under review

கடியலூர் உருத்திரங்கண்ணனார்

From Tamil Wiki
Revision as of 05:29, 25 June 2022 by Madhusaml (talk | contribs) (category & stage updated)

கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்ககால  புலவர்களுள் ஒருவர். பத்துப்பாட்டு தொகுதியில் உள்ள இரு நூல்களை இவர் எழுதியுள்ளார்.

பெயர்க் காரணம்

கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் பெயரிலுள்ள கடியலூரை அவரது ஊர் பெயராகக் கொள்ளலாம். தமிழ்நாடு  வேலூர்   மாவட்டத்திலுள்ள சோளிங்கர் என்னும் ஊருக்கு மற்றொரு பெயர் திருக்கடிகை. இந்தக் கடிகையைக்  கடியலூர் எனக் கொள்வது பொருத்தமாக உள்ளது. தொல்காப்பிய மரபியல் 629- ஆம் சூத்திரவுரையில் இவர் அந்தணர் என்று சொல்லப்படுகிறார்.

கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் நூல்களில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படை காஞ்சியில்  இருந்த தொண்டைமானிடம் ஆற்றுப்படுத்தும்போது முதலில்  பாலை நில வழியைக்  காட்டுகிறது. கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் மற்றொரு நூல்  பட்டினப்பாலை. இவரது பிற இரண்டு பாடல்களும் பாலைத் திணையையே சார்ந்தவை. எனவே பாலை நிலத்தில் உருத்து இருக்கும் உருத்திரத்தைப் பாடிய புலவர் என்று காட்ட கண்ணனாருக்கு உருத்திரம் என்னும் அடைமொழி தரப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு கருத்து உண்டு. ஆயினும் பெயரைக் கொண்டு நோக்கின் தமிழ்ப் படுத்தப்பட்ட ருத்ரக்ருஷ்ண என்ற வடமொழிப் பெயரை இவர் கொண்டிருந்தார் என்றும் இன்னொரு கருத்து உண்டு. இவர் தந்தையார் பெயர் உருத்திரன் என்றும் இவரது பெயர் கண்ணனார் என்றும் சிலர் கூறுவர்.

நூல்கள்

கடியலூர் உருத்திரங்கண்ணனார் பத்துப்பாட்டு நூல்களில்

இரண்டு பாடல்களும் எட்டுத் தொகை நூல்களில் இரண்டு பாடல்களும் இயற்றியுள்ளார். அவை;

பாடல்கள் குறிப்பு

கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய பாடல்களின் சிறு குறிப்பு;

பெரும்பாணாற்றுப்படை

இந்நூல்தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது.  இது 500 அடிகளில் அகவல்பாவால் (ஆசிரியப்பா) ஆனது. பேரியாழ் (21 நரம்புகள்) வாசிக்கும் பாணனொருவன் வறுமையால் வாடும் இன்னொரு பாணனை வெல்வேல் கிள்ளி என்ற சோழ அரசனுக்கும் நாக கன்னிகை பீலிவளை என்பவளுக்கும் பிறந்த தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்த புறத்திணை நூல். பெரும்பாண் - பெரிய பாண் எனப் பொருள்படும்.  பெரிய பாணாவது, பெரும் பண்.  பெரிய பண்ணைப் பாடுவதற்கெனத் தனி வகுப்பினராய்ச் சிலர் இருந்தனர்.  அவருள் பெரிய யாழைத் தாங்கி அதன் நரம்புகளை வலித்து அதன் இசையோடு ஒன்ற இனிது பாடுவோரே பெரும்பாணர்.  பெரும்பாணரை ஆற்றுப்படுத்தியதால் பெரும்பாணாற்றுப்படை எனப் பெயர்

பட்டினப்பாலை

கரிகாற் சோழனின் காவிரிப் பூம்பட்டினத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கும் இந்நூல் முதலில் காவிரியாற்றின் பெருமையைக் கூறுகிறது. பிறகு சோழநாட்டின் வளத்தையும், அதன்பின் காவிரிப்பூம் பட்டினத்தின் புறநகர்ப்பகுதிகள்; காவிரித்துறையின் பெருமை; நகருக்குள் இரவிலும் பகலிலும் நடக்கும் நிகழ்ச்சிகள்; வாணிகம்; கொடிகள்; வாழும் மக்கள்; செல்வச் சிறப்பு; மன்னன் கரிகாற்சோழனுடைய ஆண்மை, வீரம், கொடை, ஆட்சி இவைகளையெல்லாம் வரிசையாக எடுத்துக்  காட்டியிருக்கின்றது. பட்டினப்பாலை 301 அடிகளில் இயற்றப்பட்டுள்ளது.

அகநானூறு- பாடல் எண் - 167

தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது.


"வயங்கு மணி பொருத வகைஅமை வனப்பின்

பசுங் காழ் அல்குல் மாஅயோளொடு

வினை வனப்பு எய்திய புனை பூஞ் சேக்கை,

விண் பொரு நெடு நகர்த் தங்கி, இன்றே

இனிது உடன் கழிந்தன்றுமன்னே; நாளைப்

பொருந்தாக் கண்ணேம் புலம்பு வந்து உறுதரச்

சேக்குவம்கொல்லோ, நெஞ்சே! சாத்து எறிந்து

அதர் கூட்டுண்ணும் அணங்குடைப் பகழிக்

கொடு வில் ஆடவர் படு பகை வெரீஇ,

ஊர் எழுந்து உலறிய பீர் எழு முது பாழ்,

முருங்கை மேய்ந்த பெருங் கை யானை

வெரிந் ஓங்கு சிறு புறம் உரிஞ, ஒல்கி

இட்டிகை நெடுஞ் சுவர் விட்டம் வீழ்ந்தென,

மணிப் புறாத் துறந்த மரம் சோர் மாடத்து

எழுது அணி கடவுள் போகலின், புல்லென்று

ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன் திணைப்

பால் நாய் துள்ளிய பறைக்கட் சிற்றில்,

குயில் காழ் சிதைய மண்டி, அயில் வாய்க்

கூர் முகச் சிதலை வேய்ந்த

போர் மடி நல் இறைப் பொதியிலானே?

நச்சினார்கனியார் உரை;

பளிங்கு மணியினை யொத்த,  கூறுபாடமைந்த அழகினையுடைய, பசிய  சரத்தாலாய மேகலையை அணிந்த அல்குலையுடைய மாமை நிறத்தினளாய நம் தலைவியுடன், வானைஅளாவும் நீண்ட மாளிகையில், அழகிய வேலைப்பாடு அமைந்த புனையப்பெற்ற பூக்களையுடைய பள்ளியின்கண் தங்குதலானே, இன்றையப் போழ்து, முழுதும் இனிதாகக் கழிந்தது; வழிச் செல்லும் வாணிகச் சாத்தினைக் கொன்று அவர் பொருளைக் கொள்ளை கொண்டு உண்ணும்,  வருத்தத்தைச் செய்யும் அம்பினையும்,  வளைந்த வில்லையும் உடைய,   மறவரதுமிக்க பகையை அஞ்சி, குடிபோகப் பெற்றமையின் வளன் அற்ற, பீர்க்குப் படர்ந்த பெரிய பாழ் இடத்தில், முருங்கையினைத்  தின்ற பெரிய கையினையுடைய யானையின், முதுகினின்று உயர்ந்து பிடரி உராய்தலின், தளர்ந்து செங்கல்லாலாய நீண்ட சுவரிலுள்ள விட்டமரம் வீழந்ததாக, மணிப்புறா விட்டொழிந்த மரம் சோர்ந்த மாடத்தினையும், எழுதப்பெற்ற அழகிய கடவுள் புறத்தே போய்விட்டமையின்,  பொலி வற்று.  இடையறாது நிகழும் பலி மறக்கப்பெற்ற, மெழுகப்படாத புல்லிய திண்ணையில், ஈன்றணிமையுடைய நாய் தங்கிய பறிந்த இடத்தையுடைய சிற்றிலையும், இயற்றப்பட்ட கைம் மரங்கள் சிதையுமாறு பரவி, வேலின் முனைபோன்ற கூரிய முகத்தினையுடைய கறையான் மூடிக் கொள்ளுதலின், கூரைமடிந்த நல்ல இறப்பினையுமுடைய அம்பலத்தின் கண் ; தனிமை வந்தடையத் துயிலாத கண்களை யுடையேமாய், நாளை  தங்கி இருப்போமோ (அஃதுஇயலாதன்றே.)

குறுந்தொகை பாடல் எண் 352

பிரிவிடைத் தோழிக்குக் கிழத்தி மெலிந்து கூறியது;


"நெடு நீர் ஆம்பல் அடைப் புறத்தன்ன

கொடு மென் சிறைய கூர்உகிர்ப் பறவை

அகல்இலைப் பலவின் சாரல் முன்னி,

பகல் உறை முது மரம் புலம்பப் போகும்

சிறு புன் மாலை உண்மை

அறிவேன்-தோழி-! அவர்க் காணா ஊங்கே.

உரை

தோழி,  ஆழமாகிய நீரின் கண் வளர்ந்த ஆம்பிலினது, இலையின் புறத்தைப் போன்ற, வளைந்த மெல்லிய சிறையை யுடையனவாகிய, கூரிய நகங்களையுடைய வௌவால்கள், அகன்ற இலைகளையுடைய பலா மரங்களையுடைய மலைச்சாரலை நோக்கி, பகற்காலத்தில் தாம் உறைந்த பழைய மரம்,  தனிக்கும்படி, போகும்,  சிறிய புல்லிய மாலைக்காலம் உளதாதலை,  அத்தலைவரைக் காணாத காலத்தில், உணர்வேன்.

உசாத்துணை

  • பெரும்பாணாற்றுப்படை, தமிழ் இணையக் கல்விக் கழகம் https://www.tamilvu.org/node/154572?link_id=94346
  • பட்டினப்பாலை, தமிழ் இணையக் கல்விக் கழகம் https://www.tamilvu.org/ta/library-l1100-html-l1100ind-120598
  • அகநானூறு, தமிழ் இணையக் கல்விக் கழகம் https://www.tamilvu.org/node/154572?linkid=124610
  • குறுந்தொகை, தமிழ் இணையக் கல்விக் கழகம் https://www.tamilvu.org/slet/l1200/l1200uri.jsp?book_id=22&song_no=352



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.