under review

ஞான சரஸ்வதி ஆலயம்

From Tamil Wiki
Revision as of 17:33, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சரஸ்வதி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சரஸ்வதி (பெயர் பட்டியல்)
ஞான என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஞான (பெயர் பட்டியல்)
ஸ்ரீ ஞான சரஸ்வதி, மயிலாடும்பாறை

தமிழ்நாட்டில், சரஸ்வதிக்கு தனியாக எழுப்பப்பெற்ற ஆலயங்களுள் ஒன்று, சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியை அடுத்துள்ள மயிலாடும்பாறையில் இருக்கும் ஸ்ரீ ஞானசரஸ்வதி ஆலயம். இதனை நிர்மாணித்தவர் டாக்டர் அழகப்பா அழகப்பன்.

ஆலய வரலாறு

நியூயார்க் வல்லப விநாயகர் ஆலயம், பிட்ஸ்பர்க் வெங்கடேஸ்வரா ஆலயம், ஹூஸ்டன் மீனாட்சி ஆலயம், சென்னை அறுபடை முருகன் ஆலயம் போன்ற ஆலயங்களை எழுப்பியவர் அமெரிக்காவில் வாழ்ந்த டாக்டர் அழகப்பா அழகப்பன். அவருக்கு முருகனுக்கு ஓர் ஆலயம் அமைக்குமாறு மீனாட்சி நாடியில் உத்தரவு வந்தது. அந்த ஆலயம் முருகனின் ஏழாம் படை வீடாக விளங்கும் என்றும் நாடி ஜோதிடக் குறிப்பு சொன்னது. அதன்படி ஆலயம் அமைக்க பிள்ளையார்பட்டி - குன்றக்குடி சாலையில் உள்ள மயிலாடும் பாறையைத் தேர்ந்தெடுத்தார் அழகப்பன்.

மயில்கள் அதிகம் வசித்ததாலும், அங்குள்ள ஒரு குன்றில் மயில்கள் வந்து ஆடுவதாலும் அப்பகுதிக்கு மயிலாடும் பாறை என்ற பெயர் ஏற்பட்டது. காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள பக்தர்கள், குன்றக்குடி வழியாகப் பழநிக்குக் காவடி எடுத்துச் செல்லும்போது, மயிலாடும்பாறையில் காவடி ஆடிவிட்டு, ஓய்வெடுத்துச் செல்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் மண்டகப்படி விழாவில் பங்குனி உத்திரத்தன்று குன்றக்குடி ஸ்ரீ ஷண்முகநாதப் பெருமான் இந்தக் குன்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அப்படிப்பட்ட பெருமை மிக்க அந்தக் குன்றின் எதிரே உள்ள இடத்தை வாங்கிய அழகப்பன், அதற்கு 'விசாலாட்சி அழகப்பன் தோட்டம்' என்று பெயரிட்டார். அங்கேயே நாடியில் வந்த உத்தரவுப்படி 'ஜோதி சக்தி சொரூப வேல் சன்னதி'யை நிர்மாணித்தார்.

முருகனுக்கு ஆலயம் அமைத்தது போக எஞ்சியுள்ள இடத்தில் ஞான சரஸ்வதிக்கு ஆலயம் அமைக்க நாடியில் உத்தரவு வரவே அங்கு 'ஞான சரஸ்வதி'க்கு என்று தனியாக ஓர் ஆலயத்தை நிர்மாணித்தார்.

ஸ்ரீ ஞான சரஸ்வதி ஆலயம், மயிலாடும் பாறை

ஞான சரஸ்வதி

ஞான சரஸ்வதி, இவ்வாலயத்தில் தனிச்சன்னதியில் காட்சி அளிக்கிறார். ஞான சொருபிணியாக, ஒரு கையில் ஞான கங்கையுடனும் மற்றொரு கையில் ஜபமாலையுடனும், கீழ்க்கரங்களில் சுவடியுடனும், ஞான முத்திரையைக் காட்டி, பிரம்ம சொரூபிணியாக, சிவஞானத்தை அருளும் அம்பிகையாக அருள்பாலிக்கிறார்.

வழிபாடு

இங்குள்ள சரஸ்வதி அன்னையைப் வணங்குவதால் கல்வி, வியாபாரத்தில் தடை, திக்குவாய் நீங்குதல், அறிவு மந்த நிலை மாறிப் பிரகாசித்தல் போன்ற பலன்கள் ஏற்படுவதாக மக்களிடம் நம்பிக்கை நிலவுகிறது. ஞான சரஸ்வதி வழிபாடு ஞாபக சக்தியைப் பலமடங்கு அதிகப்படுத்தி ஒருவரது வாழ்க்கை முன்னேற்றத்தைத் துரிதப்படுத்த உதவும் என நம்பப்படுகிறது. தேர்வு பயம் நீங்கவும், தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும் பள்ளிக் குழந்தைகள், மாணவர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். இங்கு வந்து வழிபடும் குழந்தைகளுக்கு 'அக்ஷராப்யாசம்' (எழுத்தறிவிக்கும் சடங்கு) செய்யப்படுவதுடன், தேன் கொண்டு நாவில் சரஸ்வதி மந்திரமும் எழுதப்படுகிறது.

அமைவிடம்

திருப்பத்தூர் - காரைக்குடி சாலையில், குன்றக்குடி, பிள்ளையார்பட்டி தலங்களுக்கு அருகில், மயிலாடும் பாறை என்னும் இடத்தில் ஞான சரஸ்வதி ஆலயம் அமைந்துள்ளது. இதன் அருகிலேயே ஜோதி சக்தி சொரூப வேல் ஆலயமும் அமைந்துள்ளது. ஞான சரஸ்வதி ஆலயம், சரஸ்வதிக்கு என்று தனியாக எழுப்பப்பட்ட ஆலயமாகும். குன்றக்குடி, பிள்ளையார்பட்டி ஆலயத்தில் இருந்து ஆட்டோ மூலம் சென்று வழிபடுகின்றனர்.

ஆலயம் திறந்திருக்கும் நேரம்
  • காலை 7.00 மணி முதல் 12.00 வரை
  • மாலை 4.30 முதல் 7.30 வரை.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Nov-2024, 10:32:44 IST