108 திருப்பதி அந்தாதி
108 திருப்பதி அந்தாதி பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் அஷ்ட பிரபந்தங்களில் ஒன்று. 108 வைணவத் திருப்பதிகளை தலத்துக்கொரு பாடலாக அந்தாதியாகப் பாடிய நூல்.
பதிப்பு, வெளியீடு
108 திருப்பதி அந்தாதி கலாரத்னாகர அச்சுக்கூடத்தில் 1892-ல் பதிப்பிக்கப்பட்டது.
ஆசிரியர்
108 திருப்பதி அந்தாதி நூலை இயற்றியவர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார். அஷ்ட பிரபந்தங்களை இயற்றியவர்.
நூல் அமைப்பு
108 திருப்பதி அந்தாதி 108 வைணவ திவ்யத் தலங்களைப் போற்றும் அந்தாதி நூல். சிறப்புப் பாயிரத்தைத் தொடர்ந்து நம்மாழ்வார், உடையவர், கூரத்தாழ்வான், பராசர பட்டர் - இவர்களின் மேல் காப்புப் பாடல்களும், 108 திருப்பதிகளின் வகைகள் பற்றிய பாடலைத் தொடர்ந்து 108 வைணவத் திருப்பதிகளைப் போற்றும் பாடல்கள் உள்ளன. இறுதியில் நூற்பயனாக 2 பாடல்கள் உள்ளன.
- சோழநாடு - 40
- பாண்டி நாடு -18
- மலைநாடு-13
- நடுநாடு-2
- தொண்டைநாடு-22
- வடநாடு-12
- திருநாடு (திருவைகுண்டம், பரமபதம்)-1
என்ற எண்ணிக்கையில் வைணவத் திருத்தலங்களைப் போற்றும் பாடல்கள் திரிபு அணியில் அந்தாதியாக அமைந்தன.
பாடல் நடை
திருவரங்கம்(பெரிய கோயில்)
சீர்வந்த வுந்தித் திசைமுகனா லல்லாதென்
சோர்வந்த சொல்லிற் சுருங்குமோ?-ஆர்வம்
ஒருவரங்கக் கோயி லுகந்தவரை யாள்வான்
திருவரங்கக் கோயிற் சிறப்பு. (1)
திருத்தலைச்சங்கநாண்மதியம்
செப்புங்கா லாதவனுந் திங்களும்வா னுந்தரையும்
அப்புங்கா லுங்கனலு மாய்நின்றான் - கைப்பால்
அலைச்சங்க மேந்து மணியரங்கத் தம்மான்
தலைச்சங்க நாண்மதியத் தான். (13)
திருப்பாற்கடல்
தொழும்பாய நானல்ல சூதறிந்து கொண்டேன்
செழும்பா யலைமுத்தஞ் சிந்தி - முழங்கும்
திருப்பாற் கடலான்றாள் சேர்ந்தா ரடிசேர்ந்
திருப்பாற் கடலா மிடர். (107)
உசாத்துணை
108 திருப்பதி அந்தாதி, மதுரைத் திட்டம்
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.