனது அருளின் நீர்மையைப் புலப்படுத்தும்" என மன்னிப்பு வேண்டுகிறார்.

இத்தேவபாணியில் வரும் 'நீலகண்டன்', 'நெற்றியோர் கண்ணன்', 'பால் வெண்ணீற்றன்', 'நூலணிமார்பன்' போன்று அன்னீற்று ஆண்பாற் படர்க்கைப் பெயர்களைக் கூறும் வழக்கு சங்கத்தொகை நூல்களில் காணப்படாமையும், அவ்வழக்கு பிற்காலத்தில் வந்தமையும் நக்கீரதேவ நாயனார் சங்ககால நக்கீரர் அல்லர் என்னும் அறிஞர்களின் முடிவுக்குக் காரணமாகின்றன.

பாடல் நடை

சிவனின் பெருமை

நீடிய நிமலனை நிறைமறைப் பொருளினை
ஈசனை இறைவனை ஈறில் பெருமையை
நேசனை நினைப்பவர் நெஞ்சத் துள்ளனை
தாதணி மலரனை தருமனை பிரமனை
காதணி குழையனை களிற்றின் உரியனை

மன்னிப்பு வேண்டுதல்

விரைந்தேன்மற் றெம்பெருமான் வேண்டியது வேண்டா(து)
இகழ்ந்தேன் பிழைத்தேன் அடியேன் - விரைந்தென்மேல்
சீற்றத்தைத் தீர்த்தருளும் தேவாதி தேவனே
ஆற்றவும் செய்யும் அருள்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 18-Sep-2023, 17:09:48 IST