under review

சுவாமி விபுலானந்தர்

From Tamil Wiki
Revision as of 22:34, 1 June 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Inserted READ ENGLISH template link to English page)

To read the article in English: Swami Vipulanandar. ‎

சுவாமி விபுலானந்தர்
விபுலானந்தர்

சுவாமி விபுலானந்தர் (மார்ச் 27, 1892 – ஜுலை 19, 1947) இசைத்தமிழறிஞர், பேராசிரியர், துறவி. இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை என பல துறைகளில் இயங்கியவர். இசைத்தமிழ் ஆய்வு, இலக்கிய ஆய்வு, நாடகத்தமிழ் ஆய்வு, மொழியியல் என ஆய்வுப்பணிகளை விரித்துக் கொண்டவர். யாழ் நூல் என்ற இசைவரலாற்று நூலும், மதங்க சூளாமணி என்ற நாடக ஆய்வு நூலும் இவருடைய முக்கியமான படைப்புகள். முதன்மையாக தமிழிசை வரலாற்றில் மூலநூல்களில் ஒன்று என கருதப்படும் யாழ்நூல் இயற்றியவர் என அறியப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

விபுலானந்தர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் காரைதீவு என்னும் ஊரில் மார்ச் 27, 1892 அன்று சாமித்தம்பி, கண்ணம்மா தம்பதிகளுக்குப் பிறந்தார். மயில்வாகனன் என்பது இயற்பெயர். 1921-ல் ராமகிருஷ்ண மடத்தில் இணைந்து பிரபோத சைதன்யர் ஆக பெயர் மாற்றம் பெற்றார். 1921-ல் விபுலானந்தர் என்று பெயர் பெற்று துறவறம் மேற்கொண்டார்.

திண்ணைப் பள்ளியில் குஞ்சித்தம்பி என்பவரிடம் எழுத்தறிவுப்பு பெற்றார். ஆங்கிலக் கல்வி கற்கையில் கூடவே பருத்தித்துறை காரைத்தீவு பிள்ளையார் கோயில் பூசகராக இருந்த வைத்தியநாத தேசிகரிடம் தமிழ் இலக்கணமும் அடிப்படை இலக்கியங்களும் பயின்றார்.

விபுலானந்தர், துறவுக்கு முன் மாணவராக

ஆரம்பக் கல்வி கல்முனை மெதடிஸ்ட் ஆங்கிலப் பாடசாலையிலும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியிலும் பயின்றார். அங்கே பிரான்ஸ் நாட்டவரான ரெவெ போனேல் என்பவர் விபுலானந்தருக்கு கணிதத்தில் ஆர்வத்தை உருவாக்கினார். தன் 16-வது வயதில் கேம்பிரிட்ஜ் சீனியர் (Cambridge Senior) சோதனையில் வென்ற பின்னர் புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராகச் சிலகாலம் பணி புரிந்தார். கொழும்பில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து அங்கு விரிவுரையாளராயிருந்த தென்கோவை கந்தையா பிள்ளையிடம் பண்டையத் தமிழ் இலக்கியத்தைக் கற்றார். 1915-ல் கொழும்பு அரசினர் தொழில்நுட்பக்கல்லூரியில் சேர்ந்து விஞ்ஞானம் பயின்று 1916-ல் அறிவியலில் பட்டயத்தையும் பெற்றார். மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்வில் பங்கேற்று பண்டிதர் பட்டத்தையும் பெற்றார். இலங்கையிலிருந்து இப்பட்டத்தை முதன்முதல் பெற்றவர் சுவாமி விபுலானந்தரே. 1920-ல் லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய BSc தேர்வில் வென்றார்.

அடிகளார் படிவமலர்

தனிவாழ்க்கை

  • 1912-ல் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் பயிற்றப்பட்ட ஆசிரியர் என்ற சான்றிதழுடன் மீண்டும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார்.
  • கொழும்பு அரசினர் தொழிநுட்பக் கல்லூரியில் இரசாயன உதவி விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
  • 1917-ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரிக்கு விஞ்ஞான ஆசிரியராகப் பணியாற்றினார்.
  • வழக்கறிஞர் திருவிளங்கத்தாரின் வேண்டுகோளுக்கிணங்கி மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
  • திருக்கோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில், 1925-ஆம் ஆண்டிலிருந்து முகாமையாளராகப் பணியாற்றினார்
  • 1928-ல் அதிபர் பதவியையும் ஏற்றுக் கொண்டார்.
  • 1926-1930 வரை திருகோணமலையில் இருந்தபடியே யாழ்ப்பாணம் இராமகிருஷ்ண மிஷன் வைத்தீசுவர வித்தியாலயத்தின் முகாமையாளராகவும் பணியாற்றினார்.
ஆசிரியப்பணி
  • அர்ச்சம் பந்திராசரியர் கல்லூரி (1919)
  • மானிப்பாய் இந்துக் கல்லூரி (1920)
  • அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (1931-1933)
விபுலானந்தர்
துறவறம்

1916-ல் யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் தன் வீட்டில் விவேகானந்த சபையை கலைப்புலவர் நவரத்தினம், செ.மயில்வாகனம், சி.முத்துக்குமாரு ஆகியோரின் உதவியுடன் தொடங்கினார். 1917-ல் மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடம் தலைவர் சர்வானந்தர் இலங்கை வந்தபோது இந்த அமைப்பு அவருக்கான வரவேற்புப் பணிகளைச் செய்தது. இச்சபையின் தூண்டுதலால் ராமகிருஷ்ணமடம் யாழ்ப்பாணத்தில் நலிவுற்ற நிலையில் இருந்த வைத்தீஸ்வர வித்யாலயத்தை ஏற்றுக்கொண்டு நடத்தலாயிற்று. மானிபாயில் பணியாற்றுகையில் யோகசுவாமிகள் என்னும் துறவியிடமிருந்து சில யோகப்பயிற்சிகளைப் பெற்றார்.

ஆசிரியப் பதவியைத் துறந்து 1922-ல் ராமகிருஷ்ண மிஷனில் இணைந்தார். சென்னையில் மயிலாப்பூர் மடத்தில் சுவாமி சர்வானந்தரால் பிரபோத சைதன்யர் என்னும் பெயருடன் பிரமச்சரிய தீட்சையும், சந்நியாச தீட்சையும் வழங்கப்பட்டது. இரண்டு வருடங்கள் அங்கு பயின்றார். 1924-ஆம் ஆண்டு சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தில் விவேகானந்தரின் மாணவர் சுவாமி சிவானந்தரிடம் இருந்து துறவு பெற்றுக்கொண்டார். சிவானந்தரால் சுவாமி விபுலானந்தர் என்ற துறவறப்பெயர் வழங்கப்பட்டது. அதன் பின்னர், அவர் இலங்கை திரும்பி, இராமகிருஷ்ண மிஷன் மேற்கொள்ளும் கல்விப் பணிகளை ஒருங்கமைத்தார்.ஆரம்பக்காலத்தில் சைவசித்தாந்தியாக இருந்தவர் பிற்காலத்தில் முழு வேதாந்தி ஆனார். தான் பயிற்றுவித்த வகுப்புகளில் அனைவருக்கும் ஒரே உணவு, ஒரே இருக்கை என்பதை நடைமுறையில் கொண்டுவந்தார்.

விபுலானந்தர் சிதம்பரம்

1927-ல் இலங்கை வந்த காந்தியை வரவேற்கும் யாழ்ப்பாண இளைஞர் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்தார். 1931-ல் அண்ணாமலைப் பல்கலை தொடங்கப்பட்டது ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் அழைப்புக்கு இணங்க சிதம்பரம் சென்று அப்பதவியை ஏற்றார். 1933-ஆம் ஆண்டில் ராமகிருஷ்ண நிறுவனங்களை பேணும்பொருட்டு மீண்டும் இலங்கைக்கே திரும்பினார். 1937-ஆம் ஆண்டு திருக்கைலாய பயணம் சென்று வந்தார். 1939-ஆம் ஆண்டு ராமகிருஷ்ணமடத்தின் பிரபுத்த பாரதம் ஆங்கில இதழின் ஆசிரியராக இமையமலை அடிவாரத்தில் இருந்த அல்மோராவில் மாயாவதி ஆசிரமத்திற்குச் சென்றார். அங்கே யாழ்நூல் பணியை தொடங்கினார். ( விபுலானந்தரின் அணுக்க உதவியாளராக இருந்த ச.அம்பிகைபாகன் கட்டுரையை ஒட்டி எழுதப்பட்டது. அடிகளார் படிவமலர் இணையநூலகம்[1])

இதழியல்

விபுலானந்தர்

  • வேதாந்த கேசரி (ஆங்கிலம்),
  • பிரபுத்த பாரத (ஆங்கிலம்)
  • இராமகிருஷ்ண விஜயம் (தமிழ்)

போன்ற பத்திரிகைகளில் பொறுப்பாசிரியராக இருந்தார்.

இலக்கியவாழ்க்கை

விபுலானந்தர் நினைவில்லம்

இராமகிருஷ்ண மிஷன் நடத்திய ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் என்ற தமிழ் இதழுக்கும்,வேதாந்த கேசரி (Vedanta Kesari) என்ற ஆங்கில இதழுக்கும் ஆசிரியராக இருந்து கட்டுரைகளை எழுதினார். மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் நடத்திய பண்டிதர் தேர்வின் தேர்வுத்தலைவராக நியமிக்கப்பட்டார். மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடான செந்தமிழ் எனும் இதழில் இலக்கியக் கட்டுரைகளை எழுதினார். ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அடிப்படையாகக் கொண்டு பல திறனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். இக்கட்டுரைகள், 'மதங்க சூளாமணி' என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

ஆங்கிலவாணி என்னும் தலைப்பில் உள்ள தொகுப்பில் விபுலானந்தரின் ஆங்கில மொழிபெயர்ப்புக் கவிதைகள் உள்ளன. வால்டர் ஸ்காட் (நீர் நிலைக் கன்னி), டென்னிசன் (இரங்கற்பா), மில்டன், வேர்ட்ஸ்ஒ ர்த், கீட்ஸ் ஆகியோரின் கவிதைகள் அதில் முக்கியமானவை.

கலைச்சொல்லாக்கம்

சுவாமி விபுலானந்தரின் தலைமையில் கலைச் சொல்லாக்க கழகம் 1934-ல் அமைக்கப்பட்டு 'கலைச் சொற்கள்' என்னும் அகராதி நூல் 1938-ல் சென்னைத் தமிழ்ச்சங்கத்தினால் வெளியிடப்பட்டது. தமிழில் கலைச்சொற்களை உருவாக்க வேண்டிய அவசியத்தையும் ஒரே பொருளுடன் தொடர்புடைய ஒவ்வோர் ஆங்கிலச் சொற்களுக்கும் தமிழில் தனிச் சொற்களை உருவாக்க வேண்டும் என்பதையும் கவனப்படுத்தினார். (Mirror = கண்ணாடி, Glass = படிகம்) மொழிபெயர்ப்பு பற்றிய அவரது கருத்து நெகிழ்ச்சியானது. மூலத்தின் பொருளிலிருந்து விலகாமல் இருப்பது முக்கியம் என்பது அவரது மொழிபெயர்ப்பியல் கருத்தாக்கம்.

சுவாமி விபுலானந்தர் தலைமையேற்று நடத்திய தமிழ்க் கலைச்சொல்லாக்க மாநாடு 1936 செப்டெம்பர் 20 ஞாயிற்றுக்கிழமை சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. சென்னைப் பல்கலைக்கழகம், இலங்கை அரசாங்கம், தென்னிந்திய ஆசிரியர் சங்கம், தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் ஆகியன அறிஞர்களை இம்மாநாட்டுக்கு அனுப்பியிருந்தன. சுவாமி விபுலானந்தர் கலைசொல்லாக்கக் குழுவின் தலைவராகவும், வேதியியல் கலைச்சொல் நூற் குழுவின் தலைவராகவும் இருந்து செயற்பட்டார். 1936 செப்டம்பர் 27 அன்று சென்னை மாகாணத் தமிழர் மாநாடு நடைபெற்ற போது, அவருடைய கலைச்சொல்லாக்க முயற்சிகளைப் பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

யாழ் நூல்

இசை ஆராய்ச்சி

சுவாமி விபுலானந்தர் 1931-ல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக ஆனபோது தொல்தமிழர் இசை பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1934-ல் இராமகிருஷ்ண மிஷன் இமயமலைப் பகுதியில் உள்ள அல்மோரா(Almorah) என்ற இடத்தில் மாயாவதி ஆசிரமத்தில் இருந்த போது 'யாழ் நூல்' என்னும் ஆய்வுநூலை எழுத தொடங்கினார். பின்னர் இலங்கையில் பணியாற்றுகையில் எழுதி முடித்தார். (பார்க்க யாழ்நூல்)

விருதுகள்

  • ஈழத்து மக்களுக்கு இவர் ஆற்றிய சேவையினைப் பாராட்டி இலங்கையரசு தேசிய வீரர் வரிசையில் ஒருவராக இவரைச் சேர்த்துள்ளது.
  • இலங்கை பாடசாலைகளில் கொண்டாடப்படும் அகில இலங்கை தமிழ் மொழி தினம் இவரது மறைவு நாளான அன்றே கொண்டாடப்படுகின்றது.
விபுலானந்தர் நூல்

மறைவு

யாழ்நூல் அரங்கேற்றத்துக்கு பின்னர் உடல் பாதிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பினார். ஜுலை 19, 1947-ல் காலமானார். அவரது உடல், அவர் உருவாக்கிய மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தின் முன்னாலுள்ள மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

விபுலானந்தர் சமாதி

விபுலானந்தர் சிலை

விபுலானந்தர் பிறந்த காரைதீவில் அவர் மறைந்து 22 வருடங்களின் பின்னர் பிரதான வீதியிலுள்ள விபுலாநந்த பொது நூலகத்தின் முன்னால் அவருடைய சிலை டாக்டர் மா.பரசுராமன் தலைமையில் நிறுவப்பட்டது. இந்தியாவிலிருந்து வருகை தந்த குன்றக்குடி அடிகளாரால் அச்சிலை அக்டோபர் 08, 1969-ல் திறந்து வைக்கப்பட்டது. அப்போது எழுத்தாளர் மா.சற்குணம் எம்.ஏ. தொகுத்த 'அடிகளார் படிவமலர்' எனும் சிலை திறப்பு விழாமலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. அச்சிலை 1990-ல் இனவன்செயலின் போது உடைத்தெறியப்பட்டது.

விபுலானந்தர் சிலை

1999-ல் விபுலானந்தர் பிறந்த வீட்டிற்கு அருகில், அதாவது மணிமண்டபச் சூழலில் மற்றுமொரு சிலை வெ.ஜெயநாதன் தலைமையில் நிர்மாணிக்கப்பட்டது. அதனை இராமகிருஷ்ண மிஷன் இலங்கைக்கான தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஆத்மானந்த மஹராஜ் ஜூன் 26, 1999-ல் திறந்து வைத்தார். ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா தொகுத்த 'அடிகளார் நினைவாலய மலர்' எனும் சிலை திறப்புவிழா மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. இவ்விரு சிலைகளையும் சிற்பி மட்டக்களப்பு, புல்லுமலையைச் சேர்ந்த நல்லரெத்தினம் வடித்திருந்தார்.

2016 சித்ரா பௌர்ணமியன்று விபுலானந்தர் மறைந்து 69 வருடங்களின் பின்னர் காரைதீவின் பிரதான முச்சந்தியில், விபுலாநந்த சதுக்கத்தில் திருவுருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது.அச்சிலையைஇந்துமத அலுவல்கள், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் திறந்து வைத்தார்[2].

சுவாமி விபுலானந்தர் காலமும் கருத்தும்

நூல்கள் பட்டியல்

இசை
  • வங்கியம் (1942)
  • சங்கீத பாரிஜாதம் (1942)
  • பாரிஜாத வீணை (1944)
  • யாழ்நூல்
பிற
  • மதங்க சூளாமணி
  • சுவாமி விபுலானந்தரின் ஆக்கங்கள் (127 கட்டுரைகளின் தொகுப்பு, 3 பாகங்கள், 1997)
  • விபுலானந்தர் இலக்கியம் (தொகுப்பு)
அஞ்சல்தலை
கட்டுரைகள்
  • பயனற்ற கல்வி (குமரன் 1934)
  • பயனுள்ள கல்வி (குமரன் 1934)
  • புதிய கல்வித் திட்டத்திற்கு ஆதரவு (1938)
  • லகர எழுத்து (தமிழ்ப் பொழில்)
  • சோழ மண்டலமும் ஈழ மண்டலமும் (கலைமகள்)
  • கலைச்சொல்லாக்கம் (பச்சையப்பன் கல்லூரி மலர்)
  • யவனபுரத்துக் கலைச் செல்வம்
  • ஐயமும் அழகும்
  • இலக்கியச் சுவை
சிறு பிரபந்தங்கள்
  • கணேச தோத்திர பதிகம்
  • மாணிக்க பிள்ளையார் இரட்டைமணி மாலை
  • சுப்பிரமணிய இரட்டை மணி மாலை
  • குமரவேள் நவமணிமாலை
பக்திநூல்கள்
  • நடராஜ வடிவம்
  • தில்லைத் திருநடனம்
விபுலம், மலர்
ஆங்கிலக் கட்டுரைகள்
  • The Phonetics of Tamil
  • The Gift of Tongues
  • An Essay on the Study of Language
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலவாணி (கவிதைகள்)
  • சாரல் மழை (ஷேக்ஸ்பியரின் Tempest)

விபுலானந்தர் பற்றிய ஆக்கங்கள்

  • அடிகளார் படிவமலர்[3] - ம. சற்குணம்
  • விபுலானந்தர் இமயம் - மட்டக்களப்புத் தமிழ் சங்கம்
  • விபுலானந்தர் காவியம் - சுப்பிரமணியம் சிவலிங்கம்
  • சுவாமி விபுலாநந்தர் காலமும் கருத்தும் - சி. மௌனகுரு[4]
  • சுவாமி விபுலாநந்தரின் சிந்தனை நெறிகள்[5] - கா. சிவத்தம்பி
  • யாழ்ப்பாண சமூக உருவாக்கமும் விபுலானந்தரும்[6] - அ. கௌரிகாந்தன்
  • சுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்படம்[7]
  • விபுலம், விபுலானந்த அடிகள் மலர்[8]
  • சுவாமி விபுலானந்தரின் சமயச்சிந்தனைகள் கலாநிதி அருணாச்சலம்[9]
விபுலானந்தர் மலர்

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page