under review

ச. பூபால பிள்ளை

From Tamil Wiki
Revision as of 15:47, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பூபால என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பூபால (பெயர் பட்டியல்)

ச. பூபால பிள்ளை (1856-1921) ஈழத்து சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். மட்டக்களப்பு அறிஞர்களின் முன்னோடி என்றழைக்கப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

ச. பூபால பிள்ளை இலங்கை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு புளியந்தீவில் 1856-ல் பிறந்தார். பெற்றோர் சதாசிவப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை இணையர். ஆரம்பக்கல்வியை புளியந்தீவு மெதடிஸ்ட் ஆங்கிலப்பள்ளியில் பயின்றார். மேற்கல்வியை கிறிஸ்தவ மத்திய கல்லூரியில் பயின்று ஆங்கிலம், தமிழ் மொழிகளில் தேர்ச்சி பெற்றார். தமிழ் இலக்கண இலக்கியங்களையும், புராண இதிகாசங்களையும், சித்தாந்த சாஸ்திரங்களையும் முறையாக ச.வைத்தியலிங்கம்பிள்ளையிடம் பயின்றார்.

பணி

கல்லூரிப் படிப்பு முடிந்ததும் இவர் அரசாங்க சேவையில் எழுதுவினைஞராக முப்பது ஆண்டுகள் பணியாற்றினார். அரசாங்கக் கட்டட வேலைத் திணைக்களத்தில் சிறப்பியல் உயர்பதவி பெற்றார். 1915-ல் அரசாங்கப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். ஓய்வுக்கு பின் முழுநேரமாக இலக்கியத்தில் ஈடுப்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

ச. பூபால பிள்ளை தமிழ்மொழி, சைவ சமயம் சார்ந்த நூல்களை எழுதினார். தன் இருபத்தியேழாவது வயதில் "பெரியதுறைத் திருமுருகன் பதிகம்" என்ற முதல் செய்யுள் நூலை வெளியிட்டார். ச. பூபால பிள்ளை வித்துவான் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். ச. பூபால பிள்ளை எழுதிய சீமந்தனி புராணம் சோமவார விரதத்தின் மேன்மையைக் கூறுவது. சூதமுனி கூறிய கதையை அடிப்படையாகக் கொண்டு விரித்து எழுதினார். இதில் 780 செய்யுள்கள் உள்ளன. இவர் எழுதிய பத்து சமய நூல்களைத் தொகுத்து திருமயிலை செ.வெ. ஜம்புலிங்கம் பிள்ளை 1923-ல் வெளியிட்டார். சிற்றிலக்கிய வகைகளான அகவல், அந்தாதி, எண்செய்யுள், கலிவெண்பா, தோத்திரம், புராணம், மாலை, மான்மியம் ஆகியவற்றில் பாடல் பாடினார். விக்கினேசுவரர், விநாயகர் மேல் பதிகங்கள் பல பாடினார்.

ச. பூபால பிள்ளையின் மொழி ஆய்வுக் கட்டுரைகள் பல மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் "செந்தமிழ்" இதழிலும் ஈழத்து இதழிலும் பிரசுரமானது. முப்பொருள் ஆராய்ச்சிக் கட்டுரை(1913), தமிழ் வரலாறு ஆகிய நூல்களையும் எழுதினார்.

மறைவு

ச. பூபால பிள்ளை 1921-ல் காலமானார்.

நூல்கள் பட்டியல்

  • அகவல் - அரசடி விநாயகர் அகவல் (1920)
  • அந்தாதி - மகாமாரியம்மன் அந்தாதி
  • எண்செய்யுள் - நல்லிசை நாற்பது
  • கலிவெண்பா - கணேசர் கலிவெண்பா( 1921)
  • தோத்திரம் - சிவதோத்திரம்
  • புராணம் - சீமந்தினி புராணம் (1884)
  • மாலை - சிவமாலை
  • மான்மியம் - விநாயக மான்மியம் (1905)
பதிகம்
  • கதிரேசன் பதிகம்
  • சித்திவிக்கினேசுவரர் பதிகம்
  • செல்வ விநாயகர் பதிகம்
  • திருமுருகர் பதிகம் (1882)
  • புளியநகர் ஆனைப்பந்தி விக்கினேசுவரர் பதிகம் (1905)
பிற
  • முப்பொருள் ஆராய்ச்சிக் கட்டுரை (1913)
  • தமிழ் வரலாறு

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Mar-2023, 06:48:51 IST