under review

மாமலர் (வெண்முரசு நாவலின் பகுதி - 13)

From Tamil Wiki
Revision as of 15:57, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
மாமலர் ('வெண்முரசு' நாவலின் பகுதி - 13)

மாமலர்[1] ('வெண்முரசு' நாவலின் பகுதி - 13) கனவால் மட்டுமே தொட்டறியக் கூடிய மலரின் மணம் பற்றிய தேடலை மையமாகக் கொண்டது. இதில் முக்காலமும் (சென்றவை, நிகழ்பவை, வருபவை) கலைந்து கலைந்து மீண்டும் கூடுகின்றன. பீமன் அவற்றை அறிய முயற்சிசெய்து, தவித்து, நீண்ட நெடிய காலப்பயணத்தை மேற்கொண்டு, இறுதியில் தன்னளவில் மட்டுமே மெய்மையை அறிந்து, திரும்பி வருகிறான்.

பதிப்பு

இணையப் பதிப்பு

'வெண்முரசு' நாவலின் 13-ம் பகுதியான 'மாமலர்' எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் பிப்ரவரி 1, 2017 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு மே 2017-ல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.

அச்சுப் பதிப்பு

கிழக்கு பதிப்பகம் மாமலரை அச்சுப் பதிப்பாக வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்

'வெண்முரசு' நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

'கல்யாண சௌந்திகம்' தான் மாமலரின் மையம். அதைப் பற்றிய முழுவிபரமும் தொடக்கத்திலேயே கொடுக்கப்பட்டுவிடுகிறது. இந்த மாமலரில் பீமன் அடைவது, தடித்த, தூய வெண்ணிற இதழ்களைக்கொண்ட, காம்பில் பால் வடியும் மலர். இங்கு 'மா' என்பது, 'பெரிய' என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது.

யுதிஷ்ட்ரர் , அர்ஜுனனைப் போல பீமனும் தனக்கான மெய்மையைத் தேடிச் செல்கிறான். ஆனால், காலத்தின் வழியாகப் பயணித்து, திரௌபதியின் பிற நான்கு உருவங்களையும் (ஊர்வசி, அசோகசுந்தரி, தேவயானி, சர்மிஷ்டை) கனவில் கண்டும் நேரில் சிற்ப வடிவில் கண்டும் மீள்கிறான். அவள், 'கல்யாண சௌந்திகம்' மலரைப் பற்றிப் பீமனிடம் மட்டுமே பேசுகிறாள். அதைக் கொண்டுவருவதற்காகவே பீமன் காலங்களின் ஊடாகப் பயணிக்கிறான்.

மாமலரில் காலங்களைக் கலைத்தாடுபவராக அனுமன் வருகிறார். அவர் தன்னுருவை மறைத்து, காலத்தின் ஏடுகளைப் புரட்டவல்ல குள்ளர் முண்டன் 'குஸ்மிதன்' என்ற நபராக உருமாறி வருகிறார். பீமனின் அகத்தேடலுக்கு உறுதுணையாகிறார். அர்ஜுனனுக்கு இந்திரன் எப்போதும் தோன்றாத் துணையாக இருந்து உதவுவதுபோல பீமனுக்கு அனுமன் எப்போதும் தோன்றாத் துணையாகவே இருந்து உதவுகிறார். தன்னுடைய படைக்கலமான கதாயுதத்தைப் பீமனின் கையில் கொடுத்துச் செல்கிறார்.

'தகவலை முன்னறிவித்துவிட்டு, பின்னர் விரிவாகக் கூறும்' புதுமையான கதைவிரிக்கும் உத்தி இந்த மாமலர் நாவலில் பயன்படுத்தபட்டுள்ளது. இணைக் கதைகளாக வரும் யயாதி , கசன் கதைகளும் இந்த நாவலில் விரிவாகப் பேசப்படுகின்றன. பீமன் தாண்டகர் வைத்திருக்கும் 'அனந்தம்' என்ற யானத்தைப் பார்த்து, யயாதியைப் பற்றி அறிந்துகொள்கிறான். மேலும் இறந்தோரை உயிர்ப்பிக்கும் மந்திரமான 'சஞ்சீவினி'யை அறிந்து கொள்வதற்காகச் சுக்ரரிடம் வரும் கசன் மூன்று முறை இறந்து பிறப்பதையும் நாவல் சொல்வதுடன் அவன் இறப்பை மூன்று விதங்களில் நாவல் பேசுகிறது.

'வெண்முரசு' நாவல் பகுதிகளில் இடம்பெற்றிருக்கும் 'பிள்ளைப் பெரும்பித்து' மாமலரிலும் வலுவாக இடம்பெற்றுள்ளது. புரூரவஸ் - - ஆயுஸ், ஆயுஸ் -- நகுஷன், சுக்ரர் -- தேவயானி, விருஷபவன் -- சர்மிஷ்டை, யயாதி -- புரு என இந்த வரிசை நீள்கிறது. அரண்மனைகளில் பணியாற்றும் சேடியர் உலகம் குறித்து மாமலர் நாவலில் பல விவரணைகள் பேசப்படுகின்றன. சேடியர்களின் வகைமைகள், அவர்கள் வாழ்க்கை, பணிகள் ஆகியன கதையோட்டத்தோடு இணைந்து வருகின்றன.

'மாமலர்' முக்காலத்தால் கட்டுண்ட, அவிழ்க்க இயலாத புதிர்களும் விடைகளும் நிரம்பியது. பீமன் நீண்ட நெடிய காலப்பயணத்தை மேற்கொண்டு, இறுதியில் தன்னளவில் மெய்மையை அறிந்து திரும்பி வருகிறான்.

கதை மாந்தர்

பீமன், குஸ்மிதன் ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாகவும் புரூரவஸ், ஆயுஸ், நகுஷன், சுக்ரர், சகன், தேவயானி, விருஷபவன், சர்மிஷ்டை, யயாதி, புரு, ஊர்வசி, அசோகசுந்தரி ஆகியோர் துணைமைக் கதைமாந்தர்களாகவும் இடம்பெற்றுள்ளனர்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Dec-2022, 08:42:16 IST