under review

சித்தாந்தம் (இதழ்)

From Tamil Wiki
Revision as of 15:48, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சித்தாந்தம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சித்தாந்தம் (பெயர் பட்டியல்)
சித்தாந்தம்

To read the article in English: Siddhantam (Magazine). ‎

சித்தாந்தம், சைவ சித்தாந்த சமாஜத்தின் மாதாந்திரத் தமிழ் வெளியீடு. 1912 முதல், சென்னையில் இருந்து வெளிவந்தது.

சித்தாந்தம் இதழ், 1912
சித்தாந்தம் இதழ் 1938

பதிப்பு, வெளியீடு

சைவ சித்தாந்த சமாஜத்தின் சார்பில், 1912 முதல் வெளிவந்த இதழ் சித்தாந்தம். இதன் ஆசிரியர் சித்தாந்த சரபம், அஷ்டாவதானி பூவை கலியாணசுந்தர முதலியார். இவர் துறவு நெறி மேற்கொண்ட பின் சிவஸ்ரீ கல்யாணசுந்தர யதீந்திரர் என்று அழைக்கப்பட்டார். 'மணவழகு' என்ற புனைப்பெயரில் பல கட்டுரைகளைத் தந்துள்ளார். இவருக்குப் பின் உலகநாத முதலியார் இதன் ஆசிரியராக இருந்து நடத்தினார். அவரைத் தொடர்ந்து ம.பாலசுப்பிரமணிய முதலியார், மு.அருணாசலம், ந.ரா.முருகவேள், சச்சிதானந்தம் உள்ளிட்ட பலர் இதன் ஆசிரியர் பொறுப்பு வகித்துள்ளனர்.

1912-ல், இதழின் தனிப்பிரதி விலை நான்கணா. ஆண்டுச்சந்தா ரூபாய் ஒன்று. 1938-ல் தனிப்பிரதி விலை நான்கணா. ஆண்டுச் சந்தா ரூபாய் இரண்டு. காலத்திற்கேற்ப பிற்காலத்தில் இதன் விலை மாறுபாடு அடைந்துள்ளது.1964-ல், இதழின் தனிப்பிரதி விலை அணா நான்கு. ஆண்டுச் சந்தா மூன்று. ஆரம்பத்தில் மெய்கண்டான் அச்சுக்கூடத்தில் அச்சடிக்கப்பட்ட இவ்விதழ், பின்னர் சாது அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டு வெளியானது.

உள்ளடக்கம்

சித்தாந்தம் இதழ், சைவ சித்தாந்தக் கருத்துகளையும், சமய, தத்துவக் குறிப்புகளையும் உள்ளடக்கமாகக் கொண்டு வெளிவந்தது. பாஷை என்பதை 'பாழை' என்றே சித்தாந்தம் இதழ்களின் ஆரம்பக் காலகட்டத்தில் குறிப்பிட்டுள்ளனர். ஆகம விளக்கம் பற்றிய கட்டுரைகள் அதிகம் இடம்பெற்றுள்ளன.

ஜே.எம். நல்லுச்சாமிப்பிள்ளை, தி.அரங்கசாமிநாயுடு, கி.குப்புசாமி, மெய்கண்ட முதலியார், பால்வண்ண முதலியார். பண்டிதை அசலாம்பிகை அம்மாள், காசிவாசி செந்திநாதையர், துடிசைக்கிழார் அ. சிதம்பர முதலியார், நாகை ஸி. கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இவ்விதழுக்குப் பங்களித்துள்ளனர். சைவ சித்தாந்தக் கருத்துக்கள் வினா - விடையாக பல்வேறு விளக்கங்களுடன் இவ்விதழில் இடம் பெற்றிருக்கின்றன.

"மெய்கண்டார் இயற்றிய 'சிவஞானபோதம்' தமிழ் முதல் நுாலே' என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை, துடிசைக் கிழார் அ.சிதம்பரனார் எழுதினார். அவர் விவாதமாக எழுப்பிய வினாக்களுக்கான விரிவான பதில்களை சங்கரன் கோவில் சைவ சித்தாந்த சபை நிறுவனரும், திருவாவடுதுறை ஆதீன வித்துவானுமான பேட்டை ஆ . ஈசுரமூர்த்திப் பிள்ளை அளித்துள்ளார்.

1980-களில் சைவ சித்தாந்த சமாஜம், சைவ சித்தாந்தப் பெருமன்றமாகப் பெயர் மாற்றம் பெற்றது. நல்லுார் சரவணன் தலைமையில் இயங்கி வரும் இம்மன்றத்தின் சார்பாக தற்போதும் 'சித்தாந்தம்' இதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நுாற்றாண்டைக் கடந்த முதல் சைவ இதழ் என்ற பெருமை சித்தாந்தம் இதழுக்கு உண்டு.

ஆவணம்

தமிழ் இணைய நூலகத்தில் 'சித்தாந்தம்' இதழ்கள் சில ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆர்கைவ் தளத்திலும் 'சித்தாந்தம்' இதழ்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Mar-2023, 20:37:00 IST