under review

தனிமகனார்

From Tamil Wiki
Revision as of 03:44, 30 August 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)

தனிமகனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

தனிமகனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். மாற்றரசனின் பகைக்கு அஞ்சி மக்கள் கைவிட்ட ஊரை காத்து நிற்கும் தனிமகன் போல என்று இவர் பயன்படுத்திய சிறப்பான உவமையையே பெயராக பெற்றுள்ளார். பிற தகவல்கள் ஏதும் தெரியவில்லை.

இலக்கிய வாழ்க்கை

தனிமகனார் பாடிய பாடல் நற்றிணையில் 153-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. தலைவனை பிரிந்த தலைவி ஆற்ற மாட்டாத தன் பிரிவுத் துயரைப் பாடுவதாக பாலைத் திணையில் அமைந்துள்ள பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • மேகம் கடல் நீரை குடித்து இருண்டு வந்து மழை பொழியும். பின்னர் தென்திசை நோக்கி நகர்ந்து செல்லும். மழைப்பொழிவும் காலநிலையும் அக்கால மக்களால் இவ்வாறு உணரப்பட்டுள்ளது.
  • மாற்றரசனின் பகைக்கு அஞ்சி தோல்வியடைந்த நாட்டின் மக்கள் தாம் வாழும் ஊரை கைவிட்டு வேறிடம் தேடி செல்வர். அப்படி செல்லும் வயது மூத்த தனியர் ஒருவர் அவ்வூரிலேயே ஊர் காவலனாக தங்கி விடுவார்.
  • உவமை: மழைபொழியும் இருண்ட மேகங்களில் ஏற்படும் இடியோசையும் மின்னல் வெளிச்சமும் கருமகரர்(கருமான்) செம்பை உருக்கி பானை செய்வதற்கு ஒப்பாக இருந்தது என்றும் தலைவனை பிரிந்த தலைவி கைவிடப்பட்ட ஊரில் தங்கிய தனிமகன் போல இருந்தாள் என்றும் உவமிக்கப்பட்டுள்ளது.

பாடல் நடை

நற்றிணை - 153

  • திணை: பாலை
  • கூற்று: பிரிவிடை மெலிந்த தலைவி சொல்லியது

குண கடல் முகந்து, குடக்கு ஏர்பு இருளி,
மண் திணி ஞாலம் விளங்க, கம்மியர்
செம்பு சொரி பானையின் மின்னி, எவ் வாயும்
தன் தொழில் வாய்த்த இன் குரல் எழிலி
தென்புல மருங்கில் சென்று அற்றாங்கு,
நெஞ்சம் அவர்வயின் சென்றென, ஈண்டு ஒழிந்து,
உண்டல் அளித்து என் உடம்பே-விறல் போர்
வெஞ் சின வேந்தன் பகை அலைக் கலங்கி,
வாழ்வோர் போகிய பேர் ஊர்ப்
பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Aug-2025, 21:10:12 IST